Monday, August 06, 2007

க.பொ.த (உ.த) பரீட்சையை குழப்பும் சிறிலங்கா இராணுவம்: த.தே.கூ. கண்டனம்

[திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007] க.பொ.த (உ.த) பரீட்சை எழுதும் தமிழ் மாணவர்கள் சித்தியடையக் கூடாது என்பதற்காக குழப்ப நடவடிக்கைகளிலும் தடை நடவடிக்கைகளிலும் சிறிலங்கா இராணுவம் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத்தீவு முழுவதும் கபொத உயர் தரப் பரீட்சை இன்று தொடங்கியுள்ளது. இப்பரீட்சைக்கு தோற்ற வேண்டிய தமிழ் மாணவர்கள் தம்மை முழுமையாக பரீட்சைக்கு தயார்ப்படுத்தினார்களோ இல்லையோ பரீட்சை எழுதுகிறார்களோ இல்லையோ அல்லது பரீட்சை எழுதக்கூடிய சூழ்நிலை அம் மாணவர்களுக்கு உண்டோ இல்லையோ சிறிலங்கா அரசு பரீட்சையை தனது திட்டத்திற்கு அமைய நாடாத்துகின்றது. சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளாலும் தொடாச்சியான எறிகணைத் தாக்குதல்கள் விமானத் தாக்குதல்கள் கடற்படைத் தாக்குதல்கள் மற்றும் மாணவர்கள் மீதான கைதுகள் -கடத்தல்கள் -சித்திரவதைகள் கொலைகள் என்பவற்றின் காரணமாகவும் அச்சமடைந்த மாணவர்கள் தம்மை முழுமையாக பரீட்சைக்கு தயார்படுத்த முடியாத நிலையில் எரிபொருள் இல்லை மின்சாரமும் இல்லை குப்பி விளக்கும் இல்லை உண்ண உணவில்லை அகதிமுகாம் வாழ்வு என்கின்ற நிலையிலும் கூட தமது நம்பிக்கையை மட்டும் இழக்காது பெரும் பிரயத்தனப்பட்டு ஒருவாறு தமது விடா முயற்சியால் ஓரளவாவது பரீட்சைக்கு தம்மை தயார்படுத்திக் கொண்ட தமிழ் மாணவர்கள் பரீட்சையையாவது ஓரளவு நிம்மதியாக எழுதலாம் என்றால் அதற்கும் சிங்கள் அரசும் படைகளும் விடுவதாக இல்லை. இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில், இன்று ஆரம்பமான பரீட்சைக்காக சென்ற மாணவர்களை நீண்ட நேரம் வீதியில் வழி மறித்த படையினர் நீண்ட நேரம் தாமதித்து பரீட்சைக்கு செல்ல அனுமதித்துள்ளனர் இதனால் மாணவர்கள் பதற்றம் அடைந்து பரீட்சை எழுதும் மனநிலையை இழந்ததால் பலர் சீராக பரீட்சை எழுத முடியாது போனதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த கிபிர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாழப்பறந்து பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் புறநகர் பகுதிகளில் குண்டுகளையும் வீசி மாணவர்களை பெரும் பதற்றத்திற்குள்ளாக்கிவிட்டுச் சென்றுள்ளன. வான்படையினரதும் இராணுவத்தினரதும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துவிடக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகளாகும். இச்சம்பவத்தினை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் மாணவர்களின் பரீட்சைகளை குழப்பும் வகையிலான நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்தி சுமூகமாக பரீட்சை எமுதக் கூடிய சூழலை உருவாக்கும்படி வேண்டுகின்றேன் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.