Tuesday, August 14, 2007

மக்கள் மீதே போர் நடத்தப்படுகிறது என்பதை உணர்த்தியது செஞ்சோலைப் படுகொலை: வே.இளங்குமரன்

[செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007]

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீதே சிறிலங்கா அரசாங்கம் போரை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்திய தாக்குதல் சம்பவமாக செஞ்சோலைப் படுகொலைச் சம்பவம் அமைந்திருந்தது என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வே.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செஞ்சோலை சிறார்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் பேசியதாவது:

தமிழினம் மீதான சிறிலங்கா அரசின் படுகொலைகள் மிக நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீண்டகால படுகொலைகளில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தழிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதும் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் மாணவர்களும் அடங்குவர். சிறிலங்கா அரசின் முப்படைகளின் தாக்குதல்கள் மாணவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

தமிழ் மக்கள் மீதே அது போரை நடத்திக்கொண்டிருக்கின்றது என்பதை உலகிற்கு உணர்த்திய தாக்குதல் சம்பவமாக செஞ்சோலை வளாக தாக்குதல் அமைந்திருக்கின்றது

இந்நிகழ்வு நடந்த மறுநாளே உலகெங்கும் வாழ் தமிழ்மக்கள் அந்தந்த நாடுகளில் அணிதிரண்டு தங்கள் கண்டனக்குரல்களை வெளிப்படுத்தினர்.

1983 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசின் இனவெறித் தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மக்கள் மீதான தாக்குதல் நடைபெற்ற கால கட்டத்தில் தமிழகத்தில் சட்டசபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு அடுத்து செஞ்சோலை வளாகப் படுகொலையை கண்டித்து ஒர் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகில் மதிப்புக்குரிய நிலையில் இருப்பவர்கள் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சிறிலங்கா அரசின் வெறியாட்டம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

செஞ்சோலை வளாகப் படுகொலைக்குப் பின்பும் சிறிலங்கா அரசால் ஏராளமான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் வவுனியா கற்குளம் பாடசாலை கிபீர் ரக வானூர்தித் தாக்குதலில் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் இனவெறி செயற்பாட்டில் கல்விக்கு எதிராக மாணவர்கள் மீதான நடத்துகின்ற தாக்குதல் திட்டங்களில் இதுவும் ஒரு உச்சகட்ட கொடுமையாக இருக்கின்றது.

மாணவர்கள் கல்வி கற்பதற்கான பாட நூல்கள்இ பாடத்திட்டங்கள்இ ஆசிரியர் பற்றாக்குறைஇ பௌதீக வளப்பற்றாக்குறை போன்றவற்றினால் தமிழ் மொழி கல்விக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தி வருகின்ற அரசாங்கமானது தனது இனவெறி ஆயுதமாக மாணவர்களை கொன்றொழிக்கும் முயற்சியில் யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று கருதி தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றது என்றார் வே.இளங்குமரன்.

நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.