Tuesday, March 16, 2010

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் உள்ள இலங்கை தொடர்பான விடயங்கள் வாபஸ் பெற வேண்டும் :-அமெரிக்க தூதரகத்திடம் விமல் வீரவன்ச கோரிக்கை.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2009 ஆம் ஆண் டுக்கான மனித உரிமைகள் தொடர்பான அ றிக்கையில் இலங்கை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வாபஸ்பெற வேண்டும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று தேசிய சுதந்திர முன்னணி யின் தலைவர் விமல் வீரவங்ச தெவித்தார்.

வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய தோல்வியை இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சந்திக்கவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள 2009 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் 57 வீதமான வாக்குகளை எமது ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 70 வீதமான வாக்குகளை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம். இவ்வாறான பின்னணியில் அமெரிக்காவின் அறிக்கை குறித்து நாங்கள் ஆராயவேண்டும்.

தேர்தல்கள் சரியான நேரத்தில் நடத்தப்படுகின்றது பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கின்றது? இலங்கையின் ஆட்சி ராஜபக்ஷ குடும்பத்தினால் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இங்குள்ள தூதரகம் தயார்படுத்தி அனுப்பிய விடயங்களை வைத்துக்கொண்டே அமெரிக்கா இந்த அறிக்கையை தயாரித்திருக்கும். இந்நிலையில் தற்போது அமெரிக்கா கூறுகின்ற குடும்பவாதம் என்ற விடயத்தையே கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் கையிலெடுத்திருந்தன. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் என்ன நடந்திருக்கும் என்பதனை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அதாவது ஆபிரிக்காவில் உள்ள ஜனநாயக விழுமியங்கள் இல்லாத நாடொன்றின் நிலையில் இலங்கையை சித்தரிக்க அமெரிக்கா முற்படுகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு என்பது எம்மை பொறுத்த வரையில் பாரிய சாதனைகளை நிகழ்த்திய வருடமாகும். பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்து அமைதியை ஏற்படுத்திய ஆண்டாகும்.

குடும்பவாதம் பற்றி பேசும் அமெரிக்காவில் என்ன நடந்துள்ளது என்று பார்க்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகன் ஜோர்ஜ் டப்ளியூ. புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவரின் சகோதரர் ஒருவர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருக்கின்றார். பெரும்பாலும் அவர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வரலாம் என கருதப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கென்னடியின் சகோதரர் ஒருவர் சட்டமா அதிபராகவும் மற்றுமொரு சகோதரர் செனட்டராகவும் இருந்துள்ளனர்.

எனவே அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் இலங்கை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை வாபஸ் பெறவேண்டும். இதனை கோரிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் விடுக்கின்றோம்.

தற்போது காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் அவர்களால் ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூட பெற முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

எனவே இம்முறை தேர்தலில் மக்கள் மிகவும் ஆர்வமுடன் செயற்பட்டுவருகின்றனர். தபால்மூல வாக்களிப்புக்கு அதிகமானோர் இம்முறை விண்ணப்பித்துள்ளனர். எனவே மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுப்பார்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.