Saturday, December 31, 2011

வன்னியில் இலட்சக் கணக்கில் கொலை செய்து விட்டு 1200 பேருக்கு உரிமை கோரல்!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 1200 பொதுமக்கள் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய புலமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ‘வெளிநாட்டு மண்ணில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தல்‘ என்ற பொருளில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“போரின் இறுதிக்கட்டத்தில் 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சில அமைப்புகள் சொல்கின்றன. வேறு சில அமைப்புகளோ 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றன. இன்னும் சில தனிநபர்கள் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சொல்கின்றன.

ஆனால் எந்த அமைப்பிடமும் கொல்லப்பட்ட பொதுமக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இல்லை.

உண்மையில், ஜனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் 1400 பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளால் இந்தக் காலப்பகுதியில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஏனைய 1200 பொதுமக்களும் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களிலேயே கொல்லப்பட்டனர். ஆனால் இவர்கள் வேண்டுமென்றே கொல்லப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் மீது, அவர்களின் நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இவர்கள் கொல்லப்பட்டனர். எவ்வாறாயினும் 1200 பொதுமக்களினதும் மரணங்களுக்கு சிறிலங்காப் படையினரே பொறுப்பு.

போரின் இறுதி மூன்று ஆண்டுகளில் 12,000 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் 6,000 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதுடன் 29,000 பேர் காயமடைந்தனர்.

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப் படையினர் பங்கேற்ற படை நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுடன் ஒப்பிடும் போது சிறிலங்காவில் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டது மிகமிகக் குறைவு.

சிறிலங்கா அரசாங்கம் மூன்று முக்கியமான தவறுகளை இழைத்துள்ளது.

போர் முடிவுக்கு வந்ததும் சிறிலங்கா அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்கவில்லை.

ஒரு மோதலின் முடிவில் - ஒரு சில மாதங்களுக்குள் உண்மையான இழப்பு விபரங்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் அதனை சிறிலங்கா அரசாங்கம் செய்யாதது முதலாவது தவறு. மிகவும் தாமதமாக சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த வௌளை அறிக்கை தயாரிக்கப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தாமதித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் மதிப்புமிக்க அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளை தம் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டனர்.

சிறிலங்கா அரசு செய்த இரண்டாவது தவறு, ஐ.நா நிபுணர்குழுவை சிறிலங்காவுக்கு அழைக்காதது.

அந்தக் குழுவை கொழும்புக்கு அழைத்து உண்மையான தகவல்களை வழங்கி, நிலைமையை நேரில் பார்வையிட அனுமதித்திருந்தால், அந்தக் குழு தவறான தகவல்களுடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பித்திருக்காது.

அவர்களை அனுமதிக்க மறுத்ததால், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஒரு பக்கத் தகவல்களை மட்டுமே கொண்டதாக வெளியானது.

தவறான பரப்புரைகளை முறியடிக்கும் பொறுப்பை நிறைவேற்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தவறிவிட்டது.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, தகவல் ஊடக அமைச்சுடன் இணைந்து, விடுதலைப் புலிகளின் பரப்ரைகளை முறிடிக்க வேண்டிய பொறுப்பை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளவில்லை.

24 மணி நேரமும் செய்திகளை கூர்ந்து அவதானித்து சிறிலங்காவுக்கு எதிரான செய்திகள் வரும் போது 6 மணி நேரத்துக்குள் அதனை முறியடிக்கின்ற கட்டமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.

அத்தகைய கட்டமைப்பை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கொண்டிருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் சொல்வதை இப்போதும் பலரும் நம்புகிறார்கள். போர் தவிர்ப்பு வலயத்தில் ஆகக்குறைந்தது 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இப்போதும் பலர் நம்புகின்றனர்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர சிறிலங்கா மூன்று முக்கியமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது.

இதில் மிகவும் முக்கியமானது மேற்கு நாடுகளுடன் கொண்டிருந்த சிறப்பான உறவு சீர்குலைந்தமை.

குறிப்பாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் கடந்த காலங்களில் இருந்த மிகச்சிறந்த உறவு இப்போது இல்லை.

போரின் இறுதிகட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று சரியாக விளக்கமளிக்கப்படாததால், புலிகள் சார்பு அமைப்புகள் சொல்வதை குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சுகளும், அரசார்பற்ற நிறுவனங்களும் நம்புகின்றன.

இது சிறிலங்கா எதிர்கொள்கின்ற மற்றொரு அச்சுறுத்தல் “ என்றும் பேராசிரியர் றொகான் குணரட்ண மேலும் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.