Wednesday, January 17, 2007

விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்:...

விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு [புதன்கிழமை, 17 சனவரி 2007] கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பெரும் சம்பவங்கள் நடைபெறும் போது கிளிநொச்சி பதற்றமாக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் பெரும் சமர்கள் மூளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இது தென்னிலங்கையில் ஏற்படும் முன்னேற்றகரமான சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என அது மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தகவல் தருகையில், விடுதலைப் புலிகளின் போர் ஆயத்த நிலை தொடர்பாக எமக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. எமது குழுவினரால் மேற்கூறப்பட்ட தகவல்களை மட்டும் தான் சேகரிக்க முடிந்தது. இந்த பலப்படுத்தல் நடவடிக்கை தென்னிலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது. படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தால் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் உட்பட ஏனைய வன்முறைகளும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பாரிய தாக்குதலுக்கான ஆயத்த வேலைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக எமது புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலதிக போராளிகளும் அங்கு குவிக்கப்படுகின்றார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜனவரி 1 ஆம் நாள் ஆரம்பமாகிய கலந்துரையாடல் பட்டறையில் கலந்து கொள்வதற்காக பெரும் தொகையான கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கொழும்பில் உள்ளனர். எனினும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து அவர்கள் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு செல்கின்றனர். ஆனால் எப்போது நிரந்தரமாக அங்கு பணியாற்ற செல்வார்கள் என்பது தெரியாது என கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.