Monday, June 11, 2007

புலிகளின் வான்படை கண்டு பயப்பட்டால் இந்திய வான்படையையே கலைத்து விடுங்கள்: ஜெனீவாவில் பழ. நெடுமாறன்.!!

[திங்கட்கிழமை, 11 யூன் 2007]


தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையால் உலகின் 5 ஆவது வல்லரசான இந்தியாவுக்கு ஆபத்து என அச்சப்பட்டால் இந்தியாவின் வான்படையையே கலைத்து விடுங்கள் என்று ஜெனீவாவில் நடைபெற்ற "வெல்க தமிழ் - 2007" எழுச்சிப் பேரணி நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழீழத் தனியரசை அங்கீகரிக்கக் கோரி ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பாரிய எழுச்சிப் பேரணியில் பழ.நெடுமாறன் ஆற்றிய சிறப்புரை:

ஐ.நா. அவையின் முற்றத்தில் வெள்ளம் போல் திரண்டிருக்கும் தமிழர்களே!

உணர்ச்சிப் பெருக்கோடு உற்சாகத்தோடு ஐரோப்பா முழுவதிலிருந்து குழுமியிருக்கிற உங்களை சந்திக்கும் வாய்ப்பினால் இரண்டாண்டுகள் சிறையில் இருந்த சோர்வெல்லாம் போகிவிட்டது. இந்த உணர்ச்சிகரமான உணர்வுகளை மீண்டும் சந்திப்பதற்காக எத்தனை வருடம் சிறைக்குப் போனாலும் கவலையில்லை. ஐ.நா.வுக்கு வெளியே இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஐ.நா. மன்றத்தின் உள்ளே போய் அருமைத் தலைவர் பிரபாகரன் உட்காருவார்.

பாலஸ்தீனத்தின் தலைவர் யாசீர் அராபத்துக்காக தனியே இதே ஜெனீவாவில் ஐ.நா. மன்றம் அப்போது கூட்டப்பட்டது. அதேபோல் இன்று அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் ஒதுக்கி வைத்தாலும் இதே ஐ.நா. மன்றத்திலே அருமைத் தலைவர் தம்பி பிரபாகரனை இதே நாடுகள் கௌரவிக்கத்தான் போகிறது.

ஒவ்வொரு இனத்தினது வரலாற்றிலும் ஆபூர்வமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் தோன்றுகிறார்.

சோவியத்தின் மாவீரன் லெனின், செஞ்சீனத்தின் மாவோ, வியட்நாமின் ஹோசிமின் என வரிசையாகப் பார்த்தால் தமிழினத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய தன்னிகரற்ற தலைவர் தம்பி பிரபாகரன் அவர்கள்.

அவர் தமிழீழ மக்களுக்கு மட்டும் தலைவர் அல்ல. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தலைவர்.

பிராபாகரன் போன்ற வீரன் 2000 ஆம் ஆண்டுகால தமிழ்நாட்டில் பிறந்ததே இல்லை என்று எங்களுடைய தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் வாய்விட்டுச் சொன்னார்

இந்தத் தலைவனை விட்டால் வேறு நாதியே நமக்கு இல்லை. ஆமைகளாக, ஊமைகளாக அடங்கி ஒடுக்கிக் கிடந்த தமிழர்களுக்கு வீர உணர்வூட்டி இளைஞர்களைய்ம் யுவதிகளையும் ஒன்றுபடுத்தி இலட்சிய வேட்கையை ஊட்டி தமிழினத்துக்கு உலகில் தனி மரியாதையை தேடிக் கொடுத்திருக்கிறார் பிரபாகரன்.

நம்முடைய இலக்கியத்தில் கூட பெண்கள் ஆயுதம் தூக்கியதாக வரலாறு இல்லை.

அடக்கப்பட்ட இனத்தின் பெண்களை வீராங்கனைகளாக்கி சமநிலையிலே களத்தில் நிறுத்தியிருக்கிறார் பிரபாகரன்.

தமிழ்ச் சமுதாயம் ஆணாதிக்க சமூகமாக விளங்கி வந்திருக்கிறது. அடுப்பூதும் வேலை தவிர எதுவும் பெண்களுக்கு இல்லை என்று அடக்கி வைக்கப்பட நம் பெண்களை சகோதரிகளை வீராங்கணைகளாக்கியிருக்கிறார் பிரபாகரன். முன்னெடுக்கப்பட்டு எண்ணிப் பார்க்க வேண்டும்

வங்கக்கடலில் ஒரு காலத்தில் இராஜேந்திர சோழன் காலத்தில் புலிக்கொடி பொறித்த கப்பல்கள் சென்றன.

இன்று அதே வங்கக்கடலில் கடற்புலிகளின் ஆதிக்கம் செலுத்துகிற நிலை உள்ளது.

புலிகளிடம் வான்படை இருப்பது என்பது இந்தியாவுக்கு ஆபத்து என்று இந்தியாவில் ஒரு அதிகாரி கூறுகிறார்.

உலகில் 5 ஆவது வல்லரசாக இருக்கக்கூடிய ஒரு நாடு புலிகளின் வான்படையைக் கண்டு பயப்பட்டால் தயவு செய்து இந்திய வான்படையை மூடுங்கள். கலையுங்கள். பைத்தியக்காரத்தனமாகப் பேசி உங்கள் மரியாதையையும் கெடுத்து எங்கள் மரியாதையையும் கெடுக்காதீர்கள்.

விடுதலைக்குப் போராடிய தலைவர்களுக்குக் கிடைத்தது போல் அருமைத் தம்பி பிரபகரனுக்கு எந்த நாட்டினது ஆதரவும் கிடையாது. மாறாக அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் அள்ளி, அள்ளி கொடுக்கிறார்கள் சிங்களவர்களுக்கு.

விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக ஆயுதம் கொடுக்க விரும்பாமல் சிங்களவர்களுக்கு கொடுக்கும் சூழ்ச்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் உண்டு எனக்கு. ஏனெனில் சிங்களவர்களிடம் கொடுத்தால் பத்திரமாக அது நமக்கு வந்து சேரும் என கருதியிருக்கலாம்.

அள்ளி அள்ளி கொடுங்கள்! இன்னும் கொடுங்கள்- அவைகள் எங்களிடம் வந்து சேரும்!

பிரபாகரனிடத்தில் இருந்த இலட்சிய உறுதியால்தான் இந்தப் போராட்டம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

அந்த மாபெரும் தலைவனின் இந்த காலத்தில் அவர் காலத்திலே சுதந்திரத் தமிழீழம் பெற எல்லாவகையும் தியாகம் செய்ய உள்ள ஒவ்வொரு தமிழனுன் உறுதியேற்க வேண்டும் என்றார் நெடுமாறன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.