Thursday, May 14, 2009

மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் பேரழிவு ஒன்றைத் தவிர்க்க முடியாது: இலங்கை விவகாரத்தில் ஒபாமா முதற் தடவையாக கடும் எச்சரிக்கை

[வியாழக்கிழமை, 14 மே 2009,] மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தவிர்க்குமாறும் போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதற்கு வழிவகுக்குமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, இந்த மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இது ஒரு பேரழிவாக மாற்றமடையும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரச தலைவர் வலியுறுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்கா படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பன தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு நிலையிலேயே அமெரிக்க அரச தலைவர் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சினை உருவாகியிருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போர்ப் பகுதியில் இருந்து அண்மைக்காலத்தில் கிடைத்த செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு எந்தவிதமான வசதிகளும் இல்லாமல், உணவு, குடிநீர், மருந்து மற்றும் வதிவிட வசதிகள் எதுவும் இல்லாமல் அகப்பட்டுள்ளார்கள். இது பாரிய அவல நிலையைத் தோற்றுவித்திருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரழிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த மனிதாபிமானப் பிரச்சினை ஒரு பேரழிவாக மாற்றமடைந்துவிடும். இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டிய தருணம் இப்போது வந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன். இந்நிலையில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். பொதுமக்களை அவர்கள் பலவந்தமாககப் படைக்குத் திரட்டிக்கொள்வதும், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறான செயல்கள், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒதுக்கப்படுவதற்கே வழிசெய்யும். இந்த மனிதாபிமானப் பிரச்சினையை தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முதலாவதாக - ஆயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கு காரணமாகவுள்ள எழுந்தமானமான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதில் பல மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதேவேளையில் சிக்கலுக்கு உரிய பிரதேசத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக - போர் இடம்பெறும் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு ஒன்று செல்வதற்கும் அங்குள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும். மூன்றாவதாக - இடம்பெயர்ந்துள்ள சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் மக்களையும் பார்வையிடுவதற்கும் அவர்களுக்குத் தேவையான மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் ஐ.நா.வையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். இந்த வேளையில் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகவிருக்கின்றது. இதில் தாமதம் கூடாது என நான் நினைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் மனிதாபிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம். இதற்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் கெளரவத்தைப் பாதுகாக்கக்கூடியவகையிலான இறுதித் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் மரணங்கள் இடம்பெறுவது அந்த நாட்டு மக்கள் விரும்பும் சமாதானத்தை அடைவதற்குத் தடையாகவே இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.