Saturday, April 24, 2010

மகிந்த தலைமையிலான பேரினவாத எழுச்சியின் மூன்றாவது கட்டம்!

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எழுச்சி தற்போது மூன்றாவது கட்ட எழுச்சியாய் அமைந்துள்ளது. கொழும்பின் முன்னணி ஊடகமான Daily Mirror பத்திரிகை ஏப்பிரல் மாதம் 10ஆம் திகதி ‘தேசியவாதத்தின் எழுச்சி’ என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்று எழுதியிருந்தது.
இந்த ஆசிரியர் தலையங்கத்தில் 2009ஆம் ஆண்டு மே மாத போர் வெற்றியுடன் எழுந்த சிங்கள தேசியவாத உணர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள தேசியவாத உணர்வின் தீய பக்கங்களை இந்த ஆசிரியர் தலையங்கம் அடையாளம் காட்டத் தவறிவிட்டது. அத்தகைய எழுச்சியின் வெளிப்பாடாய் நடந்து முடிந்த சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் அது விபரித்துள்ளது.

தனிச்சிங்களச் சட்டம் பற்றிய விடயத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இனவாதத் தேவைக்காக இந்த யாப்பின் சரத்தை மீறி ஒரு சாதாரண சட்டத்தை இயற்றும் தொடக்கத்தை பண்டாரநாயக்க ஆரம்பித்தார். அதாவது இருபத்தொன்பதாவது சரத்தை மாற்ற அல்லது மீற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஆனால் இச்சரத்தை வைத்துக் கொண்டு அதை மீறும் வகையில் தனிச்சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்க நிறைவேற்றினார். இங்கு சிங்கள இனவாத தேவைக்காக சாதாரண சட்டத்தால் யாப்பு மீறப்பட்டு இருக்கிறது. எனவே இனவாதம் யாப்பு நெறிமுறைகளையோ தர்ம விதிகளையோ மீறும் தன்மை உள்ளதாய் வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.

தமிழரின் நலன்கள் பற்றிய சட்டங்களை கொண்டு வருவதாயின் தாம் உருவாக்கிய யாப்பின் தடைகளை சாட்டாகக் காட்டி, அதனை சிங்கள தலைவர்கள் நிராகரித்து விடும் விந்தை வெளிப்படையானது. தற்போது அத்தகைய சாட்டைக் கூட சொல்ல முடியாதவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களுடன் தெளிவான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உண்டு. ஆனால் அவர் அதனைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான தீர்வை காண்பாரா என்பதே மேற்படி இனவாத வரலாற்றுப் போக்கை விளங்கிக் கொண்டோர் புரிந்து கொள்வர்.

இதனை உண்மையாக மதிப்பீடு செய்வது அவசியம். இது தேசியவாத எழுச்சி அல்ல – மாறாக பேரினவாத எழுச்சியாகும். இதற்கு இதுவரை மூன்று கட்டங்கள் உண்டு. முதலாவது கட்டம், 1880களில் அநாகரீக தர்மபால தலைமையில் ஏற்பட்ட எழுச்சியாகும். இரண்டாவது கட்டம், பண்டாரநாயக்க தலைமையில் 1950களில் ஏற்பட்ட பேரினவாத எழுச்சியாகும். தற்போது மூன்றாவது கட்டமாக, மகிந்த ராஜபக்ச தலைமையில் 2005இன் பின் ஏற்பட்ட யுத்த எழுச்சிப் பேரினவாதம் ஆகும். 2009ஆம் ஆண்டு மே மாத யுத்த வெற்றியுடன் கட்டுப்படுத்தப்பட முடியாத வக்கிர எழுச்சியை பேரினவாதத்தின் அடுத்த கட்டம் கொண்டுள்ளது.

Righteousness என்ற தலைப்பில் அடங்கியுள்ள அநாகரீக தர்மபாலாவின் எழுத்துக்கள் அடங்கிய பாரிய நூல் தொகுதி ஒன்றே 1880களில் உருவான சிங்கள பௌத்த மேலதிக்க வாதத்துக்கான சித்தாந்தமாய் அமைந்தது. இதுவே எதிர்கால சிங்கள மேலாதிக்க வாதத்துக்கான அடிப்படை வேத நூலாயும் அமைந்தது.

இவ்வாறு தொடங்கிய முதலாம் கட்ட இனவாதம் கிறிஸ்தவ எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, மலையாளிய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என பல தளங்களில் உருவான போதும் கிறிஸ்தவ, இஸ்லாமிய எதிர்ப்பே அதன் முதன்நிலை இலக்காய் அமைந்தது. அது முதலில் சிங்கள கிறிஸ்தவர்களின் இரத்தத்தையே 1883 கொட்டஞ்சேனை கலகத்தின் மூலம் உறிஞ்சிக் குடித்தது. அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான 1915ஆம் ஆண்டு கம்பளை கலகத்தின் மூலம் இன்னொரு இரத்தக் களரியை அரங்கேற்றி தனது முதலாம் கட்ட சிங்கள, பௌத்த இனவாதத்தை நிறைவேற்றியது.

அடுத்து, இரண்டாம் கட்ட சிங்கள, பௌத்த மேலாதிக்க வாதம் 1950களில் எழுச்சி பெறத் தொடங்குகின்றது. 1953ஆம் ஆண்டு வெளியான விகாரை உள் புரட்சி (Revolt in the temple) என்ற பிரபலமான நூலும், பௌத்தத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் (Buddhism Betrayed) என்ற தலைப்பில் 1955ஆம் ஆண்டு வெளியான பௌத்த விசாரணைக் கமிஷன் அறிக்கையும் இரண்டாம் கட்ட சிங்கள இனவாத்துக்கான சித்தாந்த நூல்களாய் அமைந்தன. இந்த இரண்டாம் கட்ட சிங்கள இனவாதத்துக்கான அரசியல் தலைமையை பண்டாரநாயக்க அளிக்க தொடங்கினார். இது தமிழருக்கு எதிரான சட்டங்கள், நிர்வாக அதிகார வர்க்க ஏற்பாடுகள், இனப்படுகொலை வன்செயல்கள் என முப்பரிமாணங்களையும் கொண்டு எழுச்சி பெற்றது.

1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் தொடங்கிய சிங்கள யாப்பும், கூடவே கருக்கொண்ட இராணுவப் பரிமாணமும் 2005ஆம் ஆண்டு வெளியான மகிந்த சிந்தனையோடும், முழு அளவிலான இராணுவ பரிமாணத்தோடும் சிங்கள தீவிர இனவாதத்தின் மூன்றாம் கட்டம் உருத்திரண்டது.

2005ஆம் ஆண்டு வெளியான மகிந்த சிந்தனை ஒன்றும், 2010இல் வெளியான மகிந்த சிந்தனை இரண்டும் மூன்றம் கட்ட தீவிர இனவாதத்துக்கான சித்தாந்த நூல்களாய் அமைந்தன.

மகிந்தவின் மூன்றாம் கட்ட தீவிர மேலாதிக்க இனவாதம் மூன்று வகை சக்திகளை உள்ளடக்கி இருந்தது. ஒன்று நேரடியான சிங்கள இனவாதிகளை முதல் தளமாகவும், தமிழ் சக்திகளின் அரவணைப்பை ஊட்டமாகவும் வெளிநாட்டு சக்திகளை இறுகத்தழுவி இராட்சத பலமாகவும் கொண்டு தமிழின அழிப்புக்கான தீவிர இனவாதத்தை முன்னெடுத்தார்.

அதேவேளை, அவரது இனவாதத்தில் இரு பரிமாணங்கள் தெரிகின்றன. மகிந்த சிந்தனை ஒன்று தமிழின அழிப்பு படுகொலைக்கான அழைப்பாய் அமைய, மகிந்த சிந்தனை இரண்டு படுகொலையால் ஏற்பட்ட வெற்றியை பாதுகாப்பதற்கான ஒரு அறைகூவலாய் அமைகின்றது.

2010இல் ஏற்பட்ட இரண்டு தேர்தல் வெற்றிகளும் இனவாதத்தின் இன்னொரு மறைமுக வளர்ச்சியாகும். எனவே மூன்றாம் கட்ட தீவிர இனவாதத்துக்கு இருக்கும் இரு பரிமாணங்களையும் வகைப்படுத்தி புரிந்து கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்களில் முடிவடைந்த எண்பதாயிரம் மக்களைப் பலி கொண்ட படுகொலைக்காக வெட்கப்படுவதற்கு பதிலாக, சிங்கள இனம் அதற்காக பெருமைப்பட்டு மகிந்தவுக்கு ஆதரவு அளித்துள்ளதையே பாரிய இரு தேர்தல் வெற்றிகளும் காட்டுகின்றன. இது சிங்கள தேசிய வாதத்தின் அபகீர்த்தி மிக்க பக்கத்தை ஜனத்திரள் ஆதரவோடு வெளிக் காட்டுகின்றது. இதனைப் புரிந்து கொண்டால் மட்டுமே எதிர்காலத்தைப் பற்றி நாம் முன் உணரவும், திட்டமிடவும் முடியும்.

பண்டாரநாயக்காவின் இரண்டாம் கட்ட சிங்கள இனவாதத்தை தனிச் சிங்கள சட்டம் என்பதற்கு உள்ளால் மட்டுமன்றி சிங்கள bureaucracy பற்றிய கோட்பாடும், நடைமுறையும் பற்றிய விடயத்திற்கு உள்ளாலும் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் bureaucracy சிங்களமயமானது பற்றி மட்டுமே பலர் பேசுகிறார்கள். ஆனால் அது கூடவே ஏனைய இனங்களுக்கு எதிரான ஒரு ஏற்பாடாக அந்த சிங்கள bureaucratic set – up பண்டாரநாயக்க யுகத்தில் வடிவமைக்கப்பட்டதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

இவை இரண்டுடனும் இணைத்து மேலும் ஒரு அம்சமாக தமிழருக்கு எதிரான வன்செயல் படுகொலைகளையும் சேர்த்து சிங்கள தீவிர இனவாதத்தை அவர் வடிவமைத்திருந்தார்.

சிங்கள பேரினவாதத்துக்கு பண்டாரநாயக்கவின் தளத்தில் நின்று மகிந்த மகுடம் எழுப்பி உள்ளார். யுத்தவெறி பேசி 2005இல் நடைபெற்ற தேர்தலில் வென்ற மகிந்த, முள்ளிவாய்க்கால் இரத்தத்தில் நீந்தி 2010இன் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுகின்றார்.

கலிங்கத்துப் போரின் இரத்த ஆறு அசோக சக்கரவர்த்தியின் மனதை திருத்தியதாக வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் முள்ளிவாய்க்கால் இரத்தாறோ நவீன துட்டகைமுனுக்களுக்கு நீந்தி விளையாடுவதற்கான நீச்சல் தடாகமாக காட்சியளிக்கிறது. இக்காட்சியை சிங்கள மக்கள் கைதட்டி இரசிப்பது தான் மூன்றாம் கட்ட சிங்கள தீவிர இனவாதத்தின் வெளிப்பாடாய் காணப்படுகிறது.

மகிந்த சிந்தனை ஒன்று யுத்தத்துக்கான இனவாதமாய் அமைய, மகிந்த சிந்தனை இரண்டு யுத்த வெற்றியை பாதுகாப்பதற்கு என்ற இன்னொரு இனவாத கோசமாய் அமைகின்றது.

இவ்வாறு மேலாதிக்க இனவாதமானது காலகட்ட தேவைக்கான சித்தாந்த வளர்ச்சிகளை கட்டம் கட்டமாக முன்வைத்து இருக்கும் போது முற்போக்கான தமிழ் தேசியமோ வளர்ச்சிக்கு பொருத்தமான தெளிவான தேசிய சித்தாந்தத்தை முன்வைத்து இருக்கவில்லை. ‘எக்காளத் தொனியற்ற மோட்சத்திற்கான பயணமும்’, ‘சித்தாந்தமற்ற புரட்சியும் சாத்தியமற்றது’ என இருகூற்றுக்கள் உண்டு.

எதிரியின் பிற்போக்கான ஆனால் பலமான சித்தாந்தத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் ஈழத்திற்கான தேசிய சித்தாந்தம் 21ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமாகவும், உலகளாவிய மனிதநேயம் தழுவியதாகவும் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒரு தெளிவான சித்தாந்தத்தின் அடிப்படையில் தமிழர்கள் ஐக்கியப்பட்டு எழுச்சி பெற வேண்டும். புரட்சிக்கோ அன்றி விடுதலைக்கோ தெளிவான சித்தாந்தமே முதல் நிபந்தனை. கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பெயரால், முள்ளிவாய்க்கால் பெரும் துயரின் பெயரால் தமிழர்கள் விடுதலைக்கான முன்னுதாரண மிக்க சித்தாந்தத்தை தேடுவதும், ஐக்கியப்படுவதும் உடனடி நிபந்தனைகள் ஆகும். எம்மை நாம் திரும்பி பார்ப்பதன் மூலமும், எமக்கான இலக்கை தெளிவாக நிர்ணயிப்பதன் மூலமும் தூர நோக்கிலான எமது பயணத்தை உடனடி நிலைக்கு பொருத்தமான வகையில் ஆரம்பிக்க வேண்டும்.

எம்மை சரிபார்த்து எதிரிக்கு ஈடுகொடுக்க வல்ல சித்தாந்த பலத்துடனும், அதற்கான இதய சுத்தியுடனும் எமக்கான விடுதலை பயணத்தை நாம் வகுத்தாக வேண்டும். எதிரியின் தேர்தல் வெற்றியும், வெறிகொண்ட இனவாதமும் எமக்கு இதைத்தான் இடித்து உரைக்கின்றது.

எங்கள் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லப் போவது என்ன? எமது வெற்றி, தோல்விகள் மட்டுமல்ல – பலவேளைகளில் எதிரியே எமக்கு எதிர்மறை ஆசானாகவும் முடியும்.

ஆதலால் சிங்கள இனவாத வரலாற்றில் இருந்து பாடங்களையும், படிப்பினைகளையும் பெற்று மேலும் தூர தரிசனத்துடனும், சீரிய பார்வையுடனும் சிறப்பான சித்தாந்தத்தை வகுத்து விடுதலைக்கு வழி சமைப்போமாக!

- நன்றி: பொங்குதமிழ்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.