Thursday, February 01, 2007

யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சுட்டுக்கொலை.

[Thursday February 01 2007 07]

யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணநாதன் இன்று அதிகாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


அரியாலை புன்னம்குளம் சந்திப் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருந்த போதே இனந்தெரியாத நபர்கள் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்கான கணநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீண்டகாலமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிவந்த இவர் கடந்த வருடம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற்படும் தமிழ் கட்சியொன்றினால் நடத்தப்படும் வானொலிச்சேவையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கணநாதனின் செயற்பாடுகளைக் கண்டித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கணநாதனின் மகள் கடந்த 95ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தரப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அரியாலை புன்னம்குளம் பகுதியில் இராணுவத்தினரின் டரக் வாகனம் மோதி உயிரிழந்திருந்தார்.

நன்றி: தமிழ் வின்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.