Saturday, June 02, 2007

கட்டுநாயக்க வான் படைத்தளத்திற்கு திடீரெனச் சென்ற மகிந்த.!!

[சனிக்கிழமை, 2 யூன் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய கட்டுநாயக்க வான் படைத்தளம் மற்றும் அதன் அருகில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் ஆகியவற்றிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை திடீரெனச் சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள், ராடார் தொகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார்.

மகிந்தவுடன் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். இதன் போது, தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்ற போது இருந்த குறைபாடுகள் தொடர்பாகவும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வானூர்தி நிலையத்தில் உள்ள ராடார்கள் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை பார்வையிட்ட மகிந்த அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பை மிகவும் உயர்வாக பேணுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

மகிந்தவுடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வான்படைத் தளபதி றொசான் குணதிலகா, மற்றும் உயரதிகாரிகள் சென்றிருந்ததுடன், தளத்தில் ஏறத்தாழ ஒரு மணிநேரம் மகிந்த தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே உயர்சக்தி கொண்ட ராடார்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் நடைபெற்று வருவதாகவும், கடந்த வாரம் இந்தியாவின் வான்படை வானூர்தி ஒன்று இராணுவ ஆயுதங்களுடன் சிறிலங்காவின் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.