Saturday, September 15, 2007

உண்ணாநிலையைக் கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.!!

[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007] தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கொண்டு வரும் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உணவு, மருந்துகள் உள்ளிட்ட இன்றியமையாத தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நேரிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்பாடு இன்று தகர்ந்து போயுள்ள நிலையில், அங்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ராணுவ மோதல்கள் காரணமாக, இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களில் ஒரு கணிசமான பகுதியினர் சொந்த நாட்டிலேயே புலம் பெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் இன்றைய இன்னல்களைக் களையும் விதத்தில் மனிதாபிமான உதவிகளைச் செய்திட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. ஏற்கனவே 2004-ம் ஆண்டின் ஆழிப்பேரலை பேரழிவையொட்டி, வெளிநாட்டவர் அளிக்க முன்வந்த உதவிகளை, இலங்கையில் தமிழக பகுதிகளுக்கு கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போன்று, இந்தியா தற்போது மனிதாபிமான உதவிகளை அங்குள்ள தமிழ் மக்களுக்கு வழங்க முடியும். இந்த பிரச்சினையில், தமிழக தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகுகள் மூலம் யாழ்பாணத்திற்கு எடுத்துச் செல்ல முற்பட்டு அந்த முயற்சி கைகூடாத நிலையில் அவரும், அவரது ஆதரவாளர்களும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்பி வைக்கவும் மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இது தொடர்பாக பழ.நெடுமாறன் மேற்கொண்டுள்ள உண்ணாநிலையைக் கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் வரதராஜன் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.