Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

Monday, February 14, 2011

காதல் காதல் காதல்- காதல் போயின் சாதல் சாதல் சாதல்

மனிதனின் அடிப்படை தேவைகள் மூன்று, அவை உணவு, உடை, உறையுள் என்று முன்னர் வந்த அறிஞர்கள் சொல்லிச் சென்றனர். அவற்றுடன் கல்வி, சுகாதாரம் என்று இன்னும் இரண்டை சேர்ந்துக் கொண்டனர் பின்னர் வந்த புத்திசாலிகள். ஆனால் மனிதனின் அடிப்படை தேவை ஒன்றே ஒன்று, அதுதான் காதல் என்று சொல்லி நிற்கின்றது பெப்ரவரி 14 ஆம் திகதி சர்வதேச காதலர் தினம். உலகில் முதன்முதல் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஆதாம் என்கிற ஆணும், ஏவாள் என்கிற பெண்ணும் என்று பைபிள் சொல்கின்றது.


மனித குலம் தோன்றிய அன்றே தோன்றி விட்டது காதல். இதனால்தான் ஆதி மனிதன் காதலுக்கு பின்னே அடுத்த காதலும் இதுதான், ஆதாம், ஏவாள் ஜோடிக்கு பின்னே அடுத்த ஜோடியும் இதுதான் என்று கவிஞன் கண்ணதாசன். தமிழ் இலக்கிய வரலாற்றின் மிகவும் பழைமையான காலம் சங்க காலம். மனிதனின் இயற்கை உணர்வுகள் இரண்டு, ஒன்று காதல்,இன்னொன்று வீரம் என்று நம்பப்பட்ட காலம் இது. காதல் உள்ளம் சார்ந்த உணர்வு என்றும் வீரம் உடல் சார்ந்த உணர்வு என்றும் விசுவாசிக்கப்பட்ட காலம் இது. இதனால்தான் இக்காலம் இயற்கை நெறிக் காலம் என்று அழைக்கப்பட்டது. காதல்தான் ஒழுக்கம் என்று தமிழன் வாழ்ந்த காலம் இது. இதனால் இக்காலம் காதல் ஒழுக்கக் காலம் என்று பெயர் பெற்றது. கண்டது காட்சி, கொண்டது கோலம் என்று தமிழன் இக்காலத்தில் வாழ்ந்தான் என்பார்கள்.


இக்கால கட்டத்தில் காதலுக்கு ஒழுக்கம் வகுத்தான் தமிழன். புணர்தல், பிரிதல் , இருத்தல், இரங்கல், ஊடல் என்பன அவை. தமிழன் வாழ்ந்த இடங்களின் இயல்புக்கு ஏற்ப இந்த ஒழுக்கங்களும் அந்தந்த இடங்களுக்கு உரித்தாகின. குறிஞ்சி என்று சொல்லப்படுகின்ற மலையும், மலை சார்ந்த இடத்துக்கு புணர்தலும், பாலை என்று சொல்லப்படுகின்ற வறண்ட இடத்துக்குப் பிரிதலும், முல்லை என்று சொல்லப்படுகின்ற காடும், காடு சார்ந்த இடத்துக்கு இருத்தலும், நெய்தல் என்று சொல்லப்படுகின்ற கடலும், கடல் சார்ந்த இடத்துக்கு இரங்கலும், மருதம் என்று சொல்லப்படுகின்ற வயலும், வயலும் வயல் சார்ந்த இடத்துக்கு ஊடலும் உரித்தான ஒழுக்கங்கள் ஆகின.


புணர்தல் என்பது கூடுதல். பிரிதல் என்பது விட்டு நீங்குதல். இருத்தல் என்பது காத்திருத்தல். இரங்கல் என்பது உருகுதல். ஊடல் என்பது பொய்யாக கோபித்தல். இவை ஐந்திணை ஒழுக்கங்கள் அல்லது காதல் ஒழுக்கங்கள் என்று பெயர் பெற்றன. காதல் ஒழுக்கங்களுக்கு என்று ஒவ்வொரு கடவுளர்கள் விளங்கினர். புணர்தலுக்கு முருகனும், பிரிதலுக்கு கொற்றவையும், இருத்தலுக்கு திருமாலும், இரங்கலுக்கு வர்ணனும், ஊடலுக்கு இந்திரனும் கடவுளர்கள் ஆனார்கள். இதனால்தான் வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே என்று அருண கிரி நாதர் பிற்காலத்தில் முருகனைப் பாடினார். சங்க காலத்தில் கவிஞர்களால் பெரிதும் பாடப்பட்டவை காதலும், வீரமும்தான்.


இக்கால காதல் பாடல்கள் அகநானூறு என்கிற பெயரில் தொகுத்து வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நிலங்களுக்கும் உரிய ஒழுக்கங்களை இக்கால காதல் பாடல்கள் பிரதிபலித்தன. காதல் முன்வினைத் தொடர்பு என்று சங்க காலத்தில் நம்பப்பட்டது. இதனால்தான் கால நேரம் பாராமல் , காரணம் இல்லாமல் காதல் வருகின்றது என்கிற கருத்தில் அன்று முதல் இன்று வரை நிலைபெற்று நிற்கின்றது. Love Has No Reason And Season என்கிற சேக்ஸ்பியரின் வரிகளையும் நாம் இந்த இடத்தில் நினைவில் கொள்ளலாம். ஒவ்வொரு மனிதர்களுக்கும் எந்தவொரு உறவும் மூன்று விதமாக வரலாம். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, நண்பர் வழி உறவு என்பனவே அவை. இந்த மூன்று வழி உறவுகளுக்கும் அப்பால் பட்ட நிலையில் வருவது காதல். தெய்வ சித்தம் அல்லது முன் வினைத் தொடர்புதான் காதல்.


வானத்தில் இருந்து பெய்கின்ற மழைக்கும், செம்மை நிறம் உடைய மண்ணுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் அம்மழை செம்மணலில் வந்து பட்ட கணத்திலேயே மழைநீர் சிவப்பு நிறத்தை பெற்று விடுகின்றது. இது போல தான் காதல் என்று நம்பப்பட்டது. செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பது சங்க காலப் பாடல்களில் ஒன்று. தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்துக்கு அடுத்த காலம் சங்கம் மருவிய காலம். யுத்த அழிவுகளால் மனம் உடைந்து போன மனிதர்களின் அறம், நிலையாமைக் கொள்கை போன்ற கருத்துக் கோட்பாடுகளுடன் காதல் இக்கால கட்டத்தில் போட்டி போட வேண்டி இருந்தது.


இருப்பினும் காதல் கடவுளாக மன்மதன் இக்கால இலக்கியங்களில் உலா வந்தான். காதலுக்கு பண்டிகை எடுக்கப்பட்டது. இது வசந்த கால பண்டிகை அல்லது காமன் விழா என்று அழைக்கப்பட்டது. கோவலன் - மாதவி சந்திப்பு முதன் முதல் காமன் பண்டிகை ஒன்றின்போது இடம்பெற்றது என்று சிலப்பதிகாரம் சொல்கின்றது. ஈதல் அறம், தீவினை விட்டீட்டல் பொருள், காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம், பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே வீடு என்கிற புருடார்த்தக் கொள்கை கருப் பெற்றது இக்கால கட்டத்தில்தான். சங்கம் மருவிய காலத்துக்கு அடுத்த காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலம்...பக்தி இலக்கிய காலம்.


பக்தி இயக்கங்கள் மலர்ந்த காலம் இது. காதல் சிற்றின்பம் சார்ந்தது என்றும் பக்தி பேரின்பம் சார்ந்தது என்றும் இக்காலத்தில் நம்பப்பட்டது. சங்க காலத்தில் சிற்றின்ப இலக்கியங்கள் தோன்றின. பல்லவர் காலத்தில் சிற்றின்ப முலாம் பூசிய பேரின்ப இலக்கியங்கள் தோன்றின. சிற்றின்ப முலாம் பூசி பேரின்பத்துக்கு இட்டுச் செல்லும் பாணி புலவர்களால் முன்னெடுக்கப்பட்டது. கடவுளை காதலனாக, நாயகனாக கண்டு பாடிய காலம் இது. அப்பர் சுவாமிகளின் ஒரு தேவாரத்தில் இதை அனுபவிக்க முடியும்.


முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடந்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே அவனின் பெயரை கேட்டாள், அவனின் அழகை கேட்டாள், அவனின் ஊரைக் கேட்டாள், இவ்வளவோடு அவன் மேல் பைத்தியம் ஆனாள். அம்மா-அப்பா ஆகியோரை மறந்தாள், ஒழுக்கத்தை மறந்தாள், தன்னை மறந்தாள், தனது பெயரை மறந்தாள், தலைவனோடு இணைந்தாள் என்பது இப்பாடலின் அர்த்தம். ஆண்டாள் இக்கால பெண்பால் புலவர். இவர் திருமாலை காதலனாக உருவகித்துப் பாடினார். பெற்றோர் சேர்த்து வைக்கா விட்டால் காதலன் கண்ணனுடன் களவாக ஓடிப் போய் விடுவார் என்கிறார்.


கண்ணனைக் கனவு காண்கின்றார். கடி மணம் செய்வது போன்ற கனவுகள். காதலன் கண்ணன் இப்பிறப்புக்கு மட்டும் அல்ல ஏழு பிறப்புக்கும் காவலன்.. காதலன் என்கிறார். இம்மைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் வித்தாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி என்பது அந்தப் பாடல். கண்ணனின் முத்தம் எப்படி இருக்கும் என்று கேட்கின்றார். கண்ணனின் வாயில் இருக்கும் சங்கிடம் வினவுகின்றார். அவரின் முத்தம் கர்ப்பூர வாசமா?, தாமரைப் பூ வாசமா? இனிக்குமா?என்று கேட்கின்றார். கர்ப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ திருப்பவள செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ என்பது அந்தப் பாடல். இவரது திருப்பாவை பாடல்கள் முழுவதும் காதல் சுவை சொட்டுகின்ற பக்திப் பாடல்கள்தான்.


மாணிக்கவாசகர் அவரை பெண்ணாகவும், கடவுளை நாயகனாகவும் உருவகித்துப் பாடியவைதான் திருவெம்பாவைப் பாடல்கள்.சிவபெருமானின் அன்பர் அல்லாதவர்களின் தோள்களோடு தலைவியின் மார்புகள் சேராது என்று சொல்லும் பாடல்கள் அழகானவை. என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க என்பது அந்த வரி. தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்து வந்தது சோழர் காலம். இது காப்பிய இலக்கியங்களுக்கு உரிய காலம். காப்பியங்களுக்குள் காதல் உள்வாங்கப்பட்டது. கடவுள் மனிதனாக பிறந்து, காதலித்து, திருமணம் செய்து வாழ்ந்த கதையை கூறுகின்றது கம்பரின் இராமாயணம். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், இருவரும் மாறிப் புக்கினர் இதயம் என்று இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்ட மாத்திரத்திலேயே காதல் கொண்டமையை சொல்லோவியம் ஆக்கினான் கம்பன்.


அராபிய மொழியை காதல் மொழி என்பார்கள். மனித நாகரிகம் தோற்றம் பெற்றபோது தொன்றிய மொழிகளில் இதுவும் ஒன்று. அராபியர்கள் காதல் என்பது ஐந்து அம்சங்களைக் கொண்டது என்று நம்பினார்கள். ஈர்ப்பு, எதிர்ப்பால் உணர்வு, விருப்பம், செக்ஸ், மரணம் என்பனவே அந்த ஐந்தும். பண்டைய கிரேக்கர்களின் காதல் தெய்வம் வீனஸ். அழகுக்கும் இவள்தான் தேவதை. கடல் நுரையில் இருந்து தோற்றம் பெற்றவள் என்பதால் அப்ரோடைட்டி என்றும் அழைக்கப்பட்டாள்.


லைலா- மஜ்னு, அம்பிகாவதி - அமராவதி, ரோமியோ- ஜூலியட், சார்ஜகான-மும்தாஸ், சலீம் -அனார்க்கலி போன்ற காவிய காதலர்கள் பல் நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றும் எம் மத்தியில் அமரர்களாக வாழ்கின்றார்கள். காதல் சின்னமாக தாஜ் மகால் மதிக்கப்படுகின்றது. ஈராக்கின் பபிலோன் நகரில் அமைக்கப்பட்டு இருக்கின்றது தொங்கும் பூங்கா. உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. அரச்ன் ஒருவன் அவனின் அன்பு மனைவிக்காக இதை கட்டி இருந்தான் . அவனது மனைவி மலைப் பிரதேசத்தில் வாழ்ந்தவள். பிறந்த வீட்டை நினைத்து உருகிக் கொண்டு இருந்தாள். எனவே மனைவியின் கவலையைப் போக்க மலை ஒன்றை போன்ற பாணியில் இத்தொங்கும் பூங்காவை அரசன் அமைத்தான். காதல் உலகப் பொதுமையானது. அழிவு இல்லாதது. மானுடத்தின் சின்னமாக இருப்பது.