Wednesday, June 06, 2007

ஆழிப்பேரலை உதவிகளை தொண்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளன: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்.!!

[புதன்கிழமை, 6 யூன் 2007]

ஆழிப்பேரலை கட்டுமானப்பணிகளுக்காக கொடுக்கப்பட்ட நிதியை அனைத்துலக அரச சார்பற்ற பல தொண்டர் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளதாக முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒக்ஸ்பாம், சிறுவர் பாதுகாப்பு அமைப்பு, விசன் போன்றன உட்பட முன்னணி அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஆழிப்பேரலை மீள்கட்டுமான உதவியாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தன.

இலங்கையில் இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து பிரசல்சில் நடைபெறும் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்துக்களை அறிந்து வருகின்றது. இலங்கைக்கும், இந்தோனேசியாவுக்கும் சேர்த்து ஐரோப்பிய ஒன்றிய மக்களால் 120 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டிருந்தன.

தொண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணைகள் தேவை. ஆழிப்பேரலை உதவிகளுக்காக வழங்கப்பட்ட நிதியை சில தொண்டர் நிறுவனங்கள் தமது உயர் அதிகாரிகளின் ஆடம்பர வாழ்க்கைக்கான செலவுகளுக்கு பயன்படுத்தியதாக சில குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தொண்டு நிறுவனங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

இந்த உரையின் போது சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல் தொடர்பாகவும் நிரஞ்சன் தேவா கவனம் செலுத்தியிருந்தார்.

இலங்கையில் பிறந்தவரான நிரஞ்சன் தேவா பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.