Monday, April 30, 2012

அழுக்குத்தனமான அரசியல்வாதி.

தமிழ் மக்களின் மொழி மீதான வேட்கை, இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி, உரிமைகளை அடைவர்தற்கான மக்களின் ஒன்றுசேர்ந்த போராட்டம்,
அங்கு ஏற்பட்டுவிட்ட சில தொய்வுகள், ஜனநாயகத்தின்மீதான மக்களின் நம்பிக்கை, உலக அரசியல் ஏற்படும் மாறுபாடுகள், இவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தி , தம்மீதுள்ள அத்தனை அயோக்கியத்தனங்களையும் களைந்துவிடலாம் என்பதும், வீழ்ச்சியிலிருந்து எழுந்துவிடலாம் என்பதும் தமிழகத்து அரசியல்வாதிகள் சிலரின் தந்தரமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வளர்ச்சியடையாத நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் இப்பேர்ப்பட்ட தந்தரமான அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இருந்தும் அனைத்தையும் தாண்டும் விதத்தில் இந்தியா இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஒன்றுக்கொன்று சளைக்காத, பதிவு செய்யப்பட்ட கொள்ளையர் கூட்டங்களாக பெருத்த அரசியல்கட்சிகள் பல இருந்து வருகின்றன. பாமர மக்கள் நிறைந்த கிராமங்களின் கூட்டான இந்தியாவில், மிக இலகுவாக இக்கட்சிகள் சமூகத்தை ஊடுருவி உட் புகுந்து, ஏமாற்று பரப்புரை விளம்பரங்கள் செய்வதன்மூலம் பாமரமக்கள் ஏமாற்றப்பட்டு, அரசியல் வியாபாரிகள் பெருத்த பணக்காரர்களாக குறிப்பிட்ட சில குடும்பங்களே இருந்து வருகின்றன.

அரசியலை வியாபார அடிப்படையில் கட்சி (முதலாளி) கள் கைக்கொண்டு வருவதால் பதவி பேரங்களிலும் ஊழல்களிலுமே குறியாக இருக்கின்றன. ஒரு பெருத்த ஊழல் ஒருகட்சியை மக்கள் வெறுத்து புறக்கணித்துவிட்டால், மற்ற ஒரு ஊழல்க்கட்சி ஆட்சியை பிடித்து இன்னுமொரு மாபெரும் ஊழலை தோற்றுவிக்கிறது. வேறு தெரிவுகளும் மக்களுக்கு தெரியாமல் மீண்டும் இன்னுமொரு ஊழல் கட்சியை ஆட்சிக்கட்டில் ஏற்றிவிடுகின்றன,. பாமர மக்கள் உளவியல் ரீதியாக அடிபட்டு போய்விடவேண்டிய சூழலை தோற்றக்கூடிய பொறிகளாக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், அனைத்தும் இந்த அரசியல் வியாபாரிகளின் கைகளிலேயே வீழ்ந்து கிடக்கும் சாபக்கேடு தொடர்ந்துகோண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசியலில் கருணாநிதியை ஜெயலலிதா வசை பாடுவதும், ஜெயலலிதாவை கருணாநிதி வசை பாடுவதும் மட்டுமே கொள்கை முழக்கங்களாக இருந்துவருகிறன. இந்த வசைபாடல்களில் இருக்கும் நியாய அநியாயங்களை கட்சியில் இருக்கும் கற்றவர்கள் கூட பகுத்துணர்ந்து பார்ப்பதாகவும் தெரியவில்லை. தத்தம் தலைவர்கள் பாடும் வசைவுகளை கைதட்டி வரவேற்று ஏற்றுக்கொள்ளும் அடிமை நிலையிலேயே கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் தொண்டர்களும் காலாகாலமாக இருந்து வருகின்றனர்.

கட்சி தலைவர்களின் சுயநலன் தாண்டி,, மனதில் நிலைத்து நிற்கும் விதமாக வரலாற்றில் நிலைக்கும்படியான துணிச்சலான சமூக அரசியல் மாற்றங்களை இந்த அரசியல்க்கட்சிகள் ஒருபோதும் செய்ததில்லை. இனி செய்யப்போவதுமில்லை.

சுதந்திரத்தின் பின் "திராவிட நாடு" என்ற ஹிந்தி எதிர்ப்பு சுலோகத்தில் ஈர்க்கப்பட்ட தமிழகத்து மக்கள் திராவிடக்கட்சிகளை நம்பி அணிசேர்ந்தனர். ஒருகாலகட்டத்தில் ஹிந்தியும் திராவிடமும் இணைந்து இரண்டறக்கலந்து அரசியல் செய்தபோது மக்களுக்கு ஒரு மீழ முடியாத ஏமாற்றம், திகைப்பு, இருந்தும் திராவிடக்கட்சிகளின் தலைமைகளின் வாய் ஜால நியாயப்படுத்தல்கள், அனைத்தையும் மறக்க வைத்தது, அல்லது மக்கள் மந்தைகள் ஆக்கப்பட்டனர்.

ஈழப்போராட்டம் ஆரம்பமானபின் ஒருகாலகட்டத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதராவான நிலைகொண்ட கட்சிகளை ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்ற மனநிலை தமிழ் நாட்டின் மக்கள் மனதில் தோன்றியிருந்தது. 2007/ 2008/ 2009, களில் ஈழமக்கள் போரில் பட்ட கொடுந் துயரங்களை தமிழக மக்கள் மறக்க தயாராகவுமில்லை. போர் முடிந்த 2009 க்குப்பின் ஈழ மக்களின் அழிப்பு, தமிழகத்தில் வாழும் 90 விழுக்காடு மக்களை மிகுந்த வேதனையில் தள்ளியிருக்கிறது. ஈழத்துக்காக தொடர்ந்து போராடவேண்டும், போர்க்குற்றவாளியை தண்டிக்க வேண்டும் துணைபோனவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற மனநிலை அனைவரிடமும் ஒரு வெறியாகவே பற்றியிருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

அந்த வேகத்தை வெளிப்படையாக காண்பிக்கமுடியாதவாறு தாம் சார்ந்த கட்சி தலைமைகள் தடையாக இருப்பதையும் மீறி 2011சட்டசபை தேர்தலில் துரோகிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டிருந்தது. திமுக. காங்கிரஸ். பமக. விசி.கட்சிகள் இப்போ அதல பாதாளத்தில் கிடக்கின்றன.

மக்களது மனநிலையின் வெளிப்பாடுதான் தேர்தல்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் என்ற யதார்த்த உண்மை புரியப்பட்டு, பின்பற்றிவந்த கொள்கைகளை மூடி மறைத்து மாற்றம் செய்வதாக காட்டிக்கொள்ள வேண்டிய தற்காப்பு தந்தர நிலையை இப்போது கட்சி தலைமைகளுக்கு தோற்றுவித்து, அரசியல்வாதிகளின் சுயரூபத்தை காலம் மக்களுக்கு இனங்காட்டி சிரித்து நிற்கிறது.

கடைசியாக தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் திமுக, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கான காரணம் குடும்ப ஆதிக்கம், "2ஜி அலைக்கற்றை ஊழல் என்பதாகத்தான் அதிகமான ஊடகங்கள் நியாயம் கற்ப்பித்தன. தோல்விக்கு காரணமான உண்மை நிலை ஈழப்பிரச்சினைதான் என ஒரு சில ஊடகங்கள் தெரியப்படுத்தியிருந்தாலும் அதை சற்று மந்தப்படுத்தியே ஊடகங்கள் நியாயப்படுத்தி வருகின்றன.

ஈழப்படுகொலை களத்துக்கு துணைபோன துரோகத்தின் வெளிப்பாடுதான் 2011 தேர்தல் படுதோல்வி என்பது தோல்வியுற்றவர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். பத்திரிகை ஊடகங்கள் எத்தனை பம்மாத்து பண்ணினாலும் மக்களின் மனவோட்டத்தின் எழுச்சியை நீண்ட நாட்களுக்கு மறைக்கவும் முடியாது. ஈழ மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ராஜபக்க்ஷ மற்றும் சோனியாவுடன் கைகோர்த்து முதல்த்தரமாக நின்று பங்களித்த கபட வேடதாரி "அழுக்கு மனிதன்" கருணாநிதி, என்பதை உலகின் எல்லைவரை அறியப்பட்டிருந்தது.

திமுக, மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக என்றைக்கும் ஈழப்போராட்டத்தை ஆதரித்தவர்களாக இருந்ததில்லை. தேர்தல்காலங்களிலும், சந்தற்பவாத நேரங்களிலும் திரிவுபட புரியாத சித்தாந்தங்களை எடுத்துவைத்து ஈழ ஆதரவு கட்சிகளை இணைத்து ஆட்சியை கைப்பற்றிவருகின்றனர்.

திமுக சார்ந்த ஊடகங்கள் அதிமுக சார்ந்த ஊடகங்கள், காங்கிரஸ் சார்ந்த ஊடகங்கள் மற்றும் நடுநிலைபோல காட்டிக்கொள்ளும் ஊடகங்கள் அனைத்தும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும்தான் தமிழகத்தின் முடிக்குரிய கட்சிகள் என்பதை தீர்மானிக்கின்றன. அந்த இரண்டு கட்சிகளும்தான் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளும் என்பது எழுதப்படாத விதியாக ஊடகங்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி அமைக்கக்கூடிய அவ் இரு கட்சிகளின் கொள்கைகளை மீறி தமிழக மக்களின் ஈழ ஆதரவு உணர்வுகளை அப்பட்டமாக வெளியிட்டு ஆட்சியாளர்களின் கோபத்துக்குள்ளாகி அழிந்து போக பத்திரிகை ஊடகங்கள் தயாராக இல்லை.

சன் ரிவி, ஜெயா ரிவி, மேகா ரிவி, கப்ரன் ரிவி, ராஜ் ரிவி, போன்ற தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்சி சார்பு கொண்டு செயற்படுகின்றன. அவை கட்சி சார்பு கொண்ட ஊடகங்கள் என்பதும் மக்கள் அறியாததுமல்ல. இந்து, தினமலர், தினகரன், தினமணி, தினத்தந்தி,போன்ற நாளிதழ்கள், ஏதோ ஒரு கட்சி சார்ந்தும் சந்தர்ப்பவாதமாக ஆட்சியாளர்களை சார்ந்தும் ஆரிய சிந்தனையுடனும் செயற்பட்டு வருகின்றன இந்தப்பத்திரிகைகள் எப்போதும் ஈழ எதிரிகளாகவே வாந்தி எடுத்து வருபவை.

ஜூனியர் விகடன், குமுதம் றிப்போட்டர், நக்கீரன், இந்தியா ருடே போன்ற புலனாய்வு பத்திரிகைகள் வியாபார நோக்கோடு சில ஈழச்செய்திகளை வெளியிட்டாலும், ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது ஆளும் கட்சியை அடியொற்றியே செய்திகளை பிரசுரித்து வருகின்றன.

சமீபத்தில் சில நாட்களாக திமுகவின் தலைவர் கருணாநிதி வெளியிட்டுவரும் ஈழப்பாச அறிக்கைகள் உணர்வுள்ள தமிழகத்து ஈழ ஆதரவாளர்களையும் தமிழகத்து மக்களையும் மிகுந்த கொதிநிலைக்கு தள்ளியிருக்கிறது. அதன் வெளிப்பாடாக நெடுமாறன் ஐயா அவர்கள், வைகோ அவர்கள், உணர்வுள் இளந் தமிழன் சீமான் ஆகியோர் தமது வெப்பத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

இருந்தும் கருணாநிதி தனது பிரித்தாளும் அரசியல் சாணக்கியத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவே தெரிகிறது.ஒரு பொய்யை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருந்தால் மக்களை நம்பவைத்து ஏமாற்றிவிடலாம் என ஹிட்லரின் உதவியாளர் கோயபல்ஸ், நம்பியிருந்ததாக வரலாற்றில் கறுப்பு பதிவு உண்டு. கருணாநிதியின் கபட வித்தைகளை ஒரு சிலர் இன்றைய தருணத்தில் நம்பினாலும் வரலாற்றில் கோயபல்ஸின், தகுதி கருணாநிதிக்கு உண்டாகும் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை.

இன்று 30 ஏப்.2012, கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் "டெசோ" என்ற முன்னர் செயற்படாமல் முடங்கிக்கிடந்த அமைப்பை மறு அங்குரார்ப்பணம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். வெளியிலிருந்து ஈழ ஆதரவாளர்கள் எவரும் இணைந்துகொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து தனது ஆதரவு வட்டத்துக்குள்ளேயே உறுப்பினர்களையும் தெரிவு செய்திருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். உறுப்பினர்களாக அன்பழகன், வீரமணி, சுப- வீரபாண்டியன் ஆகியோர் தெரிவு செய்யப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஈழமக்களின் மனக்கசப்புக்கு ஆளானவர்கள் என்பதும் கருணாநிதியின் ஊதுகுழல் குரலாக பேசுபவர்கள் என்பதும் கடந்த காலத்தில் அறியப்பட்டவை.

:டெசோ அமைப்புக்கு இப்போ என்ன தேவை இருக்கிறது?..

அன்றைய முதலமைச்சர் எம்ஜீஆர் அவர்களின் முழு ஆதரவு விடுதலைப்புலிகளுக்கு இருந்ததை பொறுக்கமுடியாமல் அன்று இருந்த சிறிய இயக்கங்களை ஒன்றாக்கி ஈழத்தமிழ் போராளி இயக்கங்களிடையே பிரிவினையை தோற்றுவித்து புலிகள் இயக்கத்தை ஓரங்கட்டும் முயற்சியாக கருணாநிதியின் கபட தந்திரத்தில் உருவாக்கப்பட்டது "டெசோ" என்ற அமைப்பு. இருந்தும் அந்த அமைப்பு செயல்ப்பட்டதாக எந்த அடையாளங்களும் இல்லை.

1, இன்று டெசோ அமைப்பை பிரதிநிதுத்துவப்படுத்திய இயக்கங்கள் எதுவும் உலகத்தில் எந்த இடத்திலும் ஈழத்தமிழர்களுக்காக தனித்து நின்று ஆயுதம் தாங்கி, அல்லது குரல் கொடுத்து இயங்கும் நிலையில் இருப்பதாகவும் ஈழத்தமிழனான எனக்கும் தெரியவில்லை. ஈபிஆர்எல்எfப் இயக்கத்திலிருந்து சுரேஸ் பிரேமச்சந்திரனும். ரெலோ இயக்கத்திலிருந்து சிவாஜி லிங்கம்/ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தேசிய அரசியல் நீரோட்டத்துடன் இணைந்து தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தெரிவான தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஐக்கியமாகிவிட்டனர். புளொட் சித்தாத்தனும் தனித்து இயங்கினாலும் தேசிய கூட்டமைப்பின் அரசியல் சித்தாந்தத்தை பின்பற்றுவதாகவே தெரிகிறது. மேல் குறித்தவர்களும் கருணாநிதியின் டெசோவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் சொல்லமுடியாது.

2, 80 களில் ஆயுதம் ஏந்தி போராடும் நிலையில் விடுதலை இயக்கங்கள் இருந்தன. அந்த நேரங்களில் ஒரு சமன்பாட்டை தோற்றுவிக்கும் முகமாக (அது தேவையற்றதாக இருந்தாலும்) நல்ல நோக்கத்துடன் ஒரு கட்டமைப்பை அன்றைக்கு ஏற்படுத்தியிருந்தாலும் இன்றைக்கு டெசோ வை நிறுவவேண்டிய தேவை கருணாநிதிக்கு என்ன இருக்கிறது?. ஈழ ஆதரவு தளத்தை தமிழகத்தில் உடைத்து தனது வீழ்ச்சியிலிருந்து எழும்பிவிட முயற்சிக்கும் ஒரு கபட உத்தியே அன்றி டெசோ என்ற பூச்சாண்டி வேறு எதற்கும் உதவப்போவதுமில்லை.

3, இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஈழத்தமிழர்கள் விடுதலை புலிகளை பின்பற்றியே அணிதிரண்டிருக்கின்றனர். உலக நாடுகளும் நேரடியாக விடுதலைப்புலிகளை மட்டுமே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பிரகரித்து பேச்சுவார்த்தை நடத்தின, நடத்திக்கொண்டிருக்கின்றன. வாழும் வீட்டில் கொள்ளி சொருவும் விதமாக டெசோ என்னும் குளப்பல்த் திட்டம் கருணாநிதிக்கு ஒரு சொற்ப மன திருப்தியை அளித்தாலும் பலன் எதுவும் கிடைக்காது என்பதே பின்னர் தெரியவரும்.

90 வயதை அண்மித்திருக்கும் ஒரு பெரியவரான கருணாநிதி சாகும் காலத்தில் என்றாலும் இப்படியான நஞ்சு விதைகளை தொடர்ந்து விதைத்துக்கொண்டிருக்காமல் தனது சொந்த வேலையில் கவனம் செலுத்துவதே நல்லது என்பது ஈழத்தமிழர்களின் நீண்ட நாளைய கருத்தாக காணக்கூடியதாக இருக்கிறது.

ஐநாவில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் பின்னர்தான் கருணாநிதி "ஈழம்" என்ற சொற்பதத்தையே பாவிக்கிறார் அதற்கு முன்னர் ஒருபோதும் கருணாநிதி ஈழம் என்ற சொல்லை விரோதமான ஒன்றாகவே பார்த்து வந்திருக்கிறார். போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ராஜபக்க்ஷவை கோபப்படுத்தாமல் இலங்கைத்தமிழர்கள் நடந்து சிங்கள அரசு தருவதை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறிய கருணாநிதி இன்று ஈழம் கிடைக்கும்வரை போராடுவேன் என்று அறிக்கையில் விளையாடுவது எவ்வளவு "அழுக்கான நடத்தை" என்பதை ஏன் உணரவில்லை.

"ஈழத் தமிழர்கள் மீது இன்றைக்குக் காட்டும் உணர்வுபூர்வமான அக்கறையை இலங்கையில் போர் நடைபெற்றபோதே காட்டியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால் கேட்பவர்களுக்கே தெரியும், விடுதலைப் புலிகள் வெற்றியைப் பெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான். சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டும், அவர்களின் உள்பகையைத் தீர்க்க முடியவில்லை. (கருணாநிதி)"

இதற்கு சரியான பதிலை செந்தமிழன் சீமான் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி வீடியோவாகவும் (யூ ரியூப்பில்) வெளிவந்திருந்தது. அதை கருணாநிதியும் அவரது கூட்டாளிகளும் நிச்சியம் பார்த்திருப்பார்கள் என்று நம்பலாம்.

அடுத்து ஈழமக்களின் முன் எழுந்திருக்கும் பூதாகரமான கேள்வி ஈழம் அமைப்பதற்கு இந்த கருணாநிதி யார்?. யார் அவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது? ஈழத்தில் பிறந்த தமிழர்களில் எவருக்கும் கருணாநிதியின்மீது ஆத்திரமும் வெறுப்புமே தவிர நல் அபிப்பிராயம் கனவிலும் கிடையாது. 2009 போரின்போதும் அனீதி இழைக்காதீர்கள் படுகொலைகளுக்கு துணை போகாதீர்கள் என்று அதிகாரத்தில் இருந்த கருணாநிதியை மன்றாடி கேட்டுக்கொண்டது தவிர போராட்டத்திற்கு எவரும் பங்களிக்கும்படி அழைக்கவில்லை. கருணாநிதியின் அதே நிலைப்பாட்டு கொள்கையில் இருந்துவரும் டக்கிளஸ், கருணா, கேபி, பிள்ளையான் ஆகியோர் கூட கருணாநிதியின் கருத்துக்கு ஒத்துப்போவார்களோ தெரியவில்லை.

கருணாநிதி ஒருகாலத்தில் மக்களால் மதிக்கப்பட்ட அரசியல்வாதியாக இருந்தவர்தான், அவரது தந்திர அழுக்கு நடத்தை அத்தனையையும் புரட்டிப்போட்டு கருணாநிதியை இவ்வளவு கீழ்த்தரமாக இறக்கி பாதாளத்தில் விட்டிருக்கிறது. கருணாநிதி இயலாமையின் இறுதிக்கட்டத்தில் இப்போ எடுக்கும் எந்த ஆயுதமும் அவருக்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை அவரது அழுக்கு தனமான குணம்ஷத்தை இன்னும் வெட்டவெளிச்சமாக்கும் என்பதே காலத்தின் கோலமாக முடிந்து மறைவார்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.