Wednesday, May 30, 2007

பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்நோக்கும் யாழ். படையினர்.!!

[புதன்கிழமை, 30 மே 2007] தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் அற்றதனால் யாழ். குடாநாட்டுக்கான படையினரின் போக்குவரத்துக்கள் முடங்கிப்போய் உள்ளன. இதனால் விடுமுறையில் செல்லும் படையினரும், காவல்துறையினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வியாழக்கிழமை ஏறத்தாழ 1,600 படையினர் பலாலி வான்படைத் தளத்தில் காத்திருந்ததாகவும், அவர்களில் பலர் பல நாட்களாக அங்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிறிலங்கா வான்படையினர் கடந்த வியாழக்கிழமை பலாலிக்கு இரு வானூர்தி சேவைகளையே நடத்தியிருந்தனர். ஆனால் மறுநாள் எந்த வானூர்தி சேவையும் நடைபெறவில்லை. வான்படையினரிடம் தற்போது உக்ரேய்ன் தயாரிப்பான ஒரு அன்ரனோவ்-32 ரக வானூர்தியே பாவனையில் உள்ளது. ஏனையவை பராமரிப்பு வேலைகளுக்காக தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் வான்படையினரின் அவ்ரோ-748 ரக வானூர்திகள் வீழ்ந்து நொருங்கிய பின்னர் வான்படையினர் அன்ரனோவ்-32 வானூர்திகளை கொள்வனவு செய்திருந்தனர். அவையே தற்போது படையினரின் போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. அரசிடம் போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் அற்ற நிலைமையே படையினர் தப்பி ஓடுவதற்கான பிரதான காரணம் என்று தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், யாழ். குடாநாட்டிற்கு செல்வதற்கும் அங்கிருந்து வெளியெறுவதற்கும் உள்ள போக்குவரத்து வசதிகள் மிகவும் மோசமானவை என்றும் தெரிவித்தார். இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் 1990 களில் சிறிலங்காப் படையினர் ஏ-9 போக்குவரத்து நெடுஞ்சாலையை இழந்துள்ளனர். வான்படையினர் இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையிலான வானூர்தி சேவையை மேற்கொண்டு வருகின்ற போதிலும், கடற்படையினர் காங்கேசன்துறைக்கும் திருகோணமலைக்கும் இடையிலான கடல் விநியோகங்களை நடத்தி வருகின்றனர். இதுவே யாழில் உள்ள படையினருக்கான உயிர்நாடி என வர்ணிக்கப்படுகின்றது. படையினர் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள போது அரசியல்வாதிகள் ஆடம்பர சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: திருமணமான படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கான விடுமுறைகள் ஒரு மாதத்திற்குப் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் வார விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பெருமளவான படையினருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் விடுமுறைகள் வழங்கப்படுவதில்லை. பெருமளவிலான படையினருக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடைவையே விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. எனினும் அவர்கள் யாழ். குடாவில் இருந்து தெற்கு செல்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பலாலி செல்வதற்காக இரத்மலானை இடைத்தங்கல் தளத்தில் படையினர் பல நாட்கள் காத்து கிடக்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் கடல் வழி பயணத்தை மேற்கொள்வதற்காக இரத்மலானையில் இருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மேலும் அங்கு அவர்கள் கப்பலில் ஏறுவதற்காக பலநாள் காத்து கிடக்கின்றனர். படையினரிடம் உள்ள ஜெற்லைனர் கடற்கலம் 3,200 பேரை ஏற்றிச் செல்லக்கூடியது. எனினும் படையினரின் கடல்வழிப் பயணமே விடுதலைப் புலிகளின் முதன்மையான இலக்கு. கடந்த ஆண்டு 700 படையினர் பயணித்த கப்பலை தாக்க அவர்கள் முயற்சித்திருந்தனர். 1997 இல் ஏ-9 நெடுஞ்சாலையை கைப்பற்ற அரசு எடுத்த முயற்சி தோல்வி கண்டுள்ளது. வான்படையினர் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் பயணங்களை மேற்கொள்வதனால் படையினர் வானூர்தி பயணத்தில் மேலும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். விடுமுறையில் செல்லும் படையினர் திரும்புவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் எடுக்கின்றது. இடைத்தங்கல் முகாம்களில் உள்ள படையினர் தமது செலவுகளுக்காக கடிகாரங்கள், தங்கச்சங்கிலிகள், கைச்சங்கிலிகள் போன்றவற்றை அடகு வைத்து வருவதாகவும், அதனை அடகுபிடிக்க ஒரு கூட்டம் இடைத்தங்கல் முகாம்களுக்கு அருகில் நடமாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.