Thursday, January 18, 2007

(சிறப்பு அரசியல் பார்வை)

கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகங்களும் அரசியல் இராணுவ யதார்த்த நிலைகளும்(சிறப்பு அரசியல் பார்வை) எழுதியவர் நமது செய்தியாளர் Thursday, 18 January 2007 இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய கையோடு கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனியாகவும் திருகோணமலை மாவட்டத்தை தனியாகவும் பிரித்த போது கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பலைகள் எழாதவாறு மரண அச்சுறுத்தல்களுக்குள் தள்ளி மௌனிகளாக்கி விட்டு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் போரை ஆரம்பித்திருக்கிறது. வாகரையை நோக்கிய இராணுவ நடவடிக்கை, படைகள் முன்னேறுகின்றன, கஞ்சிக்குடிச்சாற்றில் பல முகாம்கள் கைப்பற்றப்பட்டது என ஸ்ரீலங்கா அரசாங்கம் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் கிழக்கில் என்ன நடக்கிறது அங்கிருந்து கிடைக்கும் அரசியல் இராணுவ செய்திகள் கவலை தருகின்றனவே என சில நண்பர்கள் என்னை கேட்டனர். இந்தக் கொந்தளிப்பான சூழலில் கிழக்கின் இன்றைய இராணுவ அரசியல் நிலவரங்களை அப்பகுதிகளை நேரடியாக அவதானித்தவன் அந்த மக்களோடு வாழ்ந்தவன் என்ற வகையில் யதார்த்தமாகச் சொல்ல விளைகிறேன். கிழக்கில் விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் பிரதேசங்களை முழுமையாக கைப்பற்றி அரசியல் இராணுவ ரீதியில் கிழக்கை தம்வசம் வைத்திருப்பதற்காக ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் இராணுவ அரசியல் நடவடிக்கைகள் இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் பற்றி பார்ப்போம். அரசியல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்லப்போவதாக கருணா அறிவித்த போதே தன்னை கிழக்கு மக்களிடம் தக்கவைத்துக் கொள்வதற்கு பாவித்த ஆயுதம் வடக்கிலிருந்து கிழக்கு பிரிய வேண்டும் என்பதாகும். மட்டக்களப்பு பிரதேச மக்களிடம் மிக இலகுவாக தூண்டிவிடக் கூடியதாக யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிரான உணர்வுநிலை காணப்படுகிறது. ஆங்கிலேய மிசனறிமார்களால் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்ட முதலியார்கள் தொடக்கம் அரச உத்தியோக நிமித்தம் இங்கு வந்தவர்கள் மட்டக்களப்பு மக்களிடம் செலுத்திய ஆதிக்கம் காரணமாக இயல்பாகவே பரம்பரை பரம்பரையாக மட்டக்களப்பு மக்களுக்கு யாழ்ப்பாண மக்கள் மீது ஒருவகை எதிர்ப்புணர்வு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இதை மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் மிக இலகுவாக பயன்படுத்திக்கொண்டனர். அரசியல் பதவிகளுக்கு வருவதற்காக மட்டக்களப்பு மக்களிடம் யாழ்ப்பாண எதிர்ப்புணர்வை ஊட்ட வேண்டிய தேவை சில அரசியல்வாதிகளுக்கு இருந்தது. தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு எதிராக கிழக்கில் போட்டியிடும் ஐக்கிய தேசியக்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தவர்களின் கட்சி அவாகளுக்கு வாக்களிக்க கூடாது என மட்டக்களப்பு மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டிய தேவை சிலருக்கு இருந்தது. அதை மிக இலகுவாக அவர்கள் செய்து வந்தனர். நல்லையா தேவநாயகம் ராசன் செல்வநாயகம் போன்ற அரசியல்வாதிகள் யாழ்ப்பாண எதிர்ப்புணர்வை தட்டிவிட்டே மட்டக்களப்பு மக்களிடம் வாக்குப் பெற்றனர். ஆனால் இந்த நல்லையா தேவநாயகம் ராசன் செல்வநாயகம் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தமது பிழைப்பு வாதத்திற்காகவே யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிரான கோசத்தை எழுப்பி தமது வாக்குகளைப் பெறுகிறார்கள் என்பது பெரும்பாலான மட்டக்களப்பு மக்களுக்கு தெரியாது. நல்லையா யாழ். வலிகாமத்தைச் சேர்ந்தவர். தேவநாயகம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த முதலியார் பரம்பரையைச் சேர்ந்தவர். ராசன் செல்வநாயகம் தொண்டமானாற்றைச் சேர்ந்தவர். இவர்கள் தான் மட்டக்களப்பு மக்களிடம் மிக மோசமான பிரதேசவாதத்தை ஊட்டியவர்கள். யாழ்ப்பாணத்தவனை வெளியேற்ற வேண்டும் என மட்டக்களப்பு மக்களைத் தூண்டியவர்கள். இதன் மூலம் நல்லையா தேவநாயகம் ராசன் செல்வநாயகம் போன்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றார்கள். 1977ல் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்துத் தொகுதிகளையும் தமிழர் விடுதலைக்கூட்டணி கைப்பற்றியது கல்குடாத்தொகுதியைத்தவிர. தமிழுணர்வு என்றுமில்லாதவாறு வீசிய 1977 பொதுத்தேர்தலில் கல்குடா தொகுதியில் யாழ்ப்பாண எதிர்ப்புணர்வு வாதமுமே வெற்றி பெற்றது. கல்குடாதொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட சம்பந்தமூர்த்தி தோல்வியடைய பிரதேசவாதத்தை ஆயுதமாக கொண்டு பிரசாரம் செய்த தேவநாயகம் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கையோடு அவர் வசித்து வந்த செங்கலடி பகுதியில் இருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் அனைவரின் கடைகளையும் தனது குண்டர்களைக் கொண்டு தீக்கிரையாக்கி சூறையாடி அங்கிருந்து வெளியேற்றினார். தமது சுயபிழைப்புக்காக மட்டக்களப்பு மக்களிடம் யாழ்ப்பாணத்தவர்களுக்கு எதிரான உணர்வலைகளை இவர்கள் தூண்டி வெற்றி பெற்றார்கள். அதுதான் இன்றும் தொடர்கிறது. கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த உடன் முதல் செய்த காரியம் யாழ்ப்பாண வர்த்தகர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றியதுதான். பரிதாபம் என்னவென்றால் வெளியேற்றப்பட்ட பெரும்பாலான வர்த்தகர்களுக்கு யாழ்ப்பாணம் என்ன நிறம் என்றே தெரியாது. வெளியேற்றப்பட்ட பெரும்பாலான வர்த்தகர்கள் கருணாவுக்கு தனிப்பட்ட ரீதியில் லட்சக்கணக்கான பணஉதவியும் வேறு உதவிகளும் செய்தவர்கள். வடகிழக்கு பிரிக்கமுடியாத தமிழர் தாயகம் என்ற எண்ணக்கருவையே கிழக்கு மாகாண தமிழ் மக்களிடமிருந்து அழித்து விட வேண்டும் என்பதற்காக அண்மைக் காலத்தில் திட்டமிட்ட ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் தமது அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடியாத அச்சுறுத்தல் நிலைகளை உருவாக்கியமை, கிழக்கில் உறுதியான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல்வாதிகளான ஜோசப் பரராசசிங்கம், அரியநாயகம் சந்திரநேரு, விக்னேஸ்வரன், ஊடகவியலாளர்களான சிவராம், நடேசன் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டமை வடகிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை முன்னெடுக்க கூடிய அதற்கான செயல்வடிவ போராட்டங்களை முன்னெடுக்க கூடிய அமைப்புக்கள் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் பல்கலைக்கழகம் என்பனவற்றை முடங்க செய்தமை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான தேவையை சொல்லிவந்த ஊடகவியலாளர்களான சண்.தவராசா நிராஜ் டேவிட், துரைரத்தினம் வேதநாயகம் போன்றவர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றியமை (இதை சாட்டாக வைத்து வேறும் சிலர் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருப்பதாக அறிகிறேன்) தமிழ் தேசிய தினசரிகளான தினக்குரல் சுடர்ஒளி, வீரகேசரி ஆகியவற்றை கிழக்கில் தடை செய்தமை போன்ற நடவடிக்கைகளால் கிழக்கில் மிகப்பயங்கரமான இருள் சூழ்ந்த நிலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் உருவாக்கியது. இந்த செயற்பாடுகளை கருணாகுழு செய்வதாக கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கமே மிக நேர்த்தியாக செய்தது. கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அரசாங்கம் வழங்குகின்ற செய்திகளை மட்டும் கேட்பதற்கே காதுகளை பயன்படுத்த வேண்டும். உண்பதற்கு மட்டுமே வாயை பயன்படுத்த முடியும். இதை மீறுவோர் பகிரங்கமாக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இவை அனைத்தையும் செய்வது ஸ்ரீலங்கா அரசாங்கம் தான். மிக இலகுவாக கருணாகுழு என்ற பெயரில் இயங்கும் இராணுவ துணைப்படை ஊடாக கிழக்கில் தனக்கு சாதகமான அரசியல்சூழலை ஸ்ரீலங்கா அரசாங்கம் உருவாக்கி வருகிறது. மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்தைக் கொண்டவர்களோ இணைந்த வடகிழக்கு தமிழர் தாயகம் என்ற எண்ணக்கருவை கொண்டவர்களோ உயிர்வாழ முடியாது. முக்கியமாக மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களோ அல்லது அவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களோ அங்கு வாழ முடியாது. மட்டக்களப்பில் இருந்த யாழ்.வர்த்தகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். யாழ். வர்த்தகர்கள் விட்டு சென்ற இடத்தை மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் நிரப்பவில்லை. அந்த இடத்தை முஸ்லீம்கள் தான் நிரப்பியிருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்லப் போனால் யாழ். வர்த்தகர்கள் விட்டு சென்ற வர்த்தக இடைவெளியை மட்டக்களப்பு தமிழர்கள் நிரப்பியிருந்தால் ஓரளவு ஆறுதல் அடையலாம். ஆனால் யாழ்ப்பாணத்தவர்களை துரத்தி விட்டு அந்த இடத்தில் முஸ்லீம்களைத்தானே அமர்த்தியிருக்கிறார்கள். இது எவ்வளவு ஆபத்து என்பது பலருக்கு புரிவதில்லை. நாளை என்பது நமக்கு உண்டா என்ற நிட்சயமில்லாத நிலையில் மரண அபாயத்திற்குள் தான் கிழக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் எதுவும் புரியாதவர்களாக சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கில் அரசியல் வேலை செய்ய வேண்டும் என சிவராம் எழுதினார் என ஒருவர் எழுதிக் கொண்டிருக்கிறார். கிழக்கில் தமிழ் மக்களிடம் அரசியல் பிரசாரம் செய்ய வேண்டும் என சிவராம் கூறிய காலம் வேறு இன்று இங்குள்ள சூழல்வேறு. அவைகளை புரியாது கிழக்கின் யதார்த்த நிலைகளை புரியாது கிழக்கின் வெளிப்படையான உண்மைகள் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கில் பாராளுமன்ற தேர்தல் ஒன்றையோ அல்லது மாகாணசபைக்கான தேர்தல் ஒன்றையோ நடத்தினால் தமிழீழ கொள்கையை ஆதரிக்கும் அல்லது வடகிழக்கு இணைப்பை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு போட்டியிடக் கூட முடியாத நிலைதான் உருவாகியிருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களில் இங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது தமிழ் மக்களுக்கு மிக மோசமான அரசியல் சூழலை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் சிலவற்றைக் கைப்பற்றி விட்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலையும் உள்ளுராட்சித் தேர்தல் ஒன்றையும் நடத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அவ்வாறு கிழக்கில் மாகாணசபைக்கு தேர்தல் ஒன்று நடந்தால் அது நிட்சயம் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற சிந்தனை கொண்ட தமிழர்களுக்கு சாதகமாக இருக்க போவதில்லை. கிழக்கு மாகாணசபை அரசியல் மூலம் கருணாகுழுவை ஒரு அரசியல் கட்சியாக வளர்ப்பதற்கும் அதன் மூலம் தமக்கு சாதகமான நிலைகளை தோற்றுவிக்க முடியும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் கருதுகிறது. (பொதுத்தேர்தலை இப்போதைக்கு நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை. தமக்கு தேவையான பலத்தை பாராளுமன்றத்தில் கொண்டிருப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி, முஸ்லீம் காங்கிரஷ், மற்றும் மலையக கட்சிகளிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டது) இந்நிலையிலேயே கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. இராணுவ நடவடிக்கை 2002ம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் ஏதாவது ஒருதரப்பு போர் நிறுத்தத்திலிருந்து விலகி போரை ஆரம்பிப்பதாக இருந்தால் 14நாட்களுக்கு முதல் எழுத்து மூலம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டிருக்கும் நோர்வே நாட்டிற்கும் அறிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த தரப்பும் போரை ஆரம்பிக்க போவதாக கண்காணிப்புக் குழுவுக்கோ நோர்வே நாட்டிற்கோ அறிவிக்கவில்லை. ஆனால் கிழக்கில் போர் ஆரம்பமாகிவிட்டது. தமது படைகள் விடுதலைப்புலிகளின் முகாம்களை தாக்கி அழித்து முன்னேறுகின்றன. முகாம்களை கைப்பற்றியிருக்கிறோம் என அரசாங்கம் உத்தியோகர்வமாக அறிவித்திருக்கிறது. விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து தப்பி சென்ற கருணாகுழுவை கொழும்பிலிருந்து கிழக்கிற்கு கொண்டு வந்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிய போதே அரசாங்கம் போரை ஆரம்பித்து விட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் யூலை 27ம் திகதி மாவிலாறு நோக்கி இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து மூதூர் கிழக்கு சம்பூர் மாவிலாறு பகுதிகளை ஸ்ரீலங்கா படைகள் ஆக்கிரமித்தன. இப்பிரதேசங்களை ஆக்கிரமித்த போது அதை போர் நிறுத்த மீறல் என்றோ அல்லது அந்த போர் நடவடிக்கைகளை நிறுத்தும் படியோ போர் நிறுத்த உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்டவாறு பழைய இடங்களுக்கு திரும்புமாறோ மத்தியஸ்தம் வகிக்கும் நோர்வே நாடோ அல்லது சர்வதேசத்தின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களோ கூறவில்லை. அவை காட்டிய மௌனம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. விடுதலைப்புலிகள் சம்பூர் மூதூர் கிழக்கு மாவிலாறு பகுதிகளிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்தில் வடக்கு எல்லையான வாகரைப்பகுதியில் நிலை கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் நிரந்தர நிலத்தொடர்பு அற்ற இரு பிரதேசங்களாக உள்ளன. ஒன்று மட்டக்களப்பு வடக்கே உள்ள மாங்கேணி தொடக்கம் வெருகல்வரையான பிரதேசமும் வெருகலிருந்து மூதூர் கிழக்கு வரையான திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பிரதேசமும். அடுத்தது மட்டக்களப்பு நகருக்கு மேற்கே உள்ள படுவான்கரை என்று சொல்லப்படும் பரந்த பிரதேசமும் அதன் நிலத்தொடர்புகளை கொண்ட கஞ்சிக்குடிச்சாறு வரையான பிரதேசமும் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு பரந்த நிலப்பிரதேசங்களையும் நோக்கி ஸ்ரீலங்கா படைகள் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றன. கடந்த 4ம் திகதி அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் விசேட அதிரடிப்படையினர் மூன்று முனைகளிலிருந்து கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தை நோக்கி பாரிய படைநடவடிக்கைகளை ஆரம்பித்தனர். வக்கியல திருக்கோவில், அம்பாறை பகுதிகளிலிருந்து மிக அடர்ந்த காடும் வயலும் சார்ந்த கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தை நோக்கி படைநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்திய இராணுவ காலத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஏனைய இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த போதிலும் கஞ்சிக்குடிச்சாறு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த பகுதியிலிருந்த விடுதலைப்புலிகளின் 12முகாம்களை தாங்கள் கைப்பற்றியிருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஏற்கனவே மூன்று தடவைகள் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தை நோக்கி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது பலத்த இழப்புகளுடன் பின்வாங்கியிருந்த விசேட அதிரடிப்படையினர் 4ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையான 7நாட்கள் நடத்திய கடும்சமரின் பின்னர் கஞ்சிக்குடிச்சாற்றை கைப்பற்றியிருக்கிறது. இதேவேளை 15ம் திகதி அதிகாலை 5.30மணிக்கு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்புறங்களில் மும்முனைகளிலிருந்து பாரிய படை நகர்வுகளை ஆரம்பித்தனர். மாங்கேணி தொடக்கம் ஈச்சலம்பற்றை வரையான வாகரையை கைப்பற்றும் நோக்கிலேயே இந்த மும்முனைப் படை நகர்வுகளை ஸ்ரீலங்கா படையினர் ஆரம்பித்தனர். திருகோணமலையில் கல்லாறு மகிந்தபுர தோப்பூர் பட்டியடி ஆகிய நான்கு முகாம்களிலிருந்து ஈச்சிலம்பற்றை மற்றும் உப்புறாலை நோக்கியும் ஸ்ரீலங்கா படையினர் பாரிய நகர்வை மேற்கொண்ட அதேவேளை மட்டக்களப்பில் மாங்கேணி மற்றும் கஜுவத்தை முகாம்களிலிருந்து பனிச்சங்கேணியை நோக்கிய பாரிய படைநகர்வு மேற்;கொள்ளப்பட்டது. வாகரையைக் கைப்பற்றுவதற்காக மாங்கேணி முகாமிலிருந்து கடந்த ஒக்டோபர்; 7ம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் மேஜர் தர அதிகாரி உட்பட 30பேர் கொல்லப்பட்டனர். சுமார் 12இராணுவத்தினரின் உடல்களை விடுதலைப்புலிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்திருந்தனர். இராணுவ சிப்பாய் ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து வாகரையை கைப்பற்றுவதற்காக இராணுவம் பாரிய அளவில் திட்டமிட்டது. கடந்த 3ம் திகதி இராணுவத்தளபதி விமானப்படைத்தளபதி ஆகியோர் 233வது படைத்தளத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள படைமுகாம் அதிகாரிகள் தளபதிகளுடன் வியூகங்களை வகுத்தனர். மிகவிரைவில் படைநகர்வுகளை மேற்கொள்ளப் போவதாக அரசும் படைத்தரப்பும் கூறிவந்த வந்த நிலையிலேயே இந்தப் படை நகர்வுகள் ஆரம்பமாயின. மாங்கேணி கஜுவத்தை முகாம்களிலிருந்து தாக்குதல்களை மேற்கொண்டு படைநகர்வை மேற்கொண்ட இராணுவத்துடன் கருணா குழுவின் இராணுவ துணைப்படையைச் சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர். கருணா குழுவைச் சேர்ந்த மார்க்கன் உட்பட வாகரை பிரதேசத்தை பரிட்சயமாக கொண்ட சிலரும் இருந்ததாகக் கூறப்படுகிறது (மார்க்கன் முன்னர் விடுதலைப்புலிகளின் வாகரைப்பொறுப்பாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்) குறுகலான நிலப்பரப்பை கொண்ட வாகரையை நோக்கி அதன் வடக்கே திருகோணமலையிலிருந்தும் தெற்கே மட்டக்களப்பிலிருந்துமே இந்தப் பாரிய மும்முனைப் படைநகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. விமானப்படையினரின் சாரமாரியான குண்டு வீச்சு, மாங்கேணி கரடிக்குளம் தீவுச்சேனை,கட்டுமுறிவுச்சந்� ��ி ஆகிய முகாம்களிலிருந்து எறிகணைத் தாக்குதல்கள்சகிதம் ஏ15 வீதி ஊடாக பனிச்சங்கேணியை நோக்கி படைநகர்வை மேற்கொண்ட அதேசமயம் தரவைப்பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு வழங்கல்களை தடுப்பதற்காக கரடிக்குளம் இராணுவ முகாம்பகுதி தீவுச்சேனை ஏ 11 வீதி ஆகிய இடங்களில் மேலதிக படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாங்கேணியிலிருந்து பனிச்சங்கேணி வரையான ஏ15 பிரதான வீதியை ராணுவத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர். பனிச்சங்கேணி பாலம் இக்கட்டுரை எழுதப்படும்வரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. மறுமுனையில் திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரத்தை இலக்குவைத்து உப்புறால் வழியாகவும் ஈச்சிலம்பற்று பகுதிக்கு ஊடாகவும் ஒரு நகர்வை படையினர் மேற்கொண்டனர். இதன்போது ஈச்சிலம்பற்று உப்புறால் ஆகிய பகுதிகளை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கிறார்கள் இராணுவத்தினர் எதிர்பார்த்ததை விட ஏ15 வீதியில் பனிச்சங்கேணி பகுதியில் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் மிகக் கடுமையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அரசதரப்பு தமது இழப்புக்களைக் குறைத்து எதிர்த்தரப்பு இழப்பை மிகைப்படுத்தி வெளியிடும் போக்கே காணப்படுகிறது. தமது தரப்பில் 4பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்திருக்கிறார்கள் வேடிக்கை என்ன வென்றால் பொலனறுவை வைத்தியசாலையில் மட்டும் 17 இராணுவத்தினரின் சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன. 80க்கு மேற்பட்ட இராணவத்தினர் கண்டி கொழும்பு பொலனறுவை திருகோணமலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருகின்றனர். அப்படியானால் மாங்கேணி தொடக்கம் ஈச்சிலம்பற்று வரையான பிரதேசத்தை விடுதலைப்புலிகள் இழந்து விடுவார்களா என நீங்கள் கேட்கலாம். இராணுவத்தினர் இப்பிரதேசங்களை கைப்பற்றலாம். ஆனால் அந்த பிரதேசங்களை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதென்பதும் அதிரடித் தாக்குதல்களுக்கு முகம் கொடுப்பதென்பதும் பெரும்சவாலாக இராணுவத்திற்கு இருக்கும் என்பதையும் அவர்கள் மறந்து விட முடியாது. 1990ம் ஆண்டுகளின் பின்னர் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பனிச்சங்கேணி வாகரை கதிரவெளி பிரதேசங்களில் நிலை கொண்டிருந்தனர். அக்காலப்பகுதியில் அம்முகாம்களையும் தமது பாதுகாப்பு நிலைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக இராணுவம் கொடுத்த விலைகள் அதிகம். இறுதியாக 1995ல் வாகரை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி முகாம் வாசலில் வைத்தே தற்கொடைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதையும் இராணுவத்தினர் மறந்திருக்க மாட்டார்கள். 1996ல் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்காக 44 இராணுவ முகாம்களை கிழக்கில் மூடவேண்டி ஏற்பட்டது. இதன் போதே வாகரை பனிச்சங்கேணி, கதிரவெளி முகாம்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினர். 1996ம் ஆண்டிலிருந்து கடந்த 10வருடங்களாக வாகரை பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. வாகரையிலிருந்து வெருகல் வரையான பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கடற்பிரதேசம் இல்லாமல் போகும் எனவும் வடக்கிலிருந்து கிழக்கிற்கான போக்குவரத்துக்;களும் வழங்கல்களும் தடைப்பட்டு போகும் என்றும் இராணுவத்தினர் எண்ணுகின்றனர். இதன் மூலம் கிழக்கில் விடுதலைப்புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு அவர்களை குடும்பிமலை போன்ற மலைசார்ந்த காட்டு பிரதேசங்களுக்குள் முடக்கி விடலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால் நிலைமை அவ்வாறு அமையும் என நான் நினைக்கவில்லை. வடக்கிலிருந்து கிழக்கிற்கான கடல்வழியான வழங்கல்களும் போக்குவரத்துக்களும் பனிச்சங்கேணி தொடக்கம் வெருகல் வரையான கடற்பிரதேசத்தை இழப்பதால் சில தடங்கல்கள் ஏற்படலாமே ஒழிய முற்றாக முடங்கிவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஜெயசிக்குறு ஆனையிறவு தாக்குதல்களின் பின்னர் சுமார் 2000ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் வன்னியிலிருந்து தரைவழியாகவே வாகரைக்கு வந்தார்கள். அவர்கள் கடல்வழி பாதையை பயன்படுத்தவில்லையே. (கருணா மற்றும் கரிகாலன் ரமேஷ் உட்பட பல தளபதிகள் இதில் அடங்கியிருந்தார்கள். அவர்களின் அந்த தரைவழிப்பயணம் ஸ்ரீலங்கா படையினருக்கு சவாலாக இருந்தது) மட்டக்களப்பின் வடக்கு எல்லையான வாகரை வெருகல் பிரதேசங்களையும் திருகோணமலை மாவட்டத்தின் தென் எல்லைகளான மூதூர் கிழக்கு ஈச்சிலம்பற்று ஆகிய பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் இராணுவ ரீதியான வெற்றிகளை விட அரசியல்ரீதியான வெற்றிகளும் அனுகூலங்களும் தமக்கு அதிகமாக இருக்கும் என ஸ்ரீலங்கா தரப்பு நம்புகிறது. அரசாங்கம் வாகரையை கைப்பற்றலாம் கைப்பற்றிய இடங்களில் இராணுவமும் கருணாகுழுவும் தமது பலத்தை அதிகரிக்கலாம். ஆனால் அதன் மூலம் கிழக்கில் அரசியல் இராணுவ ரீதியாக தாங்கள் பலமடைந்து விட்டோம் என ஸ்ரீலங்கா அரசும் அவர்களுடன் இணைந்திருக்கும் கருணாகுழு போன்ற ஒட்டுக்குழுக்களும் நினைப்பது மகா தவறு. 2004மார்ச் மாதத்தில் மட்டக்களப்பு அம்பாறை தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் 6000பேர் கொண்ட தேர்ச்சிபெற்ற படையணிகள் தன்னிடம் இருப்பதாகவும் வன்னியை விட படைபலத்தில் மிஞ்சியிருக்கிறேன் என வீறாப்புப் பேசிய கருணா வாகரையில் தாக்குதல் ஆரம்பித்து நான்காவது நாளிலேயே துண்டைக்காணோம் துணியைக்காணோம் என ஸ்ரீலங்கா இராணுவத்தின் உதவியுடன் கொழும்புக்கு தப்பி ஓடியதை நாங்கள் என்ன மறந்தாவிட்டோம் ? Tamilnews24.com