Tuesday, March 20, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவு - இந்தியாவின் வரலாறு காணாத துரோகம்: கவலையில் சம்பிக்க ரணவக்க.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்து இந்தியா வரலாறு காணாத துரோகத்தனத்தை செய்துவிட்டது.

 இதனை இலங்கை ஒருபோதும் மன்னிக்காது. அதேபோன்று இதற்கான விளைவுகளை இந்தியா மிக விரைவில் சந்திக்கும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய வின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பனை இழந்த இந்தியாவுடன் ஏனைய நாடுகளும் நட்பை வைத்துக் கொள்ள விரும்பாது. இதுவரை காலம் இந்தியாவுடன் காணப்பட்ட அரசியல், இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உட்பட சகல துறைகளிலுமான அந்நியோன்ய உறவுமுறைகள் இடை நிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைத்துள்ள பிரேரணையை ஆதத்து இந்தியா பெரும் தவறிழைத்து விட்டது. இலங்கைக்கு மாத்திரமல்ல ஏனைய வலய நாடுகளுக்கு எதிராகவும் தான் இந்தியா தனது துரோகத்தனத்தை செய்துவிட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் தலையீடுகளுக்கு தேவையான சூழலை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் ஆபத்தை இந்தியாவும் விரைவில் உணரும்.

எவ்வாறாயினும் இலங்கை இந்தியாவை பெரிதும் நம்பியிருந்தது. அதே போன்று ஏனைய நாடுகளை விட இந்தியாவுடனேயே இலங்கை அந்நியோன்னிய மான நட்பை பாதுகாத்து வந்தது. இந்த புனிதமான நட்பை இந்தியா தூஷித்து விட்டது. இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

புலிகளை அழித்ததன் பயனை இந்தியாவும் தான் அனுபவிக்கின்றது. இல்லையென்றால் புலிகளின் குழுக்கள் இந்தியா விலும் ஊடுருவி ராஜீவ் காந்தியைப் போன்று தற்போதைய தலைவர்கள் பலரையும் கொன்றொழித்திருப்பார்கள். ஆனால் கெட்டித்தனமாக நடந்து கொண்டு இந்தியா தனது நண்பனை வெள்ளையர்களுக்குக் காட்டிக் கொடுத்துள்ளது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இரத்தக் கொலைவெறியரின் நாடு எப்படி எப்போது புனிதமானது? இது ஒரு கொலைவெறினின் கதறல். பு(எ)த்தனும் இவர்களைப் போன்றவரை மன்னிக்கமாட்டான். விதைத்தது தினையல்ல கொலைவெறியனே அப்பாவித் தமிழரின் உயிர். இன்று வினையறுக்க எழுந்து நிற்கின்றான் தமிழன். செய்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயமாய் உண்டு கொலைவெறியரே.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.