Saturday, January 07, 2012

முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர்!

பாரியதொரு தமிழினப் படுகொலையுடன் முள்ளிவாய்க்காலில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைத் தேர் தற்போது முன்நகர ஆரம்பித்துள்ளது. 'தமிழீழம் இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினமே இல்லை' என்ற சிங்கள தேசத்தின் கற்றுக்கொடுக்கும் தொடர் பாடம் இந்த விடுதலைத் தேரின் முன்நகர்வை வேகப்படுத்தியுள்ளது.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்குத் தவறிய பயணத்திற்கு எதிராகத் தமிழீழத்தின் மனச்சாட்சிகள் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசங்களில் தமிழீழ இலட்சியத்தின்மீது போர் தொடுத்தவர்களும் தற்போது மவுனித்துப்போயுள்ளனர். விடுதலை கோரும் ஒரு இனத்தின் ஆன்ம பலத்தின்மீது எந்தச் சக்தியினாலும் சேதத்தை ஏற்படுத்த முடியாது என்பதை மாவீரர் நாளில் மக்கள் தெளிவாகத் தெரிவித்தனர்.

 போர்க் களத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் களத்திலும் விடுதலைப் புலிகளே பலத்தோடு உள்ளார்கள் என்பதை சிங்கள தேசமும் ஒப்புக்கொள்கின்றது. விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்கின்றார்கள் என்ற அவலக் குரல்கள் சிங்களத் தலைநகரில் உரத்துக் கேட்கின்றது. தொடர்ந்தும் மிதிபடும் மண்புழுவுக்கும் கொடுக்கு முளைக்கும் என்ற கூர்ப்பியல் நியதியை சிங்கள தேசம் புரிந்து கொள்ள மறுப்பதால், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியை தனது பருத்த இராணுவத்தால் தடுத்து நிறுத்தும் மனப்பாலுடன் ஆறுதல் கொள்கின்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகப் பார்த்த பல நாடுகளும், சிங்கள தேசத்தால் நடாத்தி முடிக்கப்பட்ட அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாமல் தவிக்கின்றன.

மனித நாகரிகம் வளர்ந்த மேற்குலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கான நியாயங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளன. சீனாவை அரவணைத்து, இந்தியாவை மிரட்டும் பாணியிலான சிங்கள ஆட்சியாளர்களது நகர்வு மேற்குலகிற்குச் செல்லுபடியாகாத இராஜதந்திரமாகவே உள்ளது.

அதனால், ஈழத் தமிழர்களுக்கான நியாயம் கோரும் தளங்கள் விரிவடைந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. பிரான்சில், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தினால் வெளியிடப்பட்ட முத்திரை, அந்த இடைவெளி சூத்திரத்தின் வெளிப்பாடே. அந்த முத்திரைகளுக்கு பிரான்ஸ்வாழ் தமிழர்கள் வழங்கிய ஆதரவும், ஆர்ப்பரிப்பும் தமிழீழ விடுதலையை அவர்கள் வென்றெடுத்தே ஆவார்கள் என்பதையே உணர்த்தியது. தேசியத் தலைவர் அவர்களது படத்துடன் கூடிய முத்திரை ஒன்றுக்காக 100 ஈரோக்கள் கொடுக்கவும் தயாராக, பாரிஸ் - லா சப்பல் கடைத்தெருவெங்கும் அலைந்து திரியும் பல தமிழ் உணர்வாளர்களைப் பார்க்க முடிகின்றது.

 முள்ளிவாய்க்கால் வெற்றி மமதையுடன் நிமிர்ந்து மார் தட்டிய சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது சிறுகச் சிறுக நிம்மதியைத் தொலைத்து வருகின்றாhகள். அவர்களது நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்ட தமிழ்ப் புலனாய்வுச் சதியாளர்களால், புலம்பெயர் தமிழ்த் தேசிய எழுச்சியினைத் தடுத்து நிறுத்த முடியாது போனதை அதிர்ச்சியுடன் நோக்குகின்றார்கள். புலம்பெயர் தமிழர்களது மீள் எழுச்சியுடன், இறுதி யுத்த காலத்தில் அங்கிருந்து தப்பி, வெளியேறிய விடுதலைப் புலிகள் அணி திரள்வதை சிங்கள தேசத்தினால் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

சிங்கள தேசத்திற்கான புலனாய்வாளர்களாகப் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ள சில முன்னாள் விடுதலைப் போராளிகளால் மாவீரர் தினத்தைக்கூட சிதைக்க முடியாத போது, மீள் எழுச்சி கொள்ளும் புலம்பெயர் தமிழர்களை எப்படி அடக்குவது? என்பதே தற்போது சிங்கள தேசம் விடை தேடும் கருப் பொருளாக உள்ளது. தமிழீழம் கனவல்ல என்ற யதார்த்தத்துடன் யாரும் மோத முடியாது என்பதை சிங்கள தேசம் மட்டுமல்ல, சிங்கள தேசத்தின் தமிழ்ப் புலனாய்வாளாகளும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்! முள்ளிவாய்க்காலில் இருந்து முன்நகர ஆரம்பித்திருக்கும் தமிழீழ விடுதலைத் தேரை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

  - தமிழ்ச்செல்வன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.