Tuesday, January 03, 2012

மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தரம் கூட கற்கவில்லை?- விக்கிலீக்ஸ் தகவல்

மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தர கல்வியைக் கூட கற்கவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டபோது, கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ் ரீட் 2005 நவம்பர் 21ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு இரகசியமான தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அந்த தகவல் பறிமாற்றக் குறிப்பிலேயே, மகிந்த ராஜபக்ஸ க.பொ.த உயர்தரம் கூட படிக்கவில்லை என்ற தகவல் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

க.பொ.த உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்யாத மகிந்த ராஜபக்ஸ இப்போது ஒரு சட்டவாளர் என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவருடைய குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்சவின் எட்டுப் பிள்ளைகளில் மூன்றாவதாக, பேர்சி மகிந்த ராஜபக்ச 1945 நவம்பர் 18ம் நாள் வீரகெட்டியவில் பிறந்தார்.

காலி றிச்மன்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு நாலந்தா மற்றும் தேஸ்டன் கல்லூரிகளிலும் கல்வி கற்ற போதும் அவர் க.பொ.த உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்யவில்லை.

இருந்தபோதும், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக நூலகத்தில் எழுதுனராக பணியாற்றிய அவர், 1970ம் ஆண்டு தனது தந்தையாரின் மறைவுக்குப் பின், அரசியலில் இறங்கி அவரது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகைமை தேவையில்லை என்று அப்போதைய சட்ட அமைச்சர் கொண்டு வந்த நடைமுறையின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ஸ கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.

1974இல் அவர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றதாகவும் அமெரிக்கத் தூதுவர் தனது தகவலில் குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.