Saturday, November 03, 2007

சிறிலங்கா அரசின் படுபாதகச் செயலை அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டும்: வைகோ

[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007]


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரை வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தின் படுபாதகச் செயலை அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கை:

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தது உள்ளம். தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காக, தாய் மண்ணின் விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன், சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தோடு, ஈழத்தின் விடுதலைப் போரில் பல போர்க்களங்களில் மரணத்தை எதிர்கொண்டு போராடி உள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்க் காப்பாளர்களுக்குள் ஒருவராக, 1980-களில் திகழ்ந்தவர்.

அரசியல் பிரிவு தலைவர்

விடுதலைப் புலிகளின் சாவகச்சேரி படைப்பொறுப்பாளராகவும், பின்னர் யாழ்ப்பாணப்படை பொறுப்பாளராகவும் திறமையாக பணியாற்றி, ஆனையிறவு வெற்றிப் போரில் மரண காயமுற்று மீண்டார். யாழ்தேவியில் நடைபெற்ற யுத்தகளக் காயங்களினால் கால் ஊனமுற்றார்.

1993 முதல் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராகச் செயல்பட்டார். தமிழ் ஈழத்தின் தியாகமும், தீரமும், வீரமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைமை ஏற்று, நோர்வே அரசு முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து பங்கு ஏற்று வந்தார். இலங்கையிலும் அயல்நாடுகளிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பங்கு ஏற்றார்.

காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

உலக நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள், ஐ.நா. மன்றத்தின் பிரதிநிதிகள், இலங்கையில் தமிழர் பகுதிக்கு வரும் போதெல்லாம் அவர்களை புலிகளின் தரப்பில் சந்தித்து வந்தார். இயக்கத் தலைமையிடம் கொண்ட ஈடற்ற விசுவாசமும், பிரச்சினைகளை நுணுக்கமாக அலசி ஆராயும் மதிநுட்பமும், எதிரிகளை திணறடிப்பதோடு, கேட்பவர்களைத் தன்பக்கம் ஈர்க்கும் வாதத்திறமையும் பெற்றவர். தியாக வாழ்வை மேற்கொண்டவர் தமிழ்ச்செல்வன்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி, சமாதான பேச்சுவார்த்தையை சமாதிக்கு அனுப்பியது சிங்கள அரசு தான் என்பது தமிழ்ச்செல்வனைப் படுகொலை செய்ததன் மூலம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

கண்டிக்க வேண்டும்

தமிழ் குலத்தின் பிஞ்சுக் குழந்தைகளை, செஞ்சோலையில் குண்டு வீசிக்கொன்று ஒழித்த சிங்கள அரசு, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேவாலயத்திலும் நடுவீதியிலும் சுட்டுக்கொன்ற சிங்கள அரசு, தமிழ்ச்செல்வன் இருந்த நிலவறைத் தளத்தின் மீது சக்தி வாய்ந்த இராட்சதக் குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தி இப்படுகொலையைச் செய்து உள்ளது.

இப்படி இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு, பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் வழங்கி வரும் சூழ்நிலையில், இந்திய அரசாங்கமும் ராடர்களையும், சக்தி வாய்ந்த இராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வழங்கியது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இந்த துரோகத்தில் ஈடுபடும் இந்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வரும் சிங்கள அரசு, தற்போது தமிழ்ச்செல்வனை கொன்ற படுபாதகச் செயலை உலக நாடுகள் கண்டித்திட முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இரங்கல்

தமிழ் ஈழத்தின் தியாகப் புதல்வன் தமிழ்ச்செல்வன் மறைவினால் கண்ணீரில் தவிக்கும் தமிழ் ஈழ மக்களுக்கும், வீரச் சகோதரனைப் பறி கொடுத்து விட்டு வேதனையில் துடிக்கும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும், ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.