இராணுவ ஆட்சியில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தால், அதனை முன்னர் எப்போதோ யுத்தம் வெல்லப்படுவதற்கு முன்பே கூட செய்திருப்பேன். ஆனால் நான் ஒழுங்குக் கட்டுப்பாடுள்ள இராணுவத்தைத் தளபதியாக வழிநடத்திய ஒழுக்கம்மிக்க ஒரு ஜெனரல். எனவே அப்படிச் செய்யமாட்டேன்.இப்படிக் கூறியிருக்கின்றார் முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுபவருமான ஜெனரல் சரத் பொன்சேகா.
"அசோசியேட்டட் பிரஸ்" செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு:
யுத்த வெற்றி என்ற போர்வையின் கீழ் யாராவது தனது குடும்பத்தின் கௌரவத்தை உயர்த்த முயன்றால் அல்லது தனது விசுவாசிகளின் குடும்பத்தினரை ஊக்குவித்தால் அது உண்மையான சமாதானமாக அமையாது. அமைதி திரும்பிவிட்டது என நீங்கள் சொல்ல முடியாது.
நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகளவு அதிகாரங்களைக் குறைப்பேன். நாடாளுமன்றத்தைப் பிரதமரின் தலைமையின் கீழ் பலப்படுத்துவேன்.
இராணுவ ஆட்சி பற்றி நான் ஆர்வம் கொண்டிருந்திருந்தால் எப்போதோ அதனை செய்திருக்கலாம். யுத்தத்தை வெல்வதற்கு முன்னரே அதனைச் செய்திருக்க முடியும். நான் ஓர் ஒழுக்கக் கட்டுப்பாடு நிறைந்த இராணுவத் தளபதி. ஒழுக்கம் நிறைந்த இராணுவத்திற்கு தலைமை வகித்தார்.
யுத்தம் குற்றம் இழைக்கப்பட்டதாக நான் அறியவில்லை
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு, அரச தலைவர்களுக்காகச் செயற்படும் குழுக்கள் காரணமாக இருக்கலாம். இராணுவத்தைப் பொறுத்தவரை எந்த யுத்தக் குற்றமும் இழைக்கப்பட்டதாக நான் அறியவில்லை. படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் அவதானித்தேன்.
பொதுமக்களின் பாதுகாப்பை நாங்கள் அலட்சியம் செய்திருந்தால் எம்மால் காப்பாற்றப்பட்ட மூன்று லட்சம் பொதுமக்களில் அரைவாசிப் பேர் கொல்லப்பட்டிருப்பர். இராணுவத் தளபதியாக இருந்தபோது, தமிழர்களுக்கு நீதி வழங்கினேன். பயங்கரவாதத்தை அழித்து பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றினேன்.
நான் ஜனாதிபதியானால், சகல சமூகங்களுக்கும் சமமான நீதி மற்றும் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வேன். எனினும், தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக எதிர்கால நாடாளுமன்றமே தீர்மானிக்கமுடியும் என்றார் அவர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.