Saturday, November 17, 2007

சிறிலங்காவுக்கு இராணுவ உதவி ஏன்?: அமெரிக்கத் தூதுவர் விளக்கம்

[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007]


சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை வழங்கியது ஏன் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் விளக்கம் அளித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:
அமெரிக்காவில் 2006 ஆம் ஆண்டு 2006 ஒகஸ்டிலும் 2007 ஆம் ஆண்டு ஏப்ரலிலும் விடுதலைப் புலிகளின் முகவர்கள் என்ற சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் விடுதலைப் புலிகளுக்கு தேவையான உபகரணங்கள் சிலவற்றை வழங்கியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் மூவர் விடுதலைப் புலிகளின் சார்பில் ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஏனைய மூவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அவர்கள் ஒன்பது பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணைகளில் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரைப் பாவித்து இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு தேவையானவற்றை அமெரிக்காவில் இருந்தவாறே செய்து வந்தனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அவர்களால் திரட்டப்படும் நிதியானது விடுதலைப் புலிகளுக்கே அனுப்பப்படுகின்றன. இதனை விடப் விடுதலைப் புலிகளுக்கு தேவையான தொலைத்தொடர்பு கருவிகளையும் வெடிமருந்துகளையும் அவர்கள் அமெரிக்காவில் கொள்வனவு செய்துள்ளனர்.

இதனால் பயங்கரவாத அமைப்புக்களை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு அமைவாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அசையும், அசையாச் சொத்துக்களை முடக்க அமெரிக்க திறைசேரி முடிவு செய்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா ஆயுத உபகரணங்களையும் ராடர்களையும் வழங்கினோம்.

இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். புலிகள் தற்போது பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கான தருணம் வந்துவிட்டது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.