Saturday, March 03, 2012

இந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதி பேசியிருப்பது இலங்கை அரசை போர்க்குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றும் திட்டமிட்ட முயற்சியாகும். இந்திய அரசின் இப்படிப்பட்ட நியாயமற்ற நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தின் 19வது மாநாட்டில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்திற்கு நியாயம் கிடைக்க போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் கொண்டு வரவுள்ளன.

அப்படி ஒரு தீர்மானம் வந்தால் அதனை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை மாமன்றத்திற்கான இந்தியப் பிரதிநிதி, இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாசித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது பயன் தரத்தக்க பேச்சுவார்த்தைக்கும் இணக்கமான அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமினறி, உலக அளவில் மனித உரிமை சூழல் குறித்து வரும் அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் நடைபெறவுள்ள பொதுவான விவாதத்தில் இலங்கையைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று இந்தியப் பிரதிநிதி கூறியுள்ளார்.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தக்கூடிய தீர்மானம் நிறைவேற்றுதலுக்கு எதிரானதாகும். இலங்கை தொடர்பான விடயம் அங்கே மனித உரிமை சூழல் எப்படியிருக்கிறது என்பதல்ல. மாறாக, அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது பற்றி விசாரிக்க வழிவகுக்கும் போர்க் குற்ற விசாரணையாகும்.

இதனை பொதுவான மனித உரிமை சூழலாக விவாதிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதிநிதி கூறுவது, இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பை மறைக்கும் முயற்சியாகும். 2009ஆம் ஆண்டில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை எப்படி எதிர்த்து அந்நாட்டைக் காப்பாற்றியதோ அதேபோல் இப்போதும் இந்திய அரசு இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதையே அதன் பிரதிநிதி வாசித்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசின் இந்த நிலைப்பாடு, இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையில் அதன் கையும் தமிழன் இரத்தத்தால் நனைந்துள்ளது என்பதையும், தனது குற்றச்செயலை மறைக்கவே, வெளிப்படையான குற்றவாளியான இலங்கை அரசை அது காக்க முயற்சிக்கிறது என்பதையும் தெளிவாகிவிட்டது. தமிழினத்தின் அழிப்பை திட்டமிட்டு நிறைவேற்றிய இலங்கை அரசுக்கு ஆயுதம், ஆலோசனை, ராடார், பயிற்சி என்று எல்லா விதத்திலும் இந்திய அரசு உதவியுள்ளது என்கிற குற்றச்சாற்று, அதன் இந்த நிலைப்பாட்டின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது.

ஆனால், 2009ஆம் ஆண்டில் நடந்ததுபோல், இலங்கை அரசு இம்முறை தப்பித்துவிட முடியாது. ஐ.நா.மனித உரிமை மாமன்றத்தின் மற்ற உறுப்பு நாடுகள் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்து நிறைவேற்றும் என்று தமிழர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.