Thursday, September 27, 2007

இராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் - கேணல் சூசை

[வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2007]

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக, இனத்தினுடைய துபீட்சத்திற்காக, இந்த 30 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளையும், பல திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியவர் எங்களுடைய தலைவர் என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை புதுக்குடியிருப்பு கோட்டத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கள் நினைவு வணங்க நிகழ்வு மற்றும் '' சிறகு விரித்த புலிகள் '' இறுவட்டு வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய பலத்தின் ஊடாகத்தான் எங்களுடைய இனத்தை தலைநிமிர வைத்திருக்க முடியும். 1995ம் ஆண்டு 6 இலட்சம் மக்கள் யாழ்ப்பாணத்திருந்து ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட போது உலகம் எந்தவொரு கருத்துக்களையும் சொல்லவில்லை.
நாங்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி 2000ம் ஆண்டு போனபோது இந்த உலகம் எல்லா இடங்களிலிருந்தும் வாரி இறக்கிக் கொடுத்தது.

அந்த மமதையில் மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்த போது முதுகெலும்பு உடைக்கப்பட்டது. அவர்களுடையை முதுகெலும்பை ஒட்ட வைப்பதற்காகத்தான் இவர்கள் இந்தப் பேச்சுக்களுக்கு ஊடாக சர்வதேசத் தலையீடு, பேச்சுவார்த்தை என்ற வலைக்குள் இழுத்துச் சென்றார்கள்.

நாங்கள் ஒன்றை மட்டும் இறுக்கமாகவும் தெளிவாகவும் சொல்லுகிறோம். நாங்கள் எந்தக் காலத்திலும் இராணுவ ரீதியில் எங்களுடைய மண்ணை அடிபணிய வைக்கிறதோ? அல்லது தோல்வியுனுடைய விழிம்புக்கு இட்டுச் செல்வதோ?. ஆயுத முனையில் இராணுவ ரீதியாக வென்றுகொண்டு எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணலாம், பேச்சு நடத்தலாம் என்ற கருத்தை முன்வைப்பார்கள் என்றால்? அதை ஒரு காலமும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

திலீபனுக்கும் எங்களுடைய தளபதிகளுக்கும் தலைவர் ஊட்டிய ஓர்மம் அதுதான் நீர் அருந்தாமல் கூட 12 நாட்கள் நோன்பிருந்து தன்னுடைய உடலைத் தீயாக திலீபன் உருக்கியளித்தான்.

எங்களுடைய இனத்தின் விடுதலைக்காக இனத்தினுடைய, துபீட்சத்திற்காக, தலைவர் இந்த 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் பல வெற்றிகளையும், பல திருப்பு முனைகளையும் ஏற்படுத்தியவர்.

1999ம் ஆண்டு காலப் பகுதியில் புதுக்குடியிருப்பில் அருகில் இருக்கிற ஒட்டிசுட்டான் பகுதியில் படைகள் வந்து நின்ற போது, எல்லாரிடமும் ஒரு அச்சம் இருந்தது.

புதுக்குடியிருப்பா? அல்லது வட்டக்கச்சியா? அல்லது ஏ 9 நெடுஞ்சாலையால் இடங்களைப் பிடித்துக்கொண்டு போனால் எங்களுடைய நிலைமை என்ன? அந்த நிலைமையைத் தலை கீழாக மாற்றியமைத்தவர் எங்களுடைய தலைவர்.

தலைவருடைய கரங்களைப் வலுப்படுத்தி, இந்த விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்க வேண்டியது எல்லோருடைய கடமையும். எங்களுடைய தலைவர் தீர்க்க தரிசனமும், மதிநுட்பமும் நிறைந்த ஒரு தலைவர்.

அவருடைய நாட்களினுள் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை எங்களுடைய விடுதலையை நாங்கள் வென்றெடுக்க வேண்டும். அதற்காகத்தான் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு என்ற கருத்தோடு படை திரட்டல் நடவடிக்கையை மும்முரமாக செய்து கொண்டிருக்கிறோம்.

தீர்க்க தரிசம் மதிநுட்பம் என்பதற்கு ஒரு சான்று 1988ம் ஆண்டு தலைவரைச் சந்திக்கச் சென்ற போது, மணலாற்றுக் காட்டில் ''ஒப்பிரேச் செக் மேட்'' நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் கையில் குண்டு அடிபட்டு தலைவருடை இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டேன். தலைவர் இருந்த இடத்திற்கு பக்கத்திலேயே தலைவருக்கு அருகாமையில் இருந்து கொண்டிருந்து தலைவர் சிகிற்சைக்காக அனுப்பி வைத்தவர்.

ஆனால் அந்த சிகிற்சையை அண்டை நாட்டில தான் பெற்றுக்கொண்டோம். ஆனால் இன்றைக்கு அதைவிட மிக மோசமான நிலையில் கடலில் விபத்தைச் சந்தித்த போதும் கூட, குறிப்பிட்ட நாட்களில் உங்களிடம் கருத்துக்களைச் சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால் தலைவர் தீர்க்க தரிசனத்தோடு உருவாக்கிய மருத்துவத்துறை தான்.

1988ம் ஆண்டு ஒரே ஒரு மருத்துவ துணையோடு மணலாற்றுக் காட்டுக்குள்ளே நிலை கொண்டிருந்த தலைவருடைய மையப் பணிமனை, இன்றைக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எவ்வளவு விபத்துக்களை, எவ்வளவு போராளிகளின் விழுப் புண்களை அடைந்தாலும் அவர்களை களமுனையில் அனுப்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தது என்றால் அது தலைவரின் தீர்க்க தரிசனத்தால் உருவாக்கப்பட்ட மருத்துவத்துறைதான்.

சிறீலங்கா அரசு விசமத்தனமான பிரச்சாரத்தை இன்று நேற்று மேற்கொள்ளவில்லை. அது காலம் காலமாக உளவியல் ரீதியாக சிங்கள தேசத்தையும் உலகத்தையும் ஏதோ ஒரு புரட்டுப் புரட்டி, அப்படியாவது ஆத்ம திருத்தியை காணலாம் எனப் பிரச்சாரத்தை செய்துவருகின்றது.

சிறீலங்கா அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் எல்லாவற்றுக்கும் நாங்கள் பதில் அளித்துக்கொண்டு இருப்போம் என்றால், நாளாந்தம் ஒரு மறுதலிப்பை விடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உங்களைவிட புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய உறவுகள் தான் குழம்பியிருக்கிறார்கள். வீதியில் எங்களுடைய வாகனம் 100 மீற்றர் வேகத்தில் போகும் போது ''கியரை'' மாற்றாமல் வெட்டினால் வாகனம் பிரட்டும் அதே மாதிரித்தான் கடலிலும் அது பொருந்தும்.

வேகப் படகுகள் பரீட்சார்த்தமாக ஓடிப்பார்த்த போது, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் படகு ஒன்று வந்து மோதியது. என்னுடைய மகன் இறந்தது உண்மை. அவரோடு கூட நின்ற என்றுடைய போராளி ஒருவர் இறந்தது உண்மை. இரண்டு மூன்று போராளிகள் விழுப்புண் அடைந்தது உண்மை இதுதான் நடந்தது.

ஆனால் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகவும் இறுக்கமாகவும் சொல்லுகிறோம். தலைவருடை நாட்களினுள் எங்களுடைய இனத்தினுடைய விடுதலையை பேச்சு நடத்தித் பெறமுடியாது. இராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும். அதற்காகத்தான் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்கு கண்டிப்பாக உங்களுடைய பிள்ளைகளை பங்களிப்பு மிக விரைவாக இராணுவ ரீதியான வெற்றிகளைத் தேடித்தரும் என கேணல் சூசை தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.