தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கில் அதியுயர் இராணுவப் பாதுகாப்பு வலயங்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டா என்று

இலங்கை அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசின் சார்பில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சுச் செயலாளர் ரஜீவ விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறக்கூடிய ஆபத்துக் காணப்படுவதால், இலங்கை இராணுவத்தினர் அந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார்கள் என்றும் இந்நிலையில் தமிழர் பிரதேசங்களிலுள்ள இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவே மாட்டா என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் நேற்று ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

புலிகளின் கதை முடிந்துவிட்டது. ஆனால் அவர்களின் தற்கொலைக் குண்டுதாரிகள் இன்னமும் கொழும்பில் இருக்கின்றார்கள். நாம் அவர்கள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்கவேண்டியுள்ளது. நாம் புலிகளால் அநேக கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். எனவே அந்தக்கஷ்டங்கள் இனிமேலும் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.

பலமான நிலையில் புலம் பெயர் தமிழர்கள்

ஆனால் புலி ஆதரவுக் கொள்கையுடன் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மிகவும் பலமான நிலையில் உள்ளார்கள். வெளிநாடுகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் எமக்குப் பெரிய அளவில் ஆதரவாகவோ, உதவியாகவோ இல்லை. எது எப்படி இருப்பினும் வெளிநாடுகளின் குறிப்பிடத்தக்க அளவு தலையீடு இல்லாமல் புலிகளால் மீண்டும் புத்துயிர் பெறவே முடியாது. இலங்கையில் புலிகளுடனான யுத்தத்தின் போது 1983 இற்கும் 2009 இற்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் சுமார் 90 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

சமஷ்டி இல்லை

இலங்கை அரசு சிறுபான்மை இன மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராகவே இருந்தது. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. ஆனால் சமஷ்டி முறையிலான தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், சமஷ்டி முறையிலான தீர்வு இலங்கையில் பிரிவினைவாதத்துக்கு சட்ட அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய ஆபத்து ஒன்று நிலவுகிறது.

மேலைத்தேய நாடுகளின் அழுத்தம்

அரசினால் நடத்தப்படும் நலன்புரி முகாம்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு பாரதூரமான அழுத்தங்களை வெளிநாடுகளிலிருந்து எதிர்கொள்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக மேலைத்தேய நாடுகளின் அழுத்தம் மிகவும் கூடுதலாக உள்ளது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், சீனா, எகிப்து, கியூபா, பிரேஸில் ஆகிய நாடுகள் இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைப் புரிந்து வைத்துள்ளன. மேற்படி நாடுகள் அகதிகளின் நிலை மற்றும் அகதிகளின் புனர்வாழ்வு, அதிகாரப் பகிர்வு மூலமான அரசியற் தீர்வு விடயத்தில் எம்மைக் கேள்வி கேட்டுள்ளன. ஆனால் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்திருக்கவில்லை.

எதிர்வரும் ஜனவரி மாத இறுதிப்பகுதிக்குள் முகாம்களிலுள்ள அகதிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் 50 ஆயிரத்துக்கும் இடையில் குறைக்கப்படும். இந்தத் தமிழ் அகதிகளுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாதுகாப்பு விடயங்கள், நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள், அகற்றுவதிலுள்ள தாமதங்கள், யுத்தத்தால் வடக்கு, கிழக்கில் அழிந்த பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள தாமதங்கள் ஆகியன எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் நாம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறோம்.

இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் நாம் தற்போது வெற்றியடைந்து வருகிறோம் என்று உணர்கிறோம். ஆனால் அகதிகளுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் பங்குபற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. இதை நாம் நிதியுதவி வழங்கும் நாடுகளுக்கு குறிப்பாக மேலைத்தேய நாடுகளுக்குத் தெளிவாகவே சொல்லியுள்ளோம்


முக்கிய தேர்தல் நடைபெறவிருப்பதனால் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் அறிவிக்கக் கூடுமென அரசியல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக் கூடுமெனக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த வருடம் நாடாளுமன்ற அமர்வுகள் வழமை போன்று நடைபெறும் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எந்தவொரு நேரத்திலும் நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறப்படுகின்றது.

இவ்வருடத்தில் கடந்த மே மாதமும் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, புலிகளுடனான போர் முடிவடைந்து, வெற்றியை அறிவிக்கும் பொருட்டு ஜனாதிபதி, சபை அமர்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகத் தமக்கும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்

இது குறித்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேட்டபோது,

"இது உண்மையா என்பது எனக்குத் தெரியாது. எனினும் இவ்வாறு சபை அமர்வுகளை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. இந்நிலையில் எம்மால் எதுவும் செய்ய முடியாதுள்ளது" என்றார்.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட உள்ளமை தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று 3 ஆவது நாளாகவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு விசாரணைக்கு வருமாறு இன்று காலை அறிவிக்கப்பட்டதையடுத்து தற்போது அவர் அங்கு சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த புதன் கிழமை இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் சுமார் 20 மணித்தியாலத்திற்கு மேல் பயங்கரவாதத் தடுப்பி பிரிவு தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிக்கு 2ஆம் நாள் விசாரணை முடிந்த பின்பு மறுநாள் சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுநாள் சனிக்கிழமை விசாரணைக்காக அங்கு சென்றிருந்த போது அன்றைய தினம் விசாரணை நடைபெறாத நிலையில் மீண்டும் அழைக்கும் போது சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது


கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்க்கோ டொபிரஸ் கஸ்ரோ இலங்கை வந்துள்ளார். நேற்று மாலை இலங்கை வந்தடைந்த கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாட்டு உறவுகளையும் மேலும் பலப்படுத்தும் வகையில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதேவேளை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் ஒருநாள் உத்தியோக பூர்வ விஜயம்மொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் மற்றும் பல அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இச்சந்திப்புக்களின் போது இருநாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது மற்றும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

[திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009]

போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
09-11-2009

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும்.

காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது.

அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது.ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது.

இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"


இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயப் போவதில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசுகையில், இலங்கையில் தமிழ் இளைஞர்களை சிங்கள வெறியர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். விடுதலைப்புலிகளின் 50 ஆண்டு கால போராட்டத்தை மத்திய அரசு சிங்களர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் வழங்கியதன் மூலம் வீழ்த்தி விட்டது.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறும் இலங்கை அரசு இன்னும் அப்பாவி தமிழர்களை முள் வேலிக்குள் அடைத்து சித்திரவதை செய்வது ஏன்?

இலங்கை பிரச்னைக்காக முத்துக்குமார் உட்பட 14 பேர் தமிழகத்தில் தீக்குளித்தனர். ஆனால் அவர்களின் தியாகத்தை போலீசார் கொச்சைப்படுத்தினார்கள். அந்த தியாகிகளின் தீக்குளிப்பு நிச்சயம் வீண்போகாது. அதே போல் இலங்கை தமிழர்களின் உயிர் தியாகமும் வீண் போகாது.

இலங்கையில் இன்னும் போர் முடியவில்லை. தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயாது. பிரபாகரன் மீண்டும் வந்து போராட்டத்தை முன்னின்று நடத்திச் செல்வார்.

இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளாலும், போர் குற்றங்களாலும், ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளன. ஆனால் இதை தவிர்க்கவே இந்தியாவில் இருந்து எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டு, அங்கு தமிழர்கள் நலமாக உள்ளார்கள் என இலங்கை சர்வதேச நாடுகளை நம்ப வைத்தது என்றார் வைகோ.


ஸ்ரீலங்கா இராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விசுவாசமான பல உயர் அதிகாரிகளும் சிப்பாய்களும் இராணுவத்தில் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்றும் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்சவினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இராணுவ தலைமையகத்தை கடந்து செல்லும் போது அங்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்துமாறும் பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வாரம் வன்னிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் ஜனாதிபதி இராணுவத்தினருக்கு மிக அருகில் செல்லாது தவிர்ததாகவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

சரத் பொன்சேகா நாட்டில் இல்லாத சமயத்தில் வன்னிக்கு விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்தமைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலே காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

எமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த ஆறுமாதத்துக்குள் எமது மன உறுதியை குலைப்பதற்கும் போராட்டத்தினை பலவீனப்படுத்துவதற்காகவும் யாரும் எதிர்பாராத அளவிலான ஒரு பாரிய சதி உருவாக்கப்படுகின்றது என பிரித்தானியத் தமிழர் பேரவையின் நேற்றைய ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.

அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

ஈழத்தமிழர் போராட்டம், புலம் பெயர் தமிழ்மக்களின் கரங்களுக்கு வந்தடைந்துள்ள நிலையில், அரசியல் மயப்படுத்தப்பட்ட தாயகம் நோக்கிய இந்த புனிதப் பணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வருகின்ற இந்த முக்கிய காலப்பகுதியில் இதனை சிதைக்கும் பல நடவடிக்கைகளும் , சதிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

எமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசும் அதனோடு சேர்ந்தியங்குபவர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆறுமாதத்துக்குள் எமது மன உறுதியை குலைப்பதற்கும் போராட்டத்தினை பலவீனப்படுத்துவதற்காகவும் யாரும் எதிர்பாராத அளவிலான ஒரு பாரிய சதி உருவாக்கப்படுகின்றது.

மிகவும் அவதானமாக இலங்கை அரசியலை கவனித்து, சதிவலைக்குள் எமது விடுதலைப்போராட்டம் சிக்கிவிடாது பாதுகாப்பது, புலம்பெயர் மக்களது கடமையாகும் இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் அதன் இறையாண்மையை இழந்தது. தொடர்ந்து வந்த காலனித்துவ ஆட்சிகளுக்கு அடிமைகளாக தமிழினம் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் சிங்கள அரசினால் எமது தேசிய இறையாண்மை, சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்டது.

முப்பது வருட அறவழிப்போராட்டமும் , முப்பது வருட ஆயுதப்போராட்டமும் மீண்டும் எமது தாயகத்தின் விடுதலைக்கும் அதன் மீதான நம்பிக்கைக்கும் அத்திவாரமிட்டது. ஆனால் இப்போது சர்வதேசத்தின் கூட்டுச் சதியினால் எமது தேசக்கட்டுமானம் சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல் விடுதலை மீதான நம்பிக்கையையும் சிதைத்துள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நம்பிக்கைச் சிதைவின் வெளிப்பாடாகத்தான் பலர் பல தீர்வுத்திட்டங்களோடு செயற்பட ஆரம்பித்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான உயிர்த்தியாகத்தின் மூலம் கட்டப்பட்ட, காப்பாற்றப்பட்ட எமது தேசத்தின் இறையாண்மையை சமரசப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேவேளையில் எமது மக்களின் இன்றைய துயரைத் தீர்ப்பதற்க்கு பல தளங்களிலும் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மறுப்பதற்க்கில்லை.

தாயகம் , தேசியம் , இறமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் விழுமியங்களோடு பணியாற்றும் அனைவரோடும் பிரித்தானிய தமிழர் பேரவை இணைந்து பணியாற்றி வருகின்றது. ஆனால் அதேவேளை தமிழ்த் தேசியத்தை பலவீனப் படுத்தும் தரப்பினரோடோ அல்லது தமிழ்த்தேசியத்தை சமரசப்படுத்தும் தரப்பினரோடோ பேரவை ஒரு பொழுதும் சேர்ந்தியங்காது என்பதனைத் மீண்டும் தரிவித்துக் கொள்கின்றது.

பேரவை, பிரித்தானிய சட்டங்களுக்குட்பட்டு மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றது. எமது பிராந்திய கிளைகளின் ஊடாகவோ அல்லது தலைமையகத்துக்கோ தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். சமகாலத்தில் பேரவையின் சார்பாக பேசவல்லவர்கள் சர்வதேச ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் ஆகியவற்றில் கிரமமான முறையில் தோன்றி பேரவையின் செயற்பாடுகள் குறித்தான விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.

அத்தோடு ஊடக தர்மத்தோடு இயங்கும் சகல ஊடகங்களோடும் தமிழர் பேரவை செயற்படுகின்றது. மக்கள் கட்டமைப்பை உருவாக்குதல் , இதுவே எமது அரசியல் வேலைத் திட்டத்தின் அடித்தளமாகும். தற்போது பேரவை, மக்கள் அனைவரையும் உள்வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது பேரவைக்கு ஓர் ஜனநாயக அடிப்படையிலான கட்டமைப்பை உருவாக்க உதவும்.

அத்தோடு மக்களே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த இலக்குகளை முன்வைத்து பேரவையானது பல்வேறு செயல்த்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அத்தோடு எம் முன்னே காத்திருக்கும் பாரிய வேலைத்திட்டத்திற்கான ஆட்பலம் மற்றும் அனைத்து வளங்களையும் சீர் செய்ய உதவிடும். எம் அங்கத்தவர்கள் உங்கள் அனைவரினதும் வாசல் தேடி வருகின்றார்கள்.

எமது பணியில் நீங்களும் முழுமையாக இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அத்தோடு பின்வரும் செயற்திட்டங்களையும் பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கின்றது. திறப்பு போராட்டம், மனித உரிமை கவுன்சிலுடனான பரப்புரை , இலங்கைக்கான ஐரோப்பிய வரிச் சலுகைக்கு எதிரான போராட்டம், இலங்கை உற்பத்தியையும் இலங்கையில் முதலீடுகளையும் எதிர்த்துப் போராடுதல். போரால் பாதிக்கப்பட்டோர் பதிவு , போர்க்குற்றத்தை நிருபித்தல் , இனப்படுகொலையை வெளிக்கொணரல்.

எமது போராட்டம் சர்வதேச அங்கீகாரத்தை பெறவேண்டும். அதற்கு நாம் சர்வதேசத்தின் ஆட்சியாளர்கள் , கொள்கை வகுப்பாளர்கள் , சர்வதேச சமூகத்தினர் ஆகியோரின் மனங்களை வெல்லவேண்டும் . அதேவேளை ஈழத்தில் பெரும் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் இயல்பு நிலைவாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இந்த இலக்குகளை அடைய வேண்டிய பெரும் பணி நம் முன்னே இருக்கின்றது இதற்க்காக தமிழ் தேசிய தளத்தில் இயங்கும் அனைத்து அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதேவேளையில் மக்களின்முன் வெளிப்படையாக அரசியல் பணிகளை முன்னெடுக்காது இரட்டைக்கொள்கையுடன் இயங்கும் அமைப்புக்கள், தனி நபர்களை மக்கள் உடனே இனங்கான வேண்டும் என பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

நன்றி


பிரித்தானியத் தமிழர் பேரவை


ஐரோப்பிய ஒன்றியத்தின் 48 பக்க அறிக்கைக்கு சிறீலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் நீதிக்கு முரனாக அரசியல் நலன் கருதி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைக் இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சிறீலங்கா அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து 6 மாதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதிக்கான வரிச்சலுகை நீடிக்கபடவுள்ளது நிலையில் இதற்கான முடிவை ஐரோப்பிய பாராளுமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் எடுக்கவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இடைநிறுதினாலும், 2010ம் ஆண்டு நடுப்பகுதி வரை வரிச்சலுகையை தொடர்ந்து பெறமுடியும். அதன் பின்னரே வரிச்சலுகை தொடர்பிலான பாதிப்பை சிறீலங்கா உணரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை சிறீலங்கா அரசாங்கம் எந்தவித பாதிப்புக்குள்ளாகது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 48 பக்க அறிக்கையில் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், மக்களின் சுதந்திரமான நடமாட்டம், நீதிக்கு முரணான படுகொலை, வதைகளுக்கு உள்ளாகுதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கைக்கு சிறீலங்கா அரசாங்கம் வரிக்கு வரி விளக்கம் அளித்துள்ளது.

[திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009]

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் விரைவில் அரசுடமையாக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள், கட்டடங்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றை விரைவில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடந்த 30 ஆண்டுகளாக உழைத்த பணம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்குத் தேவையான சகல சர்வதேச சட்டத்தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் சொத்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 கிரகணங்கள் நிகழ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்று ஜனவரி முதல்நாளான புத்தாண்டு அன்று நிகழ உள்ள சந்திரகிரகணம், 2 ஆவது 15ஆந் திகதி நிகழ உள்ள சூரியகிரகணம்.

சூரியகிரகணம் 108 ஆண்டுகளுக்கு பிறகு வரக்கூடிய ஒரு கங்கண சூரிய கிரகணமாகும்.

புவியை நிலவு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3,57,200 கிலோ மீட்டர் தூரத்திலும் புவியை விட்டு வெளியில் செல்கையில் 4,07,100 கிலோ மீட்டர் தொலைவிலும், சுற்றிவர நிலவு இருக்கும். தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்ற அளவு சற்று சிறியதாக இருக்கும்.

எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் ஒரு சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழு மையாக மறைக்க முடியாது. அதிகபட்ச கிரகணத்தின் போது சூரியனின் வெளி விளிம்பு ஒரு கங்கணம்போல வட்டமாக ஒளியுடன் தெரியும். இதுவே கங்கண சூரிய கிரகணம் எனப்படும்.

1901 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆந் திகதி கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. 108 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்வரும் ஜனவரி 15ஆந் திகதி மீண்டும் சூரிய கிரகணம் தெரிய உள்ளது.

தமிழகத்தில்......

தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலும் சந்திரனின் நிகழ்வின் மையப்பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு அதிகபட்ச சூரிய கிரகணத்தின்போது ஓரளவு வட்டமான வளைய வடிவில் சூரியன் தோன்றும், மேலும் கங்கண சூரிய கிரகணம் நிகழும்கால அளவு அதிகமாக இருக்கும்.

கன்னியாகுமரியில் கங்கண சூரிய கிரகணத்தைக் காண்பதற்கான விசேஷ ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கலைச் செல்வன், சுற்றுலா அதிகாரி அரிராதா கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், ஆர்.டி.ஓ.நடராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நிருபர் களிடம் கூறுகையில்,

"108 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தெரியும் கங்கண சூரிய கிரகணம் கன்னியா குமரியில் முற்பகல் 11.04 மணிக்குத் தொடங்குகிறது. மதியம் 3.05 மணிவரை கிரகணம் தெரியும். 1.14 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிகழும்.

இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது , அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும். கண் பார்வை கூட இழக்க நேரிடலாம்.

எனவே தகுந்த அறிவியல் முறைப்படி சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு தமிழ்நாடு 'சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி' உதவியுடன் கண் கண்ணாடிகள் மூலமாகவும், திரைகள் மூலமாகவும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சூரிய கிரகணத்தை தெளிவாகப் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றார்.

தமிழகம், கேரளா தவிர இந்தியாவின் பிறபகுதிகளில் இது பகுதி அளவில் சூரிய கிரகணமாக தெரியும். அவர்கள் சூரியனின் ஒரு பாதியை சந்திரன் மறைப்பதுபோல் இருப்பதை காண்பார்கள். சென்னையில் கிரகணத்தின் போதுசுமார் 88.5 விழுக்காடு வரை சூரியன் மறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலராக கடமையாற்றிக்கொண்டிருந்தபோது சிறிலங்கா - மலேசிய அரசுகளின் கூட்டுச்சதியால் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்ட கே.பத்மநாதன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று புலனாய்வுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கே.பி. இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார். இவ்வாறு அவர் விசாரிக்கப்படுகையில் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாகவும் இந்த சித்திரவதைகளை தாங்க முடியாமல் அவர், பல தடவைகள் மயக்கமற்ற வீழ்ந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராணுவ புலனாய்வு பிரிவினர் கேட்ட பல தகவல்களை வெளியிட கே.பி. மறுத்ததை அடுத்து, அவர் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் காதுகள் நெரிக்கப்பட்டும், கைவிரல்கள் மடக்கப்பட்டும், தோள்பட்டையை அசாதரண நிலையில் மடக்கியும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் இதன்போது அவர் பல தடவைகள் மூர்ச்சையுற்று வீழ்ந்ததாகவும் இராணுவ மருத்துவர்கள் அவரை மயக்கநிலையிலிருந்து எழுப்பினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தடவைகள் அவர் மூச்செடுக்கமுடியாமல் மயக்கமுற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கே.பியை சந்தித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சே, சந்திப்பு இடம்பெற்று முடிந்து போகும் முன்னர் பயன்படுத்த தகாத - கெட்ட வார்த்தைகளால் - சிங்களத்தில் கே.பியை திட்டிவிட்டுச்சசென்றார் என்றும் புலனாய்வுத்துறை தகவல்கள் மேலும் தெரிவித்திருக்கின்றன.

கே.பி.மீதான இந்த சித்திரவதை விடயம் வெளியில் தெரிந்துவிடும் என்ற காரணத்தினால்தான் அவரை விசாரணை செய்வதற்கு இந்திய புலனாய்வுத்துறையினர் பல தடவைகள் சிறிலங்கா அரசிடம் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அதனை சிறிலங்கா அரசு நிராகரித்துவிட்டதாகவும் தெரியவருகிறது.


ஈழத்தமிழர்களது பாதுகாப்பு அரனாக முப்பதாண்டுகளிற்கு மேல் விளங்கிய தமிழீழ அரசும் அதன் கட்டுமானங்களும் கடந்த மே 17ம் திகதியுடன் அழிக்கப்பட்டதாக கூறி வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைத்துவந்த சிங்கள, இந்திய அரசுகள் தற்போது தமது கூற்றுக்களை மறுதலிக்க முற்பட்டுள்ளன.

கதிகலங்கி நிற்கும் சிங்களம்

தமிழீழ விடுதலைப்புலிகளது தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது நிழலைக்கூட நெருங்க முடியாத சிங்கள பிராந்திய ஆக்கிரமிப்புப்படைகள் ஊடகங்கள் மூலமாக தினமும் ஒவ்வொரு விதமாக கொன்று இதுநாள்வரையில் பரபரப்பை ஏற்படுத்திவந்தனர்.

இவை வெறும் செய்திகள் அல்ல. களத்திற்கு அப்பால் அவர்களால் எட்டமுடியாத தூரத்திலிருக்கும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய எம்மை நெருங்கிவந்து எமக்கே தெரியாது எம்மை கொல்லும் நாசகார சதித்திட்டம்.

களத்திலே புலிகளை முற்று முழுதாக அழித்துவிட்டதாக மார்தட்டி நிற்கும் சிங்களம் உள்ளுர கதிகலங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

இவ்வளவு காலமும் புலிப்படைகளின் தாக்குதல்களை களத்திலே எதிர்பார்த்த வண்ணமிருந்தனர். ஆனால் இன்று எங்கிருந்து எந்த வடிவத்தில் அடுத்த கட்டபாய்ச்சல் இடம்பெறப் போகின்றது என்பது தெரியாது சித்தம் கலங்கி நிற்கின்றது சிங்களப் படை.

காட்டுக்குள் வனவாசம் செய்யும் கரிய வேங்கைகள் எப்போது வெளிப்படும் அல்லது நாடு கடந்து இருக்கும் மறவர் படை எப்படியான இடிகளை இறக்கப்போகின்றது எனத் தெரியாது திகைத்து நிற்பதன் வெளிப்பாடாகவே குக்கிராமங்களில் கூட குண்டு துளைக்காத கண்ணாடியால் அமைக்கப்பட்ட மேடையில் நின்று மகிந்த ராசபக்சே தனது வீராவேச பேச்சுக்களை நிகழ்த்திவருவதும், விமானநிலையத்தின் ஊடாக நாடுதிரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகளை இலக்குவைத்து துரோகிகள் துணையுடன் கயவர் படை காத்திருக்கின்றமையும் வெளிப்படுத்துகின்றன.

காடு மேடுகளாய் காட்சிதந்த வன்னிபெருநிலப்பரப்பில் மயான பூமியாக காணப்பட்ட முக்கிய நகரங்களை வளப்படுத்தி தலை வணங்கா தேசமாக கட்டிஎழுப்பி தனி அரசு நடாத்தி இறுமாந்திருந்தோமே! இன்று முன்பைவிட சர்வநாசமாய் போய் கற்குவியலை விஞ்சும் பிணக்குவியல்களாய் காட்சிதரும் அந்த மண்ணை வளப்படுத்தி மீண்டும் அரசமைப்பதற்கு சாம்பல் மேட்டில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்சு பறவைகள் போன்று புறப்பட்டுவரும் புதிய புலிப்படையை எப்படி எதிர்கொள்வதென்று வழிதெரியாது விழி பிதுங்கி நிற்கின்றது சிங்களப்படை.

ஆனால் நாம், தலைவரது இருப்பு பற்றிய, எதிரிகளாலும் துரோகிகளாலும் பரப்பப்பட்டுவரும் பொய் செய்திகளை ஆராய்வதில் எமக்குள் அடிபட்டுக் கொண்டும் அல்லது முரண்பட்டுக் கொண்டிருப்பதிலும் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எமது தேசியத்தலைவர் அவர்கள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களது நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பெரும்தலைவர். அதனால் ஏற்பட்ட சலசலப்பாக இருந்தலும் எதிரிகளும் துரோகிகளும் எந்த நோக்கத்துடன் இவ்வாறான செய்திகளை பரப்பிவருகின்றனவோ அதனை ஈடேற்றுவது போன்றே எமது செயற்பாடுகள் அமைந்துவிடுகின்றன.

தர்மத்தின் வழி நிற்கும் போராட்டம். நிச்சயம் வெற்றி நமதே.

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும், வாய்மைக்கும் பொய்மைக்கும் யுகங்கள் கடந்தும் யுத்தம் நடைபெற்றுவந்தாலும் ஈற்றில் தர்மமும், வாய்மையுமே வெற்றி பெற்றுள்ளது என்பதனை எம்மவர்கள் இவ்விடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

எமது தலைவனும் தர்மத்தின் வழிநின்றே எமது விடுதலையை வென்றெடுக்க போராடி வந்தார்ஃவருகின்றார். அதனால்தான் எதிரிகளை மட்டுமே இனம் கண்டு யுத்தம் புரிந்து வந்தார். அப்பாவி சிங்களவர்களது வாழ்விடங்களை அழிக்கவில்லை, பள்ளிக்கூடங்கள், வழிபாட்டிடங்களை குண்டு வீசி அழிக்கவில்லை. அவர்களை அகதிகளாக்கி ஒரு வேளை கஞ்சிக்கும் ஒருவாய் தண்ணீருக்கும் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளவில்லை. ஏன் அவர்கள் மீது உலகில் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி கொல்லவில்லையே..!

அவ்வாறு செய்வதற்கு முடியாமலில்லை. அதற்கு சிங்களப்படைகளைவிட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கே அதிக வாய்ப்புக்கள் இருந்ததை மறுக்கமுடியாது.

இருப்பினும் தமிழர்களது சுதந்திர வாழ்விற்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் விளங்கிய சிங்கள அரசபோர் இயந்திரங்களுக்கு எதிராகவே யுத்தம் செய்தார்கள் புலிகள்.

இது மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசிவரும் மேற்குலக நாடுகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும் ஈழ மண்ணில் ஏனோ கண்ணாம்மூச்சி ஆடிவிட்டனர்.

பல வல்லரசுகள் உள்ளடங்கலாக இருபதிற்கு மேற்பட்ட நாடுகளது நேரடி ஆளணி, ஆயுத தளவாட உதவிகள், தொழில் நுட்ப உதவிகள் என்பவற்றிற்கும் மேலாக உளவு தகவல் பரிமாற்றம் மூலமாகவும் அதீத பலம் பெற்ற சிங்களப்படை சுமார் ஒரு இலட்சம் தமிழ் மக்களை கொன்றொழித்தது போதாதென்று தற்போதும் இடைவிடாது கொன்று குவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சில பல காரணங்களுக்காக சிங்கள அரசுடன் கைகோர்த்து ஈழத்திலே இரத்தவேட்டை நடாத்திய உலக நாடுகள் தற்போது தமது நிலைபாட்டை மாற்றியமைக்க முற்பட்டு வருகின்றன.

சிங்கள்த்தின் பிதற்றல்…

தேசியத்தலைவர் அவர்களை பல்வேறு வடிவங்களில் கொலை செய்ததாக செய்திகள் பல வெளிவந்த நிலையில் தற்போது அய்ரோப்பாவில் பாதுகாப்பாக உள்ள தேசியத்தலைவர் வரும் மாவீரர் நாளில் வெளிப்படுவார் என புதுக்கதை சொல்லி வருகின்றது சிங்களம்.

தலைநகரிற்குள் ஊடுருவியுள்ள தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்த கரும்புலிவீரர்களால் பாரிய தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்வு கூறிவருகின்றது சிங்களப்படை.

இறுதிக்கட்டப் போரில் இருந்து தப்பித்துப் போன விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள், போராளிகள் பலர் நாட்டைவிட்டு தப்பித்துப் போயுள்ளதாக அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வருவதுடன் நாட்டைவிட்டு தப்பி ஓடும் நோக்கத்துடன் கொழும்பிலும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் தலைமறைவாக இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை கைது செய்துள்ளதாகவும் செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

இவை போதாதென்று, சிறிலங்காவில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட போதிலும் மேற்குலக நாடுகளில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒன்றினைந்து வலுமிக்க ஒரு போராட்ட அமைப்பை உருவாக்க கூடிய அபாயம் இருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் எம்.கே.நாராயனன் கட்டியம் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகள் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் பலமான கட்டமைப்புடன் தற்போதும் இருப்பதான தோற்றப்பாட்டை உறுதி செய்வதற்கு விளைகின்றது சிறிலங்கா அரசு.

முன்னர் முற்றுமுழுதாக அழித்தொழித்து விட்டதாக கூறி தேசிய வெற்றி வழா கொண்டாட்டங்கள் மேற்கொண்டு வந்த சிங்கள அரசு தற்போது இவ்வாறு கூறுவதற்கான காரணங்கள் வெளிப்படையானவையே.

இறுதிப்போரில் தம்மோடு அணிசேர்ந்து நின்ற பல மேற்கத்தேய நாடுகள் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதோடில்லாது நேரடி மறைமுக அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றமையின் வெளிப்பாடே ஆகும்.

மாற்றமடையும் மேற்குலக நாடுகளது அணுகுமுறை.

இறுதிப்போரிற்கு பின்னரான தீர்வுத்திட்டம் குறித்து உறுதியளிக்கப்பட்டதற்கு ஏற்ப சிறிலங்கா அரசு இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்காததனால் ஏமாற்றமடைந்த மேற்குலக நாடுகள் தமது நிலைப்பாட்டினை மாற்ற முட்பட்டுள்ளன.

இவைதவிர அன்மையில் சர்வதேச ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட, தமிழ் இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லும் காணொளி காட்சிகள் மூலம் சிங்களப் படைகள் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளமையினால் உலக நாடுகள் அதிர்ச்சி அநடந்துள்ளன.

கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நிர்வாண நிலையில் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், வவுனியா தடுப்பு முகாம்களில் முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கிலான தமிழ் மக்களது அவலங்களும் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுவரும் சூழ்நிலையில் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து தாமும் அப்பழியை ஏற்கும் நிiலையில் இருந்து தப்பிப்பதற்காகவே இவ் உலக நாடுகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முன்வந்ததாக கருதவேண்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சிறிலங்காவிற்கும் மேற்குலக நாடுகளிற்கும் இடையிலான உறவு முன்பை போன்று ஒட்டுதல் இல்லாது விரிசல் நிலையிலையே காணப்படுகின்றது.

சிறிலங்காவின் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், படை அதிகாரிகள், ஆளும்கட்சி பாளுமன்ற உறுப்பினர்கள் என மேற்குலக நாடுகளால் வீசா வழங்க மறுக்கப்பட்டவர்களது பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

நடைபெற்று முடிந்த அய்க்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக மகிந்த ராசபக்சேவுடன் அமெரிக்க செல்வதற்கு விண்ணப்பித்த தமிழினத் துரோகி கருணா உள்ளிட்ட சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு வீசா மறுக்கப்பட்டது.

இப்பயணத்தின் மூலமாக தமிழன துரோகி கருணாவிற்கும் இறுதிப்போரில் களப்பணியாற்றிய இராணுவ அதிகாரிகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுக்கொடுக்க முயன்ற ராசபக்சவிற்கு பெரும் எமாற்றம் ஏற்பட்டிருப்பது நிச்சயம்.

கனடாவிற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்ள முயன்ற சிறிலங்கா இராணுவப்பேச்சாளர் கெகலிய ரம்புக்வெலவிற்கும் வீசா மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இங்கிலாந்து நாடும் பெரும் கெடுபிடிகளை விதித்து சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கான வீசா வழங்க மறுத்து விட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கும் புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்களது செயற்பாட்டினையும் முடக்கி முற்றுமுழுதாக தமக்கான அச்சுறுத்தலை போக்கி கொள்வதற்கு முயற்சிக்கும் சிங்களப் பேரினவாத அரசிற்கு இது பெரும் அடியாகவே அமைந்துள்ளது.

பல்வேறுபட்ட உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டு திரும்பத் திரும்ப தமது கருத்துக்களை திணித்து எவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது உலகளவில் தடையை ஏற்படுத்தினார்களோ அது போன்று தற்போதும் முயன்று புலம் பெயர்வாழ் ஈழத்தமிழர்களதும், தலைமையினதும் முயற்சிகளை தோற்கடித்து விடலாம் என நினைத்திருந்தது சிங்களம்.

மாறிவரும் உலக ஒழுங்கிற்கேற்ப இம்முயற்சி தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டிருப்பினும் இவ் அச்சுறுத்தல் முற்றிலுமாக எம்மை விட்டு அகலவிலை.

அடிமடியில் கைவைக்கும் நிதிவழங்கும் நாடுகள்.

தமது நாட்டிற்கு வருகைதருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதோடில்லாது நிதி உதவி வழங்குவதிலும் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன மேற்குலக நாடுகள்.

மூன்று மாதங்களிற்கு ஒருமுறை நிலைமைகள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே பகுதி பகுதியாக நிதி உதவி வழங்கப்படும் என சர்வதேச நாணயநிதியமும் கடிவாளத்தை தன் கையில் எடுத்துள்ளது.

தென்பகுதியில் இலட்சக்கணக்கிலான இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிவரும் தைத்த ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகையினை அய்ரோப்பிய ஓன்றியம் விலக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்தொழித்து விட்டு பின்னர் ஏதாவது காரணங்களை கூறி சர்வதேச நாடுகளை ஏமாற்றிவிடலாம் என நினைத்து செயற்பட்டு வந்த சிங்கள பேரினவாத அரசிற்கு மேற்கூறியவை பெரும் அபாய செய்திகளாகவே அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

இறுதிப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் செய்மதி படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்திருக்கும் வல்லரசு நாடுகள் இவ்வாறு சிறிலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டில் நிற்பது ஒருவகையில் எமக்கு சாதகமானதே.

விலகும் இந்திய திரை.

மேற்குலக நாடுகள் இவ்வாறான போக்கை கடைப்பிடிக்கும் நிலையில் இந்தியாவும் தனது நிலைப்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளதாகவே தோன்றுகின்றது.

இறுதிவரை சிறிலங்காவிற்கான முழுமையான பாதுகாப்பு கவசமாக இந்தியா செயற்பட்டுவந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.

சிறிலங்காவின் இனப்படுகொலை செயற்பாட்டிற்கு எதிரான தீர்மாணங்கள் பலதடவை அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மாணங்கள் நிறைவேறாது தடுத்த பெருமை இந்தியாவையே சாரும்.

வெளிப்படையான சிறிலங்காவிற்கு ஆதரவான நிலைப்பட்டின் மூலம் மேற்குலகிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு திரையாக இந்தியா செயற்பட்டுவந்த நிலையில் தற்போதைய மேற்குலக நாடுகளது நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றமை இந்தியா எனும் பாதுகாப்பு திரை விலகுவதையே எடுத்துக்காட்டுகின்றது. இருந்தும் சர்வதேசம் நிதி உதவிகளை நிறுத்தியும் நிறுத்த முற்பட்டுள்ள நிலையிலும் இந்தியா யாமிருக்க பயமேன் என்பது பேல தடையற்ற நிதி உதவியையும் வழங்கிவருகின்றமை முழுமையாக தமது ஆதிக்கம் அற்றுப்போவதை விரும்பாததையே எடுத்துக்காட்டுகின்றது.

சீனாவுடனான காதலால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சிங்களம்.

தமிழின அழிப்பு போரில் சிறிலங்காவுடன் ஓரணியில் நின்ற மேற்குலக நாடுகளும் இந்தியாவும் எதிர் நிலைப்படு எடுப்பதற்கு, முற்றுமுழுதாக சீனாவின் பக்கம் சாயும் சிறிலங்காவின் நிலைப்பாடே முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

இதன் வெளிப்பாடகவே, தனது வதிவிட உரிமையினை மீள் உறுதி செய்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னால் இராணுவத்தளபதியும் இன்னால் கூட்டுப்படை கட்டளைத் தளபதியுமான சரத் பொன்சேகா மீது கிடுக்குப் பிடி போட்டுள்ளது ஒபாமா அரசு.

இறுதி யுத்தம் நடைபெற்றபோது இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் போர்குற்றங்கள், மனித உரிமை மீறல் செயற்பாடுகள் என்பனவற்றிற்காக பொன்சேகாவிடம் விளக்கம் கோரியுள்ளது ஒபாமா அரசு.

இப்போர் குற்றங்கள், மனிதஉரிமை மீறல் சம்பவங்களுடன் சிறிலங்காவின் பாதுகாப்புதுறை செயலாளரும் ராசபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராசபக்சவும் தொடர்பு பட்டுள்ளநிலையில் அவர்மீதும் போர்குற்றவிசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இவ்விசாரணையில் கோத்தபாயவிற்கு எதிராக சாட்சியமளிக்கவும் பொன்சேகா பணிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் மகிந்தவிற்கு மாற்றாக சரத் பொன்சேகா களமிறக்கப்பட இருக்கும் நிலையில் அமெரிக்க அரசினது பிடியில் பொன்சேகா இருப்பது ராசபக்ச அரசிற்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.

இதன் வெளிப்பாடாகவே சிறிலங்கா அரசாங்கம் இச் செயற்பாட்டிற்கு தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

அன்மைகாலமாக சீனாவின் வழிகாட்டுதலில் இயங்கிவரும் சரத்பொன்சேகா தலைமையில் மாற்று அணி ஒன்று சிறிலங்காவில் ஏற்படுவதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்து வந்த அமெரிக்காவிற்கு இச்சந்தர்ப்பம் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகவே நோக்கப்படுகிறது.

தமது சார்பாக செயற்பட வைப்பதற்கான கடிவாளமாகவே இப் போர்குற்ற விசாரனையை அமெரிக்கா பார்ப்பதாகவே கருதவேண்டியுள்;ளது.

தெற்காசியப்பிராந்தியாத்தில் தற்போது சிறிலங்காவை விட்டால் வேறு ஒரு களம் கிடைக்கப்போவதில்லை. அதனால் இவ்விடயத்தை தமது பூகோள நலன்களை முன்னிறுத்தி அமெரிக்கா கையாளப் போகின்றதா அல்லது இதயசுத்தியுடன் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுக்கொடுக்கும் வரை தொடரப்போகின்றதா என்பதே தற்போதைய எதிர்பார்பாக உள்ளது.

எது எவ்வாறாயினும் இவ் விசாரணை செல்லும் பாதையை தீர்மாணிக்கும் சக்தியாக நாமும் விளங்குவது பெரும் பாய்க்கியமாகும்.

தலைவன் கட்டளையினை ஏற்று களம் காண புறப்படுங்கள்.

மாறிவரும் உலக ஒழுங்கு சிறிலங்காவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தாலும் அதனை நிரந்தரமானதாகவும் பொருளாதார தடை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு எம்முடையதாகும்.

எல்லாமே முடிந்துவிட்டதாக எண்ணி மூலையில் முடங்கி இருக்கும் அளவிற்கு என்ன ஆகிப் போய்விட்டது. முன்பிலும் வீரியமாக போரட்டக்களத்தில் அணிவகுக்க வேண்டிய காரண காரியங்கள் இருக்கும் போது ஏன் இவ்வாறு முடங்கிப் போயுள்ளீர்கள் என்று விளங்கவில்லை.

யாவற்றையும் முன்னுனர்ந்த தேசியத் தலைவரே அடுத்த கட்டத்திற்கான போராட்டத்தை எம்மிடம் ஒப்படைத்திருந்தார்.

தலைவன் கட்டளையை ஏற்று களம் காண புறப்பட வேண்டிய நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?

எமக்காகவும் உங்களுக்காவும் உங்களது உறவுகளுக்காகவும் தான் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தம்மையே தந்துள்ளார்கள்.

முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும் விடுதலைப் போரில் பெரும் துணையாக நின்று சாவடைந்த இலட்சக்கணக்கிலான பொதுமக்களதும் கனவான சுதந்திர தமிழீழத்தை அடைவதே அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

முன்பைவிட வீச்சாக எமது போராட்டங்களை கூர்மைப்படுத்தி சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல் செயற்பாட்டை அம்பலப்படுத்தி சிங்கள இனவாத அரசிற்கு அனைத்துலகளவில் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

கால மாற்றத்திற்கு எம்மை உட்படுத்தி புதியவர்களாக உலகம் வியக்கும் வண்ணம் பேரெழுச்சி கொள்வோம்.

முப்பதாயிரத்திற்க மேற்பட்ட மாவீரர்களதும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களதும் கனவுகளை நனவாக்குவதும், நடைபிணங்களாக கொடிய வதைமுகாம்களில் வாடும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உடன்பிறப்புக்களை மீட்டு நல் வாழ்வு வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் எம் ஒவ்வொருவரதும் தோள்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பணியாகும்.

சர்வதேச ஊடகங்களை சேர்ந்தவர்களே கட்டுப்ப்hடுகளையும், தடைகளையும் மீறி சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டு காட்டிவரும் நிலையில் அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலகன போராட்டங்களை முன்னெடுத்து சர்வதேச நாடுகளை இயங்கு நிலையில் வைத்திருக்க வேண்டிய மகத்தான பணியும் எம்முன் உள்ளது.

சிறிலங்கா அரசபிரதிநிதிகளுக்கு தடைவிதித்து வரும் நாடுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்க செயற்குழு உறுப்பினர்களை அனுமதித்துள்ளதுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளமை மாபெரும் வெற்றியாகும்.

வரலாறு திரும்பும் என்பதற்கினங்க மிக மிக விரைவாகவே எமக்கு எதிரான களத்தில் சிங்களத்துடன் கைகோர்த்திருந்த நாடுகள் எம்மை ஆதரிக்க முற்பட்டுள்ளமை சிறந்த புறச்சூழலை ஏற்படுத்தியுள்ளது.

வீர சபதமேற்போம் வாரீர்.

உலகத்தமிழர்களெல்லாம் உவகை கொள்ளும் நாளாகவும் பேரெழுச்சி கொண்டு அணிதிரண்டு வீர சபதம் ஏற்கும் நாளாகவும் நவம்பர் 26,27ம் நாள்கள் அமைந்துள்ளன.

இப்புணித நாட்களில் நமது இருப்பிற்கும் சுதந்திரமான வாழ்விற்கும் வழிகாட்டி சென்ற மாவீரத் தெய்வங்களது வழிநின்று வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளது சூழ்ச்சிகளை முறியடித்து சுதந்திர தமிழீழத்தை அடையும்வரை ஓயப்போவதில்லை என்றும் தடைகளை தகர்த்தெறிந்து தமிழீழம் கான்போம் என்றும் உறுதி ஏற்போம்.


எத்தடை வரினும் இப்படை தோற்காது.


“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

இரா.மயூதரன் (04-11-2009)


அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினாலோ வேறு அரச நிறுவனத்தினாலோ அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விபரம் வழங்குவதற்காக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினரால் தொடர்பு கொள்ளப்பட்டிருந்ததாக விபரங்கள் வெளியாகியிருந்தன.

அமெரிக்க உள்துறை மற்றும் குடிவரவுத் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த விசாரணைகளில் சரத் பொன்சேகா பங்குபற்றவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

சரத் பொன்சேகா ஏற்கனவே அமெரிக்காவைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் நாளை அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவுள்ளார் எனவும், அவரிடம் அமெரிக்கா, இன்று மாலை விசாரணை நடத்தவிருந்த போதிலும் அதனை நிராகரித்துவிட்டு அவர் பயணமாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடு திரும்புமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Search This Blog

Loading...
@

புலிகளின்குரல்

T.R.T .தமிழ்ஒலி வானொலி.

Followers

Blog Archive

ஈழம் செய்திகளின் பார்வையாளர்கள்