[ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2007] வன்னியை நோக்கி சிறிலங்காப் படையினர் நகர்வதற்கு முன்னோடியாகவே வான் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று கொழும்பு ஊடகமான "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் லக்பிமவின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எரித்திரியாவில் இருந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்து வருவதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வறுமையில் வாடும் இந்த நாட்டில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும், நவீன ஆயுதங்களையும் குறைந்த விலையில் பெறமுடியும். எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை பெறுவதற்கான இலகுவான இடம் எரித்திரியாவாகும். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிக்-29, சுக்கோய் தாக்குதல் வானூர்திகள், பல்குழல் உந்துகணை செலுத்திகள், கனரக பீரங்கிகள் போன்றவற்றை கொண்டு ஆபிரிக்க நாடுகள் மோதிய வரலாறும் இதுவே. 2000 ஆம் ஆண்டு பெரும் மோதல்கள் இடம்பெற்றதுடன் எதியோப்பியப் படையினர் எரித்திரியாவின் முக்கிய நகரான பரன்ரு நகரையும் கைப்பற்றியிருந்தனர். விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் 1,200 - 2,000 கடற்புலி உறுப்பினர்களை கொண்டுள்ளனர். அவர்களின் படகு தொகுதியில் 15 தொடக்கம் 20 படகுகள் மணிக்கு 35 கடல்மைல் வேகத்தில் பயணிக்க கூடியவை. இவற்றில் 23 மி.மீ, 12.7 மி.மீ, 30 மி.மீ பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கடற்புலிகளின் இந்தப் படகுத் தொகுதியில் 10 படகுகள் 50 அடி நீளமானவை. அவை விநியோக பணிகளை மேற்கொள்பவை. மேலும் 30 - 40 தற்கொலைப் படகுகளும் அவர்களிடம் உண்டு. படையினரின் கடல் நடமாட்டங்களை விடுதலைப் புலிகள் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ராடார்களின் உதவியுடன் அவதானித்து வருகின்றனர். அவை 30 - 40 கடல் மைல் தூர வீச்சுக்கொண்டவை. சிறிலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரி-55 ரக பிரதான போர் டாங்கிகள் இரண்டை விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த டாங்கிகளின் எறிகணைகள் 6,900 மீற்றர் தூர வீச்சுக் கொண்டவை. இவை தவிர பின்னுதைப்பற்ற பீரங்கிகள் பலவற்றையும் கொண்டுள்ளனர். இவை விடுதலைப் புலிகளின் கரையோர நடமாட்டங்களுக்கு ஆதரவானவை. தற்காப்பு போரையே நடத்தி வருவதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கடந்த வாரம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் முகமாலை நாகர்கோவில் முன்னரங்கு, மன்னார் மற்றும் ஒமந்தை மேற்கு பகுதிகள், மணலாறு போன்ற மூன்று முனைகளில் தற்காப்பு சமரில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் மடுவிற்கு மேற்குப் பகுதியில் படையினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் அதிகளவான உறுப்பினர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் நகர்வுகளை மட்டுப்படுத்தியுள்ளது. சிறிலங்காப் படையினர் மணலாற்றில் புதிய களமுனையை திறக்கும் திட்டத்தை கொண்டுள்ளனர். ஏற்கனவே அங்கு மோதல்கள் இடம்பெற்று வருகின்றதும் குறிப்பிடத்தக்கது. மணலாற்றில் நிறுத்தப்பட்டுள்ள புதிய படையணியான 58 ஆவது படைப்பிரிவு முல்லைத்தீவை நோக்கி நகரலாம். இந்த படையணி இரு பிரிகேட்டுக்களை கொண்டது. எனினும் ஒக்ரோபர் மாத இறுதியில் அது முழுப் படையணியாக உருவாக்கப்பட உள்ளது. மேலும் ஒரு புதிய படையணியான 59 ஆவது படையணியை உருவாக்கும் திட்டமும் படையினரிடம் உள்ளது. எனினும் தமது மாவீரர் நாள் உரைக்கு முன்னதாக விடுதலைப் புலிகள் ஒரு இராணுவ வெற்றியை ஈட்ட முனையலாம். வடக்கை விட தெற்கிலும் அவர்கள் தாக்குதலை நடத்தலாம். சிறிலங்கா வான்படையினர் தற்போது முல்லைதீவுப் பகுதிகளில் மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் மிக்-27, கிபீர் தாக்குதல் வானூர்திகள் ஈடுபட்டு வருகின்றன. படையினர் வன்னியை நோக்கி முன்நகர்வதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை பலவீனமாக்கும் முயற்சி இதுவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Sunday, September 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.