Thursday, June 09, 2011

இலங்கையைச் சேர்ந்த 300 அரசியல் தஞ்சம் கோரியோரை பிரிட்டன் நாடுகடத்த தீர்மானம்!

சுமார் 300 இலங்கையர்கள் பிரிட்டனிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி நாடு கடத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் 300 இலங்கையர்களை பிரிட்டனிலிருந்து வெளியேற்றுவதற்காக பிரிட்டனின் எல்லை முகவரகம் விசேட விமானமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பிரித்தானிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை வழக்குரைஞரான நிஷான் பரம்ஜோதி இது தொடர்பாக தெரிவிக்கையில் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கும் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் இந்த வெளியேற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் எனத் தெரிய வருவதாகவும் அவர் தெரிவித்தார். தம்மை நாடுகடத்துவதிலிருந்து தடுப்பதற்கு கடைசிநேர பிரயத்தனங்களில் மேற்படி இலங்கையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் மேற்படி விமானம் ஜூன் 16 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு பிரிட்டனிலிருந்து புறப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1980 களின் முற்பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான இலங்கையர்கள் பிரிட்டனுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். கனடாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான புலம்பெயர்ந்த தமிழர்களை கொண்ட நாடாக பிரிட்டன் உள்ளது. அங்கு சுமார் 120,000 இலங்கைத் தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.