Saturday, March 09, 2013

வீரத்தமிழ்மகன் இல.மணிக்கு வீரவணக்கம்.- தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழம்.



முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்குச் சரியான நீதி வழங்க வேண்டுமெனவும், சிறிலங்கா அதிபர் ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டனை வழங்க வேண்டுமெனவும், தமிழீழத் தனியரசை அமைத்துத் தர வேண்டுமெனவும் சர்வதேச சமூகத்தைக் கோரி எமது தொப்புள்க்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழக மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் வண்ணம் தீக்குளித்துத் தனது இன்னுயிரை ஈகம் செய்த கடலூர் மாவட்டம், நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த வீரத்தமிழ்மகன் இல.மணிக்குத் தமிழீழ மக்கள் சார்பிலும் எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழ மக்களுக்கெனத் தனியரசு அமைய வேண்டியும். தமிழீழத்திற் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் தமிழக உடன்பிறப்புக்களாற் தொடர்ச்சியாக நடாத்தப்படும் போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கி நிற்கின்றன. உங்களது தொடர்ச்சியான போராட்டங்களுக்குத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.
 உங்கள் உன்னதமான உணர்வுகளுக்குத் தலைவணங்கும் அதேவேளை இனிவருங்காலங்களில் இவ்வாறாகத் தீக்குளித்துத் தங்கள் உயிரை ஈகம் செய்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழின உணர்வாளர்கள் அனைவரிடமும் பணிவன்புடன் வேண்டுகின்றோம். உயிர் உன்னதமானது. நாங்கள் உயிர்களைக் காப்பாற்றவே போராடுகின்றோம். இவ்வளவு தூரம் எமது மக்களை ஆழமாக நேசிக்கக் கூடிய உறுதியான தமிழின உணர்வு கொண்டவர்கள் தம்மைத் தாமே ஈகம் செய்வதை நிறுத்தி, எமது விடுதலைப் போராட்டத்தின் தேவையையும், தமிழீழத் தனியரசு கோரும் எமது நியாயங்களையும் உலகம் முழுமைக்கும் உணர வைக்கும் பிரச்சாரப் பணிகளிற் தீவிரமாக ஈடுபடுமாறு வேண்டுகின்றோம்.
வீரத்தமிழ்மகன் இல.மணி அவர்களின் குடும்பத்தவருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வீரத்தமிழ்மகன் இல.மணிக்கு எமது போராட்ட வரலாற்றில் ஒரு தனித்துவமான இடம் உண்டு. அவர்  மூட்டிய புரட்சித்தீ எமது விடுதலைப் பாதையில் மேலும் ஒரு ஒளிவிளக்காகத் திகழும்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.