Sunday, May 20, 2007

இஸ்ரேலிடம் இருந்து நவீன ராடார்களை கொள்வனவு செய்கின்றது இந்தியா.!!

[ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007] விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிடம் இருந்து இலகுரக வாயுக்களின் மூலம் வானில் பறக்கும் நவீன ஈஎல்/எம்-2083 ரக ராடார்களை (EL/M-2083 Aerostat radars)கொள்வனவு செய்வதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது என அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் பாதுகாப்பு நிறுவனம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த வகையான ராடார்கள் தாழ்வாக பறப்பில் ஈடுபடும் வானூர்திகள், உலங்குவானூர்திகள், ஆளில்லாத உளவு வானூர்திகள், ஏவுகணைகள் என்பவற்றை கண்டறியக் கூடியது. கடந்த மார்ச் மாதம் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகளினால் கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடார்களே பாவனையில் இருந்தது. அதன் செயற்திறன் தொடர்பாக அன்று கேள்வி எழுந்திருந்த போதும் தமது ராடார்கள் தரமானவை என்று தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈஎல்/எம்-2083 ரக ராடார்கள் (EL/M-2083) வான் பாதுகாப்புக்காக இலகுவாக நகர்த்தக் கூடியவை. அதாவது வளியை விட இலகுவான வாயுக்களின் மூலம் அவை வானத்தில் நிறுத்தி வைக்கப்பட கூடியவை. இது தவிர இதேவகையான ராடார்கள் வேறு ராடார்களுடன் இணைக்கப்பட்ட (Tethered Aerostat Radar System) வடிவங்களும் உண்டு. இவை முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறைகளை கொண்டிருப்பதுடன், இலக்கை நோக்கி வரும் வானூர்திகளை மிக அதிக தொலைவில் வைத்தே கண்டறியக்கூடியது. குறிப்பாக தாழ்வான உயரத்தில் பறக்கும் வானூர்திகளையும் கண்டறியக்கூடியது. ராடார்களினால் சேகரிக்கப்படும் தகவல்கள் மத்திய வான் பாதுகாப்பு கட்டளை மையத்திற்கும், கட்டுப்பாட்டு மையத்திற்கும் அனுப்பப்படும். அங்கு பெறப்படும் தகவல்கள் ஆராயப்படுவதுடன், பெரிதாக்கியும் தகவல்கள் சேகரிக்கப்படும். வானூர்திகளை ராடார்கள் கண்டறிந்ததும், தனது கட்டுப்பாட்டு மையத்தை குறித்த நேரத்திற்குள் உசார்படுத்திவிடும். இந்த ராடார்கள் ஈஎல்/எம்-2080 வகை ராடார்களை அடிப்படையாகக் கொண்டது. இவை தவிர பல்கொன் அவ்காஸ் (PHALCON AWACS) ரக ராடார்களை இந்தியா எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இஸ்ரேலிடம் இருந்து பெற உள்ளது. இந்த இரு வகை ராடார்களும் இலகுவான வாயுக்களின் மூலம் வானத்தில் பறக்க விடக்கூயவை. அதாவது 'வானத்தில் உள்ள கண்கள்' என்பது அதன் பொருள். தரையில் பொருத்தப்பட்டுள்ள ராடார்களை விட வானில் நிறுவப்படும் இந்த ராடார்கள் விரைவான வானூர்திகளை கண்டறியக்கூடியவை. மேலும் இந்திய வான்படையினர் இலகுவில் நகர்த்தக்கூடிய கிழ்மட்ட ராடார்கள் (low-level transportable radars), இலகுவில் நகர்த்தக்கூடிய இலகுரக கீழ்மட்ட ராடார்கள் (low-level light weight radars), மத்திய சேகரிப்பு ராடார்கள் (central acquisition radars), செயற்கையான சிறிய ரக ராடார்கள் (synthetic aperture radars) போன்றவற்றை அடுத்த 5 வருடங்களில் அதிகளவில் கொள்வனவு செய்யவும் முயன்று வருகின்றது. இவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிடம் இருந்தே கொள்வனவு செய்யப்பட உள்ளன. தற்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய படைத்துறை சாதனங்களின் விற்பனையாளராக இஸ்ரேலே உள்ளது. இந்தியாவுக்கான அதன் வருடாந்த விற்பனை ஒரு பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. ஈஎல்/எம்-2083 ராடார்கள், ஈஎல்-எம்-2080 வகை ராடார்களின் இலகுரக வடிவமாகும். கிறீன் பைன் ராடார்கள் (Green Pine radars) இஸ்ரேலின் அரோ-2 பிஎம்டி (Arrow-2 BMD) ரக எவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு திட்டத்தின் (ballistic missile defence) முக்கிய பகுதியாகும். இந்தியா 2001 - 2002 ஆம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரு கிறீன் பைன் ராடார்களை பயன்படுத்தி வருகின்றது. இதனிடையே இந்தியாவின் வான்படையினர் இலகுரக வாயுக்களின் மூலம் வானில் பறக்கும் ராடார்களை தமிழக கரையோரங்களில் ஏற்கனவே நிறுவியுள்ளதுடன், மேலதிகமாக 4 தொகுதிகளை இஸ்ரேலிடம் இருந்து கொள்வனவு செய்யவும் உள்ளது. இஸ்ரேலிடம் இருந்து 2004 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட இரு ஈஎல்/எம்-2083 ராடார்களில் ஒன்று குச்சுப் பகுதியிலும் மற்றையது பஞ்சாப் பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்த ராடார்கள் முன்னெச்சரிக்கை கருவிகளை கொண்டிருப்பதுடன், 500 கி.மீ தூரவீச்சும் உடையது. இது அதிக தொலைவில் வைத்து வானூர்திகளை கண்டறிவதுடன், தாழ்வாக பறக்கும் வானூர்திகளையும் இலகுவாக கண்டறியக்கூடியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.