புத்தபிரான் போதித்த பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாம் பௌத்த சம்பிரதாயங்களிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு இத்தினத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக கழிக்க வேண்டும் என ஜனாதிபதி விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் கூறியுள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு :
புத்தபெருமானின் பிறப்பு, முக்தி பெறுதல், பரிநிர்வாண நிலையை அடைதல் ஆகிய மூன்று முக்கியமான சுப நிகழ்வுகளைக் குறித்து நிற்கும் வெசாக் பௌர்ணமி தினம் உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களுக்கு மிக உயர்ந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
நாட்டில் பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்ட முப்பது வருடகால பயங்கரவாத யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் இவ்வருட வெசாக் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான சாதகமானதும் சுதந்திரமானதுமான சூழல் ஏற்பட்டுள்ளமை பௌத்தர்களுக்குக் கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகும். இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருப்பதற்கு நாம் ஆன்மீக நல்லொழுக்க வழியைப் பின்பற்ற வேண்டும்.
புத்தபெருமானின் போதனைகளுக்கேற்ப சகிப்புத்தன்மையூடாக ஆறுதலைப்பெறும் குறுகியபார்வை இல்லாது தூரநோக்கையும் அர்ப்பணத்தையும் கொண்ட தேசமாக நாம் இருக்க வேண்டும். பரி நிர்வாண நிலையை அடைவதற்கான எமது பாதையில் கடந்த காலங்களில் தாமதம் தடையாக இருந்திருக்குமானால் அத்தாமதத்தைத் தவிர்க்கும் வழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள் கடந்தகால தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தமாட்டார்கள்.
ஒரு நல்லொழுக்கமுள்ள தேசத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த வெசாக் பண்டிகை தினத்தில் புத்த பெருமானின் வழியை முழுமையாகப் பின்பற்றுவதற்கு உறுதி பூணுவோம். என தெரிவித்தார் என்றுள்ளது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.