வவுனியா மருத்துவமனையில் அவயவங்களை இழந்த 20 ஆயிரம் மக்கள் உள்ளதாக இலண்டனிலுள்ள "சனல் 4 " செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது:
"சிரச" தொலைக்காட்சியின் ஒலிவாங்கியை வீசி எறிந்த அமைச்சர் மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2009]

போர்க்களத்தில் நின்று செய்திகளை சேகரித்து வெளியிட்ட ஊடகவியலாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா "சிரச' தொலைக்காட்சி ஊடகத்தின் ஒலி வாங்கியை வீசி எறிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் பல அமைச்சர்கள், முப்படைகளின் பேச்சாளர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே இச்சம்பம் நடைபெற்றுள்ளது.

இந்த நிழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற முற்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டை நேசிக்கும் ஒழுக்கமான ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் உள்நாட்டில் இருந்துகொண்டு சர்வதேசத்துடன் இணைந்து, வடக்கின் இராணுவ நடவடிக்கைகளை இழிவுபடுத்தி நாட்டுக்கு துரோகம் செய்த சிரச ஊடகத்தை அனுமதிக்கக்கூடாது எனக் கூறிய அமைச்சர் மேர்வின் சில்வா அந்நிறுவனத்தின் ஒலிவாங்கியை வீசி எறிந்தார்.

இதனையடுத்து இங்கு உரையாற்றிய அமைச்சர், நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்த எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மன்னர் என்றே அழைக்க வேண்டும். அதுவே நாம் அவருக்கு கொடுக்கும் கௌரவமாகும்
posted by kavishan at | Permalink | 0 comments
ஆபத்தான நிலை இன்னும் தொடர்கின்றது: சிறிலங்கா செல்லும் அமெரிக்க குடிமக்களுக்கு இராஜாங்க திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை
[ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2009]

தமிழீழ விடுதலைப் புலிகளை அமைப்பை இராணுவ ரீதியாக முறியடித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும் அந்நாட்டில் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம், அங்கு பயணம் செய்யும் தமது குடிமக்களை அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக விரிவான அறிவித்தல் ஒன்றை அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கின்றது.

அதில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் சிறிலங்காவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது.

25 வருடப் போரின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பை வெற்றி கொண்டிருப்பதாக 2009 மே 19 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இருந்த போதிலும் அந்தக் கிளர்ச்சிக் குழு தொடர்ந்தும் இருக்கின்றது. சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன.

இதனால் சிறிலங்காவுக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்லவிரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்குச் செல்வதையிட்டு அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கப்படுகின்றது. இங்கு கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாதிருப்பதுடன், கிளர்ச்சி நடவடிக்கைகள் மீண்டும் கிளர்ந்து எழக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பது தொடர்பாகவும் எச்சரிக்கப்படுகின்றது.

ஆயுதம் தாங்கிய துணை இராணுவக் குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. தடுத்துவைக்கப்படும் அமெரிக்கக் குடிமக்களுக்கான தூதரக உதவிகள் தாமதமாகலாம்.

வடபகுதிக்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றதாகவே உள்ளது. குறிப்பாக பின்வரும் பகுதிகளுக்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றதாகும்.

அநுராதபுர மாவட்டம், மதவாச்சிக்கு வடக்கே உள்ள பகுதிகள், ஏ- 14 வீதி, மதவாச்சியில் இருந்து ஹொரவப்பொத்தானைக்கான வீதி போன்றனவும், கிழக்கு மாகாணத்தில் ஏ-6 வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகளும் திருகோணமலை நகரப் பகுதி, அம்பாறை மாவட்டத்தில் ஏ-4 வீதிக்கு தென்பகுதியும் மகா ஓயாவின் மேற்குப் பகுதியும் தடை செய்யப்பட்டவையாகும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்கள் பெருமளவுக்கு அமைந்திருக்கும் பகுதிகளுக்குப் பயணம் செய்வதை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தடை செய்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டுவிட்டதாக மே மாதத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த பின்னர் பயங்கரவாதச் சம்பவங்கள் எதுவும் அங்கு இடம்பெறாத போதிலும், அந்த அமைப்பு மீண்டும் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்தும் உள்ளது.

பொதுமக்கள் பெருமளவு கூடும் இடங்கள், அரசியல் பேரணிகள், படை முகாம்கள், அரசாங்க மற்றும் படையினரின் வாகனத் தொடர் அணிகள் பயணிக்கும் பகுதிகள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவைதான் விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல் இலக்குகளாக தொடர்ந்தும் இருந்துள்ளன. அமெரிக்கா குடிமக்கள் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிபவர்கள் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் செல்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இவை தாக்குதல் இலக்குகளாகியுள்ளன.

சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் மற்றும் அங்கு குடியிருக்கும் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேரடியாகவோ தம்மைப் பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
posted by kavishan at | Permalink | 0 comments
யுத்தக் குற்றங்களும், இனப்படுகொலைகளும் மூடி மறைக்கப்படுகிறதா?
[சனிக்கிழமை, 13 யூன் 2009,]

- இதயச்சந்திரன்

மிகத் தெளிவாக, பல விடயங்கள் எமது அறிவுக்குத் தெரிகிறது.

தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்கிற விடயத்தை நிரூபிப்பதற்கு, சிங்களம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

சூரன் போரில், தலையைத் திருப்புவது போன்று, முதலில் ஒரு நாடகத்தை பேரினவாதம் அரங்கேற்றியது. சிங்களவர்களே அதை நம்பமறுத்தார்கள். பின்னர் நந்திக் கடலோரத்தில், பிரபாகரன் அவர்களின் உடலைக் கண்டு எடுத்தோமெனக் கூறும்போது, அதனையும் நம்பமறுப்பார்கள் என்பதற்காக, கருணாவையும் தயா மாஸ்டரையும் சாட்சிக்கு அழைத்தது சிங்களம்.

சாட்சிக்கு அழைத்துவரப்பட்ட ஓணான்கள், வேலிக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பது எமது சிற்றறிவிற்கு தெளிவாகத் தெரியும்.காலநேரம் கரைந்துசெல்ல, திறந்திருந்த விழிகள், பாதியாக மூடத்தொடங்கியது. சவரம் செய்யப்பட்ட முகத்தில் வெண்ணிற மயிர்கள் முளைக்கத் தொடங்கின.10 நாள் மரபணுப்பரிசோதனை ஒரே நாளில் முடிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட உடலத்தின் சாம்பல், கடலிலும் கரைக்கப்பட்டது.உடலம் புதைக்கப்படவில்லை, எரிக்கப்பட்டது என்கிற விவகாரம், மீண்டும் தோண்டி எடுத்து பிண அரசியலை முன்னெடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தால், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது போல் தெரிகிறது.

தமது இன அழிப்புப் போரின் முழுமையான வெற்றியைப் பிரகடனம் செய்யவேண்டுமாயின், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையென்பதை தெளிவு படுத்து வேண்டிய தேவை சிங்களத்திற்கு உண்டு. தேசியத் தலைவர் இறந்த செய்தியை 53வது படையணித் தளபதி, சரத் பொன் சேக்காவிடம் தெரிவித்தபோது, அதனை உறுதி செய்யுமாறு கூறியதாக கொழும்புச் செய்திகள் வெளிப்படுத்தின. ஆனாலும் இராணுவத் தளபதியோ அல்லது கோத்தபாய இராஜபக்சவோ அந்த உடலத்தைச் சென்று பார்க்க அக்கறை கொள்ளவில்லை.

19ஆம் திகதி பேசிய மனிதர், 17 ஆம் திகதி இறந்ததாக புதியகதையொன்றும் உலா வந்தது. அவர் இறந்துவிட்டாரென்று, வன்னியிலிருந்து யார் தகவல் கூறியது என்கிற விடயம் இன்னமும் எமது அறிவுக்குத் தெளிவாகவில்லை.சற்றலைட் தொலைபேசியில் உரையாடியவர், தனது தொடர்வினை துண்டித்துக்கொண்டால், அவர் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ளும் யதார்த்தத் தெளிவு, சிலருக்கு ஏற்படுகிறது.

இறுதியாக நடைபெற்ற ஆனந்தபுர பெரும் சமரில், வெடிகுண்டுகளை நெஞ்சில் கட்டி களமாடிய தேசியத் தலைவர், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறுகையில், எதிரிகளிடம் அகப்படக்கூடிய வாய்ப்புக்களையும் அனுமானித்திருப்பார்.

பக்கத்திலிருந்து பார்த்தவர் போன்று, கட்டிய வெடி குண்டுகளை, பொட்டம்மான் அகற்றிவிட்டாரென புதிய விளக்கங்களும் தெரிவிக்கப்படுகின்றன.சமரின் இறுதி நாட்களில், களத்தில் நின்ற பலர், முகாம்களுக்குள்ளும், சிலர் வெளியிலும் இருக்கின்றார்கள். அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், மே 13 ஆம் திகதிக்கு முன்பாகவே தேசியத் தலைவர் முற்றுகைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டாரெனத் தெரிகிறது.

அவர் அங்கிருந்தும் பேசலாம். பொதுவாகவே, அவர் சற்றலைட் தொலைபேசி ஊடாக பேசுவதில்லையென்று உடனிருந்த பலர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். முகாமில் இருக்கும் மக்களுடன் வெளியுலகத் தொடர்பு ஏற்பட அனுமதித்தால், பல திடுக்கிடும் உண்மைகள் கசியலாமென்பதால், எவரையும் உள்நுழைய விடாமல் தடுக்க முனைகிறது சிங்களம்.

ஆனாலும் அதனையும் மீறி, இறுதி நாட்களில், பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு கோரத்தாண்டவம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. வீழ்ந்து கிடந்த உடலங்களை ஏறி மிதித்து, வெளியே தப்பி ஓடி வந்த கொடூரச் சம்பவங்களை, 18ஆம் திகதியன்று முற்றுகைக்குள் இருந்து வந்த மக்கள் தெரிவித்தார்கள்.

சிங்களப்படைகள் மீது ஏராளமான கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு, குறுகிய நிலப்பரப்பெங்கும் புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்தது. இதேபோன்று நந்திக் கடல் ஊடறுப்புச் சமரில், மேற்குக்கரையோரம் கடற்கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டதோடு, முற்றுகையை உடைத்து வெளியேறிய முதல் அணியினர் ஒட்டிசுட்டான் காட்டுப் பிரதேசத்தை நோக்கித் தப்பிச் சென்றதாக, கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்சின் இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இந்த முற்றுகையிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள், இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. 33 வருடகால தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மூன்று நாட்களில் முடிந்து விட்டதென சிங்களமும், இந்திய புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொள்ளும் பரப்புரைகளில், பல அரசியல் சூத்திரங்கள் ஒளிந்திருக்கின்றன.

தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் வரலாற்றுத் துரோகிகள் என்று நம்மில் சிலர் அவசர அறிக்கைகளை வெளியிடுகின்றனர். வருடந்தோறும், விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழ் மக்கள்.

பிரிகேடியர் தமிழ்செல்வனும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும், பல அரசியல் வரலாற்றுத் தவறுகளைப் புரிந்ததாகவும் இவர்கள் நிறுவ முற்படுகிறார்கள். பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு, தாயகம் திரும்பிய தமிழ்ச்செல்வன், உலகநாடுகளின் உண்மையான நிலைப்பாட்டினை, தலைவருக்குத் தெளிவுபடுத்தாமல் தவிர்த்து விட்டாரென்னும், புதியதொரு குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம், ஒரு மண்ணும் நடைபெறாதென, தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழினத்திற்கே தெரியும். சர்வதேச அளவில், எமது போராட்ட நியாயப்பாட்டினைக் கொண்டு செல்லும் தளமாகவே, இப்பேச்சுவார்த்தை மேடை பயன்படுத்தப்பட்டது.திம்புவில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத சிங்களம், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் பரிசீலனைக்காக மேசையில் போடப்பட்ட, உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாதென்பதை தேசியத் தலைவர் புரிந்துகொள்வார்.

ஏதோ, இப்பூவுலகின் புதிய ஒழுங்கினைப் புரியாமல், பிரபாகரன் போராட்டம் நடாத்தினார் என்பது போன்று சித்தரிக்க முனைபவர்கள், இனி என்னசெய்யலாம் என்பதைக் கூறவேண்டும்.

பூகோள அரசியலானது, உலகப் பொருளாதாரச் சீரழிவோடு புதியதொரு ஒழுங்கினை நோக்கிக் காலடி வைக்கிறது. அதில் சீனாவின் வகிபாகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆயுதப் போராட்ட, இன அழிப்புச் சூத்திரதாரிகளின் பங்கு, தென்னாசியாவில் எவ்வகையில் பிரயோகிக்கப்; படுகிறதென்பதை, விடுதலைப்புலிகள் புரிந்துகொள்ளவில்லையென்று எண்ணுவதும் தவறான பார்வையாகும்.

ஆனாலும் இவர்கள் நிறுவ முற்படும் 3ஆம் கட்ட ஈழப்போராட்டத்தில், இந்திய வகிபாகம் தவிர்க்கப்படமுடியாத சக்தியாக இருக்கப் போகிறதென்று இனி இவர்கள் கூறப் போகிறார்கள். கொழும்பு, தமிழ்நாடு, புதுடெல்லி என்கிற அச்சினுள், மறுபடியும் எமது ஈழப்போராட்டத்தை இழுத்துச் செல்லும் காய்நகர்த்தல்களின், பங்குதாரர்களாக இவர்கள் மாறுவார்கள்.

தலைவர் இல்லையென்பதை அழுத்திக் கூறுவதன் ஊடாகவே, இத்தகைய இந்திய உள்நுழைவு சாத்தியமாகுமென்பது இந்த அறிவியலாளர்களின் கணிப்பு. மகிந்த இராஜபக்ச, என்ன முடிவெடுத்தாலும், அதனை இந்தியா உறுதியாக ஆதரிக்குமென்று சிவசங்கர் மேனன் தெரிவிக்கும் கருத்தினை உன்னிப்பாக அவதானித்தால், இந்தியா இல்லாமல் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாதென அடம்பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களின் உள்நோக்க நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொள்ளலாம்.

இனப்படுகொலை, யுத்தக்குற்றம் போன்றவற்றிலிருந்து தப்பிச் செல்லும்வரைதான், இந்தியாவின் உதவி மகிந்தருக்குத் தேவை.அதற்கு முன்பாக, சிறீலங்காவைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், இந்திய - சிறீலங்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றினை உருவாக்க, மேனன் முயற்சிகளை மேற்கொள்கிறார்.ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, இந்தியா உறுதுணையாக நிற்கும் என்கிற கற்பனை அரசியலில் காலத்தை கடத்தாமல், சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை அம்பலமாக்கும் செயற்பாடுகளில், புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம் முழு மூச்சாக ஈடுபடவேண்டும்.

இருக்கிறாரா? இல்லையா? என்கிற உளவியல் அறிக்கைப் போர்களில் காலத்தைச் செலவிட்டால், சிங்களம் செய்த இனப்படுகொலைகளும், செய்து கொண்டிருக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மூடி மறைக்கப்படும்.

இரத்தக்கறை படிந்த கைகளோடு, புதிய புத்தர்களும் உருவாகிவிடுவார்கள்.பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.மக்களைத் துரோகிகளாகச் சித்தரிப்பவர்கள், மக்களிடமிருந்து அந்நியமாகிச் சென்ற வரலாறுகளை, முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களால் உருவாக்கப்படும் தலைவர்கள் அழிவதில்லை, சராசரி மானிட வயதெல்லை, 100 ஐயும் தாண்டி, அவர்கள் மக்கள் மனங்களில் நீடித்து நிலைப்பார்கள்.ஆகவே, புதிய தலைமுறை மாணவ, இளைஞர்கள், இதுவரை முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடாத்தவேண்டு. 2008ஆம் ஆண்டு மாவீரர்தினச் செய்தியும் அதுதான்.

நன்றி - ஈழமுரசு
posted by kavishan at | Permalink | 0 comments
இலங்கையில் பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: ஐ.நா.
[சனிக்கிழமை, 30 மே 2009]

இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் எலிசபத் பையர்ஸ் தெரிவித்துள்ளதாவது:

அண்மைய மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்வாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் மீண்டும் வெளிப்படையாக தெரிவித்து வந்துள்ளது.

எமது தரவுகளை அரசாங்கத்திற்கும், ஏனைய தரப்பினருக்கும் வழங்கியுள்ளோம். எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் கணிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளே எம்மிடம் உள்ளன. நாம் பொதுமக்களின் இழப்புக்களையும், மக்களின் துன்பங்களையும் வெளியில் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லை. நீண்ட காலமாகவே நாம் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளோம் என்றார் அவர்.

இறுதியாக நடைபெற்ற பாரிய மோதல்களில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தகவல் வெயிட்டிருந்ததை தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

இலங்கையில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்ட தகவல்கள் தமக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாக ஜெனீவாவை தளமாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

இதனிடையே சிறிலங்காவுடனான தனது உறவுகளை முறித்துக்கொள்ள விரும்பாததாலேயே போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட தயங்குவதாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் 'லு மொந்த்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
posted by kavishan at | Permalink | 0 comments
வன்னியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவல்கள் ஐ.நா.விடம் உள்ளது: 'த ரைம்ஸ்'
[சனிக்கிழமை, 30 மே 2009]

வன்னியில் 20 ஆயிரம் மக்கள் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டதாக 'த ரைம்ஸ்' நாளேடு' நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

இலங்கையில் இறுதியாக நடைபெற்ற மோதல்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முனின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னர் அவரின் முதன்மை அதிகாரியான விஜய் நம்பியார் தெரிவித்திருந்தார்.

அக்கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், பான் கீ மூன் தனது பயணத்தின்போது அதனை தெரிவிக்கவில்லை.

இழப்புக்கள் தொடர்பான தகவல்கள் தவறானவை எனவும், பிரசுரிக்கப்பட்ட படங்கள் பொய்யானவை எனவும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

ஆனால், போர்க் குற்றம் மீதான விசாரணைக்கான கோரிக்கைகள் அனைத்துலகத்தில் வலுப்பெற்று வருவதுடன், மனிதாபிமான அமைப்புக்களை மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. அங்கு 2 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

கணிப்பீடு செய்யப்பட்ட தொகையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட வேண்டும் என மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அது போர்க் குற்றம் மீதான விசாரணைகளுக்கு உதவும் எனவும் அது தெரிவித்துள்ளது.

'த ரைம்ஸ்' நாளேட்டில் வெளிவந்த 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதான தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. அவர்கள்தான் அது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்.

20 ஆயிரம் இலங்கையில் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் 'லு மொந்த்' நாளேடும் வெளியிட்டுள்ளது. அவர்களும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் இருந்தே தகவல்களை பெற்றுள்ளனர்.

இந்த தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டால் சிறிலங்காவுடனான உறவுகள் முறிவடைந்துவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
posted by kavishan at | Permalink | 0 comments
சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் தோற்கடிப்பு: நிதியுதவி வழங்கவும் தீர்மானம்
[வியாழக்கிழமை, 28 மே 2009]

சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.

இதனால், இந்த பிரேரணை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் பிரேரணையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் பிரேரணைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த பிரேரணையை நிறைவேற்ற முடியாது அது தோல்வியடைந்துள்ளது.

இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் பிரேரணை ஒன்றையும் முன்வைத்தது.

இந்த பிரேரணை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த பிரேரணைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.

எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும் பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த பிரேரணை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் சிறிலங்கா அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
posted by kavishan at | Permalink | 0 comments
இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் நியமனம்
[வியாழக்கிழமை, 28 மே 2009]

இலங்கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரிக்கா இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் புதிய தூதுவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவின் தெற்காசிய விவகார பிரதி இராஜாங்கச் செயலாளராக முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ரொபர்ட் ஓ பிளெக்கின் வெற்றிடத்திற்கே பெட்ரிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஈராக், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் அமெரிக்க இராஜதந்திர அதிகாரியாக கடமையாற்றியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
posted by kavishan at | Permalink | 0 comments
பத்மநாதனுக்கு வலை வீச்சு!
[வியாழக்கிழமை, 28 மே 2009]

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர் என அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும் தாய்லாந்து, மlலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன்விசாரணைகளை சர்வதேசப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும், இலங்கை அரசும், இந்திய அரசும் விடுத்த கோரிக்கையையடுத்தே கே.பியைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேசப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.
posted by kavishan at | Permalink | 0 comments
புலிகளின் மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி அகதி முகாமில் கைது என்கிறது அரசு
[வியாழக்கிழமை, 28 மே 2009]

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் சிவதாய் எனப்படும் தமிழினி அகதி முகாமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள அகதி முகாமொன்றில் தமிழினி தனது தாய் மற்றும் சகோதரியுடன் தஞ்சமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் தவிர்ப்பு வலயத்தில் அப்பாவி பொதுமக்களுடன் இணைந்து தாமும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழினியிடம் பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
posted by kavishan at | Permalink | 0 comments
விரக்தியுடன் உறவுகளை தேடும் அகதிகள்
[வியாழக்கிழமை, 28 மே 2009]

இலங்கையின் வடபகுதியில் உள்ள புதிய முகாமொன்றில் கூடாரத்திற்கு வெளியே 3 பிள்ளைகள் நின்றுகொண்டிருந்தார்கள். பல வாரங்களாக இந்தப் பிள்ளைகள் தமது தாயைப் பார்த்திருக்கவில்லை. அவர்கள் தங்கியிருந்த பதுங்குகுழிக்குப் பக்கத்தில் செல் வீழ்ந்து வெடித்த பின்பு அவர்கள் தமது தாயைப் பார்க்கவில்லை.

கள வைத்தியசாலைக்கு சாந்தி என்ற பெண்ணை (29 வயது) மருத்துவர்கள் கொண்டுசென்று சத்திரசிகிச்சை செய்துள்ளனர். சாந்தியின் கணவனான யோகேஸ்வரன் (33 வயது) பிள்ளைகள் துயந்தினி, குகந்தினி, துஷ்யந்தினி ஆகியோருக்கு தமது தாய் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியும். அதன் பின்னர் தாயை அவர்கள் பார்க்கவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இப்போது மெனிக்பாம் முகாமில் அவர்கள் தங்கியுள்ளனர். அவர்களால் தமது தாய் தொடர்பாக ஏதேனும் செய்வதற்கு எந்த சக்தியும் இல்லை.

மற்றொரு முகாமில் திருக்கந்தன் (27 வயது) என்ற அகதி இருந்தார். அவரும் அவருடைய அன்புக்குரியவர்களையும் காணாமல் அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். தனது மனைவியினதும் தனதும் திருமணத்திற்கு எடுத்த புகைப்படத்தை அவர் காட்டினார். கடந்த மாதம் அவர்கள் தனித்தனியே பிரிந்துவிட்டனர். இராணுவம் முன்னேறி வந்தபோது அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றுவிட்டதாக கூறினார். இப்போது எனது மனைவி, மகளை பார்க்கமுடியாமல் உள்ளது. மகளுக்கு 4 வயது மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவி தேவை என்று அவர் கூறியதாக லண்டன் கார்டியன் பத்திரிகையின் நிருபர் கீதின் சேம்பர் லைன் மெனிக்பாம் முகாமிலிருந்து இந்தச் செய்தியை எழுதியிருக்கிறார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

எண்ணிக்கையற்ற பொதுமக்கள் இலங்கையின் முகாம்களில் இதேமாதிரியான நிலையில் உள்ளனர். அவர்களால் தமது உறவினர்களிடம் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கின்றது. அத்துடன், பலர் குடும்பங்களைவிட்டுப் பிரிந்துவிட்டனர். மெனிக்பாமில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். 1400 ஏக்கர் கொண்ட இந்த முகாம் முட்கம்பி வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்குள் சிலர் தமது உறவினர்களை கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் இப்போதும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், ஏனையோர் தமது உறவினர்கள் புலி உறுப்பினர்கள் என வேறுபடுத்தப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

9 ஆயிரம் புலி உறுப்பினர்களை அடையாளம் கண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அவர்கள் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என்று உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை அவர்களை முகாம்களுக்குள் வைத்திருப்பது தேவையானது என்று அரசாங்கம் கூறியுள்ளது.

பாரிய நிலப்பகுதியில் இந்த முகாம்கள் அமைந்துள்ளன. எங்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களுக்குள் 2 வருடத்திற்கும் மேலாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். மே 18 இல் மெனிக்பாம் முகாமுக்கு வந்த நவரெட்ணம் ராசபாலன் (31 வயது) கூறுகையில்;

தனது மனைவி ஜகதா, 3 பிள்ளைகள் ஆகியோருடன் எந்தத் தொடர்பும் தற்போது இல்லை என்று கூறுகிறார். பிள்ளைகளுக்கு 7, 5, 3 வயதாகும். ஏப்ரல் 18 இற்குப் பின்னர் அவர்களை சந்திக்கவில்லை. நான் அவர்களை கண்டுபிடிக்க விரும்புகிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள் என்று அவர் கூறினார்.

இவரைப் போன்று பலர் அந்த முகாம்களில் இருந்தனர். உள்நாட்டு யுத்தத்தின் கொடூரத்தன்மைக்கான ஆதாரங்கள் எங்குமே காணப்பட்டன. பான்சி என்று தனது பெயரைக் குறிப்பிட்ட இளம் பெண் ஒருவர் தனது 18 மாதக் குழந்தையான உமாராணியை தூக்கி வைத்திருந்தார். அந்தக் குழந்தையின் தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டிருந்தது. வலது கையிலும் கட்டுப் போடப்பட்டிருந்தது. செல் சிதறல்கள் அக்குழந்தைக்கு பட்டதாக தாய் தெரிவித்தார். அந்தக் குழந்தையின் தலையை மாத்திரமன்றி, அந்தப் பெண்ணின் விரல்களையும் செல் சிதறல்கள் துண்டாடிவிட்டன.

இந்த முகாம்களில் பொதுமக்களை வைத்திருப்பது தொடர்பாக பரந்தளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேற்று முன்தினம் அதிகாரிகள் முரண்பாடான விளக்கங்களை தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அவர்களை அங்கு வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்களை இங்கே வைத்திருப்பதாகவும், அநேகமானோர் விடுதலைப்புலிகளுடன் சில விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர். முகாம்களுக்குள் அவர்களை சோதனையிடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருந்தோரின் பட்டியல் தம்மிடம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், அவர்களை அடையாளம் காண்பதற்காக இன்னும் அதிக காலம் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் யாவருமே புலிகள் என அரசாங்கம் நினைப்பதே பிரச்சினையாகும். எங்களால் எதையுமே செய்ய முடியாது என்று கிளிநொச்சியை சேர்ந்த மருத்துவ அதிகாரியான சிவலிங்கம் (63 வயது) என்பவர் தெரிவித்தார். அவர் அண்மையில் இந்த முகாமுக்கு வந்தவர். யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக சிலர் கதைக்க விரும்பினர். மோதலில் சிக்குண்ட பொதுமக்களின் நிலை குறித்து சிவலிங்கம் விபரித்தார்.

எம்மை சூழ சண்டை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தமக்கு கையில் கிடைத்த உடுப்புகளுடன் ஆட்கள் ஓடினார்கள். ஷெல்கள் வந்து வீழ்ந்தன. சூடு இடம்பெற்றது. என்ன செய்வதென்று மக்களுக்கு தெரியவில்லை. அதிகளவானோர் ஷெல், வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். ஜெட் விமானங்கள் குண்டுபோட்டன. மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
posted by kavishan at | Permalink | 0 comments
பிரித்தானியாவில் 10 நாளாக தொடரும் ரிம் மார்டினின் பட்டினி போராட்டம்
[வியாழக்கிழமை, 28 மே 2009,]

தமிழர்களுக்காக ஆதரவு தரயாரும் இல்லையென்றாலும் நீதிக்காக தான் இருப்பேன் என்ற முடிவுடன் நேற்றோடு 10 வது நாளாக ரிம் மார்டின் அவர்கள் உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றார்.

சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு செய்த கொடூரத்திற்கு ஐ.நா சபையிடம் கோரிக்கை இட்டபோதிலும், அங்கே கூடுதலான நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு தமிழ் மக்கள் தான் ஆதரவு என்பதை இந்த சர்வதேச சமூகம் திரும்ப திரும்ப உணர்த்தி நிற்கின்றது. இந்த வகையில் இன்றும் நூற்றுக்கணக்கான மக்கள் சிறிலங்கா அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கும் தமிழீழ தாயக உறவுகளை காப்பாத்தும் படி பிரித்தானியாவை கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழர்களுக்காக யாரும் இல்லையென்றாலும் நீதிக்காக தான் இருப்பேன் என்ற முடிவுடன் நேற்றோடு 10 நாளாக ரிம் மார்டின் அவர்கள் உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றார்.

இவருடைய கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற குறிக்கோளுடனும் பல தாய்மார் நேற்றும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை சிறீலங்கா அரசின் இனவெறுயால் காணாமல் மற்றும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் விபரங்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று (28-05-09)காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை சேகரிக்கப்பட உள்ளதால் தமது உறவுகளை இழந்து தவிக்கும் அனைத்து தமிழ் மக்களும் அங்கு சமூகமளித்து உங்கள் உறவுகளின் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க உதவும்படி கேட்கின்றனர் பிரித்தானிய தமிழ் இளையோர்.
posted by kavishan at | Permalink | 0 comments
இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி வேண்டும்: அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்
[வியாழக்கிழமை, 28 மே 2009]

வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகோப் கெலன்பேர்ஜர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வடக்கு - கிழக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கான தேவைகள் நிறைவுசெய்யப்படவில்லை. எனவே உதவிப்பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

மருத்துவ தேவைகள் மிகவும் அதிகமாக உள்ளன. மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் மருத்துவ தேவைகள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் சில முகாம்களுக்கான அனுமதிகளையே வழங்கியுள்ளது.

நாம் எல்லா முகாம்களுக்கும் பயணம் மேற்கொள்வதுடன், அங்குள்ள நிலமைகளையும் பார்வையிட வேண்டும். எமது முக்கிய பணிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிகளை வழங்க வேண்டும். நாம் அரசாங்கத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

படை நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில் மூன்று லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட வேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 500 பேரை கடந்த மாதம் நாம் பார்வையிட்டிருந்தோம் என்றார் அவர்.
posted by kavishan at | Permalink | 0 comments
மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 200 பேர் நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைப்பு
[வியாழக்கிழமை, 28 மே 2009,]

வன்னியில் இடம் பெற்ற மோதல் காரணமாக காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொது மக்களில் 200 பேர் குணமடைவதற்கு முன் வவுனியா நான்புரி நிலையத்திற்கு அனுப்பும் நடவடிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை 26-05-2009 இடம் பெற்றுள்ளது.

இவ் விடையம் தொடர்பாக தெரிய வருகையில் ,

வன்னியில் இடம் பெற்று வரும் மோதல் காரணமாக சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த காயங்களுடன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுல் அங்கங்களை இழந்தவர்களும் உள்ளனர். இவர்கள் நன்கு குணமடையும் போது வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைப்பது வழமை . இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நன்கு குணமடைந்த மற்றும் குணமடையாத நடக்க முடியாத நோயாளர்கள் என சுமார் 200 பேர் வரை குணமடைந்ததாகக்கூரி சிங்கள வைத்தியர் ஒருவர் இவர்களை வவுனியா நலன் புரி நிலையங்களுக்கு அனுப்ப உறுதிப்படுத்தியுள்ளனர் .

இந்த நிலையில் குணமடையாத நோயாளர்கள் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்ப இருப்பது தொடர்பாக பொது மக்களினால் மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி ஏ.யூட்டன் உடனடியாக செயற்பட்டதினைத் தொடந்து நன்கு குணமடைந்தவர்கள் மட்டும் நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
posted by kavishan at | Permalink | 0 comments
நவநீதம்பிள்ளையின் கோரிக்கைக்கு நியூயோர்க் டைம்ஸ் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது
[வியாழக்கிழமை, 28 மே 2009]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின், இலங்கையில் யுத்த குற்றங்கள் தொடர்பாக பாரபட்சமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு நியூயோர்க் டைம்ஸ் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் தமது நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில், இதனை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம், தாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாம்களையே தாக்கியதாக பிரசாரப்படுத்துகிறது. எனினும் நிவாரணப் பணியாளர்களும் சாட்சிகளும் இராணுவம் பாரிய மனிதாபிமான துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன

தமிழர்கள், சிங்களவர்களால், நீண்ட காலமாக அடக்கப்பட்டு வருவதாகவும் நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் ஏனைய சமூகங்களையும் சிங்கள சமூகம் சமமாக மதிக்கும் வரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, உறுதியளித்துள்ள சமாதானத்தை அடைய முடியாது என்றும் நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது

இலங்கையில் பயங்கரவாதம் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் அங்கு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் கடந்த 26 வருடங்களில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளையும் அப்பாவி தமிழ் மக்களையும் பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இந்தநிலையில் அகதிகளாகியுள்ள இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்காக, இலங்கை அரசாங்கம் சர்வதேச நிறுவனங்களை அனுமதிக்க மறுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் உட்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உட்பட்ட பல போராளிகளை கொன்ற அரசாங்கம், தற்போது தமிழர்களுடன் இணக்கப்பாட்டுக்கு முன்வந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத பொய் என நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் 12 வீதமாகவுள்ள, தமிழர்களுக்கு, அவர்களின் பாரம்பரிய பிரதேசத்தில் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலமே அங்கிருந்து வெளியேறியுள்ள மக்களை மீள குடியமர்த்த முடியும் என நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சில ஆய்வாளர்களின் கருத்துக்களை நியூயோக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது

அதில், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள், நீண்டகால அடக்குமுறைக்கு உட்பட நேரிடும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
posted by kavishan at | Permalink | 0 comments
IP