சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கினால் சிறிலங்கா இராணுவத்தினரின் மனநிலை பாதிக்கப்படும் என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:
பேச்சுக்களை மீளத் தொடங்கக் கோரும் மேற்குலகின் சதியில் சிறிலங்கா அரசாங்கம் விழுந்து விடக்கூடாது.
கிளிநொச்சிக்கு இணைத்தலைமை நாடுகள், தமது பிரதிநிதியாக நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை அனுப்புவதற்கு முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி கொடுக்கக்கூடாது.
தற்போதைய நிலையில் புலிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களை மீண்டும் பலமுடையவர்களாக்கவே அனைத்துலகம் சதிமுயற்சி செய்கிறது. நோர்வே ஊடாகவே இந்த சதி மேற்கொள்ளப்படுகிறது. கவலைக்கிடமான இந்த சதியில் அரசாங்கம் சிக்கியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் அழைத்தால் மட்டுமே நோர்வேத் தரப்பினர் சமாதான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். இதுதான் முறை. எனவே நோர்வேயை அழைப்பதன் மூலமாக இந்த சதி முயற்சிக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது.
அனைத்துலகத்தின் தேவைகளுக்காகவே நோர்வே, சிறிலங்கா விடயத்தில் தலையிட்டு வருகிறது. அத்துடன் ஹன்சன் பௌயரை கிளிநொச்சிக்கு அனுப்பினால் புலிகளுக்கு நோர்வே நிதி உதவியையும் ஆயுதப்பயிற்சியையும் வழங்கும். கிழக்கில் வெற்றியீட்டும் படையினரை இது அவமதிக்கும் செயலாகும்.
எனவே நோர்வேயை அழைத்து புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறோம் என்றார் விமல் வீரவன்ச.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.