[திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வரும் வரையில் சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகளுக்கு தொடர்ந்தும் பணி நீடிப்புக்களை வழங்கி தக்கவைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது என்று "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. "த நேசன்" வார ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவின் முப்படைகளின் தளபதியான அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் முக்கியமான பணியை செய்துள்ளார். அவர் தனது இரு படைத்தளபதிகளின் பதவிகளை நீடிப்புச் செய்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் இராணுவத்தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரது பதவிகள் நீடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் பதவிக்காலங்கள் எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முடிவடைய உள்ளது. வான்படைத் தளபதி ஏயர் வைஸ் மார்சல் றொசான் குனதிலக்கவின் பதவிக்காலத்தை நீடிக்க தேவையில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே மேலதிகமாக மூன்று வருடங்களுக்கான பதவியைக் கொண்டுள்ளனர். இராணுவத் தளபதிக்கு கடந்த ஆண்டு பதவி நீடிப்பை வழங்குவதில் அதிக தாமதம் ஏற்பட்டிருந்தது. நவம்பர் மாத நடுப்பகுதியிலேயே நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வருடம் பொன்சேகாவிற்கு பதவி நீடிப்பை வழங்குவதில் மகிந்தவிற்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. எனவே அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு முன்னரே செப்ரம்பர் மாத நடுப்பகுதியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோத்தபாயா ராஜபக்சவுடன் இணைந்து இந்த போரை முடிப்பதற்கு சரத் பொன்சேகா முக்கியமானவர். அவர்கள் இருவரினதும் முக்கியத்துவம் உணர்ந்து விடுதலைப் புலிகளும் தற்கொலை தாக்குதல்கள் மூலம் அவர்களை அகற்ற முற்பட்டிருந்தனர். அனைத்துலகத்தின் ஆதரவுடன் போரை நிறுத்துவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதன் மூலம் அவர்கள் தமது இராணுவத்தை ஒழுங்குபடுத்தவும், மூச்சுவிடவும் கால அவகாசத்தை பெற முயற்சித்து வருவதாக ஓகஸ்ட் மாதம் 20 ஆம் நாள் நடைபெற்ற ஊர்காவல் படையினரின் அணிவகுப்பின் போது கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார். படைத் தளபதிகளின் பதவி நீடிப்பில் அனைத்துலகத்தின் அழுத்தங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மகிந்த ராஜபக்ச அதனை அதிக நாட்களுக்கு முன்னதாக செய்துள்ளார். இந்த மூன்று தளபதிகளின் சேவைகளில் கோத்தபாய ராஜபக்ச மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், கடற்படைத் தளபதியின் பதவி நீடிப்புக்கான காலத்தையும் எதிர்பார்த்திருந்தார். விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்களை கடற்படையினர் அழித்தது அதற்கான நல்ல காலமாக அமைந்துள்ளது. இந்த தளபதிகளின் பதவி நீடிப்பின் போது ஏனைய தளபதிகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்படாத படியும் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளார். கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட பதவி நிலையில் மூத்தவர். இவர் 2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 1 ஆம் நாள் பதவியேற்றிருந்தார். சரத் பொன்சேகா 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் பதவியேற்றிருந்தார். 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் நாள் அவர் இராணுவத்தில் இணைந்ததில் இருந்து தரைத் தாக்குதலில் நீண்ட அனுபவத்தை உடையவர். சரத் பொன்சேகாவின் முக்கியத்துவத்திற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசின் காலத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றுவதற்கு அனுமதிக்காதனை உதாரணமாக கூறலாம். இராணுவத்தின் உயர் அதிகாரியான டொனால்ட் பெரேராவும் இராணுவத் தளபதியின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனுமதிகளை வழங்கி வருகின்றார். அவர்களிடம் பிளவுகள் இல்லை. எனவே தான் அரசு போரை நிறைவு செய்வதற்கு முயற்சித்து வருகின்றது. படைத்துறையைச் சேர்ந்த பல ஜெனரல்களும் தளபதிகளும் ஒய்வுபெறும் போதும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிரந்தரமாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். ஆனால் விடுதலைப் புலிகளை முறியடிக்கும் வரையிலும் படைத் தளபதிகளுக்கு பல பதவி நீடிப்புக்களை வழங்கி தக்கவைப்பதற்கு இந்த அரசு முயற்சித்து வருகின்றது. அரைப் பகுதியோ அல்லது மூன்றில் இரண்டு பகுதியோ முடிவடைந்த நிலையில் படையினர் தமது நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடந்த மூன்று வாரத்தில் இருமுறை தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது முப்படைகளின் தளபதியாகிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முன்பாக திருகோணமலையில் கோத்தபாய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டிருந்தது. எனவே போர் தொடரப்போகின்றது என்பதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலே இது. தற்போது கிழக்கில் தமது காணிகளை சிங்கள மக்கள் அபகரித்துக்கொள்ளலாம் என்ற அச்சமும் முஸ்லிம் மக்களிடம் தோன்றியுள்ளது. இதற்கு ஆதாரமாக அண்மையில் சம்பூர் பிரதேசத்தையும் நிர்வகித்து வந்த மூதூர் பிரதேச செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கு கீழ்நிலையில் இருந்த அதிகாரி அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் முன்னாள் பிரதேச செயலாளர் கிழக்கு மாகாணசபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசு எண்ணியுள்ள நிலையில் இவை நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தல்களை கண்காணிக்க சார்க் பிராந்திய, ஐரோப்பிய ஒன்றிய, அணிசேரா நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்படலாம். தேர்தலுக்கு பின்னர் அரசு 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவையும் ஏனையோரையும் திருப்திப்படுத்தும் நடவடிக்கை. ஆனால் அதில் உள்ள நெருக்கடியான விடயம் வடக்கு - கிழக்கு இணைப்பை அரசு பாதுகாக்க தவறியதாகும். இந்த இணைப்பை கருணா குழுவினரை போன்ற ஒரு சில குழுக்களை தவிர எல்லோரும் ஆதரித்திருந்தனர். அனைத்துச்கட்சி குழு தனது தீர்வுத்திட்டத்தை இந்த வருட இறுதியில் முன்வைக்கலாம். வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அதுவரை போரை தொடர்வதற்கு அரசு முயற்சித்து வருகின்றது. எனினும் அனைத்து கட்சிக்குழுவின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்பது குறித்த அச்சமும் அரசுக்கு உண்டு. ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. அரசு கிழக்கை வெற்றியின் மாதிரி வடிவமாக்கி வடக்கில் அதனை பின்பற்ற முயற்சிப்பதாக தெரிகின்றது. கிழக்கின் தேவைகள் குறித்த ஆய்வுகள் ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தன. அந்த பகுதிகளில் இந்தியாவின் உதவித் திட்டத்தின் அடிப்படையில் அதன் முதலீடுகளை அரசு பெறக்கூடும். இது இந்த பிரதேசத்தில் அதன் பிரசன்னத்தை அதிகரிக்கச் செய்யும். அம்பாந்தோட்டை மற்றும் நுரைச்சோலை அபிவிருத்தி திட்டங்களை சீனாவிற்கு வழங்கியதற்கான மாற்றீடு இதுவாகும். இந்தியாவை சுற்றி சீனா, பர்மா, பாகிஸ்தான் என முக்கோண வடிவில் எதிரான நாடுகள் சூழ்ந்திருப்பது அதற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பும் கிழக்கில் இயங்கி வந்ததான சந்தேகங்கள் தோன்றியிருந்தன. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து சிறிலங்கா ஆயுதங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக இந்தியா அதிருப்தி அடைந்துள்ள அதேசமயம், ரஸ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் இருந்து சிறிலங்கா ஆயுதம் வாங்குவது குறித்து அது கவலைப்படவில்லை. சீனாவின் படைத்துறை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முகமாக அமெரிக்காவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அதிகரித்துள்ளது. அது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், சிறிலங்காவுடன் பொருட்கள் சேவைகள் வழங்குதல் ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார் கடல் பகுதியில் எண்ணெய்ப் படிவுகள் இருப்பதும் அமெரிக்காவை தொடர்ந்து கவர்ந்து வருகின்றது. இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு அதன் அகழ்வுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு எல்லோருடனும் ஒத்துப்போவதாக தெரிகின்றது. அதாவது போரை முடிப்பதற்கான ஆதரவை பெறும் வரையிலும் இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என எல்லோருடனும் அது அனுசரித்து போகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Monday, September 24, 2007
போர் முடியும் வரை படைத்தளபதிகளை அரசு மாற்றப் போவதில்லை: "த நேசன்" வார ஏடு.!!
Monday, September 24, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.