Sunday, September 23, 2007

தியாகி திலீபன் நினைவு நிகழ்வுகள்

[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] தியாகி லெப். கேணல் திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாட்களில் அடையாள உண்ணாவிரதங்கள், சிரமதானப் பணிகள் ஆகியவற்றில் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று வருகின்றனர். முல்லைத்தீவு கோயில் குடியிருப்பு தேசியப்பணிக்குழு ஒழுங்குபடுத்தலில் அடையாள உண்ணாவிரதமும் நினைவு நிகழ்வும் நேற்று காலை சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதிரிக் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலிகளின் வட்டப் பொறுப்பாளர் தமிழ்மாறன் ஏற்றினார். திருவுருவப் படத்திற்கான ஈகச்சுடரினை லெப். களப்பாவையின் தாயார் ஏற்றினார். முல்லை. மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையின் ஒழுங்குபடுத்தலில் கரைத்துறைப்பற்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள், பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்கள் ஆகியோர் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சிரமதானப் பணி மூலம் துயிலும் இல்லத்தின் உட்பகுதி துப்புரவு செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. வள்ளிபுனம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை பல ஆண்டுகாலமாகக் குன்றும் குழியுமாக இருந்த பாரதி இல்ல வீதி சிரமதானம் செய்யப்பட்டது. இதற்கு வள்ளிபுனம் வட்ட அரசியல்துறையினரின் ஏற்பாடு செய்திருந்தனர். அடையாள உண்ணாவிரதமும் நினைவு நிகழ்வும் நேற்று முன்தினம் வெட்டுவாய்க்கால் அ.த.க. பாடசாலையில் வட்டுவாகல் தேசியப் பணிக்குழுத் தலைவர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. விசுவமடு வட்டத்தைச் சேர்ந்த மக்கள், பொது அமைப்புப் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆகியோர், விசுவமடுப் பகுதியில் சிரமதானப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சிரமதானப் பணி மூலம் இந்த வட்டத்திற்கு உட்பட்ட பொது இடங்கள், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், வீதிகள் என்பன தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று கண்டாவளை வட்டத்திலும் சிரமதானப் பணி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமந்தனாறு வட்டம், தருமபுர வட்டம், வள்ளுவர் வட்டம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், கமக்கார அமைப்பினர், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளி. முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க அந்தோனியார் வித்தியாலயத்தில் நேற்று முன்நாள் கோரக்கன் கட்டு தேசியப் பணிக்குழு பொருளாளர் டேவிட் தலைமையில் அடையாள உண்ணாவிரத நிகழ்வுகள் இடம்பெற்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.