[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தில் கண்டனம் கொண்டுவர முடியுமா? என்று ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயலதிக்க சவால் விட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 6 ஆவது மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்போருக்கான கூட்டத்தை கடந்த வியாழக்கிழமை (20.09.07) சிறிலங்கா அரசாங்கம் நடத்தியது. சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயதிலக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிலங்கா சார்பில் சிறிலங்கா சமாதான செயலகத்தின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, சிரானி குணதிலக்க, சிறிலங்கா சட்டமா அதிபர் காரியாலய பிரதிநிதி பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஹியுமன் றைட் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் காப்பகத்தின் ஜெனீவாப் பிரதிநிதிக்கும் சிறிலங்காத் தரப்பினருக்கும் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. சிறார்களை கருணா குழு தமது குழுவிலும் சிறிலங்கா இராணுவத்திலும் சேர்ப்பது மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை சிறிலங்கா ஏற்பது ஆகியன தொடர்பில் பிரதானமாக விவாதிக்கப்பட்டன. தமிழ்ப் பிரதிநிதிகளான இமானுவேல் அடிகளார், அல்போன்ஸ் பேர்னாட் அடிகளார், வழக்கறிஞர் சிவபாலன், தமிழர் மனித உரிமைகள் யைமத்தைச் சேர்ந்த கிருபாகரன் ஆகியோர் சிறிலங்காவின் அரசின் பிரதிநிதிகளுடன் வடக்கு - கிழக்கின் மனிதாபிமான விடயங்கள் மற்றும் வடக்கு - கிழக்குப் படுகொலைகள் தொடர்பில் கேள்விகள் எழுப்பினர். இக்கூட்டத்தில் பேசிய சிறிலங்கா சமாதான செயலகத்தைச் சேர்ந்த இருவரும் சமாதானப் பேச்சுக்கள் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. மேலும் சிறிலங்காவில் நடைபெறுவது வேறு இங்கே நீங்கள் உரையாற்றும் விடயங்கள் வேறு என்றும், இதற்கு உதாரணமாக ஹேரால்ட் றிபுயுனில் செப்ரெம்பர் 17 ஆம் நாள் வெளியான சிறிலங்காவில் போர்தான் சமாதானத்தை கொண்டுவரும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டதனையும் உதாரணமாக எடுத்துக்காட்டினர். இதனைத் தொடர்ந்து, "சிறிலங்காவில் இயங்குவது சமாதான செயலகம் அல்ல என்றும் போர்ச் செயலகம் என்று கேள்விப்பட்டதாகவும் அதனையே சிறிலங்கா சமாதான செயலகத்தைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் பிரதிபலித்துள்ளனர் என்று தமிழ்ப் பிரதிநிதிகளில் ஒருவர் சுட்டிக்காட்டினார். ஐ.நா. வுக்கான அரச பிரதிநிதிகள், ஐ.நா.வின் முக்கிய புள்ளிகள், அனைத்துலக அமைப்புக்களின் பிரமுகர்களள், அரச சார்பற்ற பிரதிநிதிகள் என 75-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை இக்கூட்டத்தில் சிறிலங்காவில் அரச பிரதிநிதிகள் கடுமையாக சாடினர். அரச சார்பற்ற பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து கொண்டு பணத்தை வாங்கி புலனாய்வு மற்றும் தகாத வேலைகள் செய்வதாகவும் சாடினர். மேலும் சிறிலங்காவின் ஐ.நா. பிரதிநிதி தயான் ஜயதிலக்க அங்கு கூடியிருந்த இதர தரப்பு பிரதிநிதிகளிடம் முடிந்தால் எம்மீது கண்டனம் கொண்டு வந்து நிறைவேற்ற முடியுமா என்று சவால் விட்டுள்ளார். இக்கூட்டத்தில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த நிமால் குலதுங்க என்ற நபர் சிறிலங்காவின் பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் திங்கட்கிழமை சிறிலங்கா அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, September 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.