Saturday, May 26, 2007

சிறிலங்கா மீது ஜப்பான் அழுத்தங்களை போடவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்.!!

[சனிக்கிழமை, 26 மே 2007]


சிறிலங்காவிற்கு மிகவும் அதிகளவு நிதி உதவிகளை வழங்கிவரும் ஜப்பான் சிறிலங்கா மீது அதிக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனினும் ஜேர்மனி மற்றும் பிரித்தானிய ஆகிய அரசுகளின் தீர்மானங்களை பின்பற்றி சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை மட்டுப்படுத்தும் நோக்கம் ஜப்பானுக்கு இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் அதிகாரிகள் உடனான சந்திப்பின் பின்னர் இது தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பகத்தனை சேர்ந்த சோபி றிச்சார்ட்சன் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டு சிறிலங்காவில் மனித உரிமைகள் மோசமடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 100,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என நான் நினைக்கிறேன்.

சிறிலங்காவிற்கான உதவிகளை வழங்கும் கொடையாளிகளில் யப்பான் மிகவும் அதிகளவு நிதிகளை வழங்கும் நாடு. அனைத்துலகத்தினால் வழங்கப்படும் நிதிகளில் யப்பான் 63 வீதமான நிதியை 2003 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது. 4.5 பில்லியன் டொலர் உதவிகளை சிறிலங்காவிற்கு வழங்குவதற்கு என 2003 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை ஜப்பான் ஒழுங்கு செய்திருந்தது.

சிறிலங்கா தொடர்பில் ஜப்பான் மிக முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றது. அது முன்னணி கொடையாளி, அது கொடையாளிகளின் ஆலேசனைக்குழுவை ஒருங்கிணைக்கின்றது. நாம் ஜப்பானை என்ன கேட்கின்றோம் எனில் இந்த நிலையை சாதகமாக கொண்டு அரசை மட்டுமல்லாது ஏனைய தரப்பினரையும் பொதுமக்களையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்ச்சியாக உறுதியாக கேட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

எனினும் சிறிலங்காவிற்கான நிதியை நிறுத்துவது தொடர்பாக தம்மால் ஆராய முடியாது என ஜப்பான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

சிறிலங்காவிற்கான நிதியை மீள்பரிசீலனை செய்யும் திட்டம் ஜப்பானுக்கு இல்லை. சிறிலங்காவிற்கான ஜப்பானின் பிரதிநிதியான யசூசி அகாசி எதிர்வரும் ஜூன் மாத முற்பகுதியில் சிறிலங்காவிற்கு புதிய திட்டத்துடன் செல்ல உள்ளார் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தீர்மானத்தினால் மகிந்த அரசு நெருக்கடிகளை சந்தித்துள்ளதடன் தமது அரசு வெளிநாட்டு நிதி உதவிகளில் தங்கியிருக்கவில்லை எனவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.