Sunday, January 28, 2007

உலக ஒழுங்குக்கு அமைய புலிகளின் தலைவர் விரைவில் முடிவுகளை எடுப்பார்.!!

Sunday, 28 January 2007

மட்டு.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தெரிவிப்பு
போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வந்த எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பாரென விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பெறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார்.


கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்;

"மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலம் போன்று மட்டக்களப்பிலும் பெரும் அவலத்தை உருவாக்க அரசு முயல்கிறது.

கடந்த சில தினங்களாகக் குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

தற்போது சில தினங்களாக இங்கு அடைமழை பெய்கிறது. இதற்கு மத்தியிலும் மக்கள் இடம்பெயர்ந்து பெரும் அவலங்களை சந்திக்கின்றனர்.

பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிலுமிருந்து இடம்பெயர்ந்த மக்களே தற்போதும் இடம்பெயர்கின்றனர். மூதூர் கிழக்கு மற்றும் வாகரையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் உயிரிழந்ததால் மக்கள் தங்கள் விருப்பப்படி இடம்பெயர்கிறார்கள்.

மூதூர்கிழக்கு, வாகரை போன்று அரசு மட்டக்களப்பையும் கருதுமானால் அது அவர்களுக்கு மிகப்பெரும் அழிவையே ஏற்படுத்தும்.

கடந்த 25 வருட கால விடுதலைப் போராட்டத்தில் எமது அமைப்பு ஐந்திற்கும் மேற்பட்ட ஜனாதிபதிகளை சந்தித்துள்ளது. தற்போது மகிந்த ராஜபக்ஷவும் தன் பங்கிற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் தான் மிகப்பெரும் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும் எமது தலைவர் உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வருகின்றார்.

போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பார்"என்றும் தெரிவித்தார்.

0 kommentarer: