இயற்கையின் சீற்றத்தையும் விடவும் இனவாத சீற்றம் கொடுமையானது: சு.ப.தமிழ்ச்செல்வன்
இயற்கையின் சீற்றத்திலும் இனவாதச் சீற்றத்திலும் இருந்து எமது மக்களை பாதுகாப்பதென்பது எமது தேசியத்தின் தலையாய கடமையாகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆழிப்பேரலை இடம்பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (26.12.06) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பேரவலத்தில் தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்தும் சொத்துக்களையும் இழந்திருந்தனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மிகப் பெரும் இயற்கைப் பேரவலம் ஒன்றை எமது மக்கள் சந்தித்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்தப் பேரவலத்தில் தங்கள் உயிர்களை துறந்த மக்களுக்கு எமது ஆழ்மன அதிர்வுகளைக் காணிக்கையாக்குகின்றோம்.
மேலும் அந்த கோர அலைகளின் ஆர்ப்பரிப்பில் தமது உறவுகளின் பாசப்பிணைப்புக்களைத் தொலைத்து வருந்தும் உள்ளங்களுடன் நாமும் கலந்து பங்கெடுத்துக் கொள்கின்றோம். அலையின் கொடுங்கரங்களில் சிக்குண்டு தமது அங்க அவையங்களை இழந்து தவிக்கின்ற அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.
கடந்த 26 டிசம்பர் 2004, தமிழ் பேசும் மக்களின் வரலாற்றில் என்றும் மறக்கப்பட முடியாத வடுக்களைத் தந்த நாளாகும். அன்றைய நாளின் காலைப்பொழுதில் ஒரு சில நொடிகளில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழந்து போனார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுக்கு உள்ளானார்கள். 3,44,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளானார்கள். தமிழர்களின் கரையோரக் கிராமங்களும் நகரங்களும் பெரும் அழிவிற்கு உள்ளாகியிருந்தன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட அந்தக் கடலடிப் பூகம்ப அதிர்வு இந்து மாகடலின் அணைப்பில் இருந்த சுமார் பத்து நாடுகளில் இத்தகைய மனிதப் பேரவலங்களை ஏற்படுத்தியிருந்தன. இலங்கைத்தீவிலும், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் அழிவுகளைச் சந்தித்திருந்தனர். ஒரு புறத்தே ஏனைய மதத்தவர்களையும் இனத்தவர்களையும் அழித்தொழிக்கும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டபடியிருந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அணைப்பில் இருந்த அவ்வின மக்களையும், மறுபுறத்தே பேரினவாதப் படைகளின் ஆக்கிரமிப்பில் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் நித்தமும் போராட்டம் நடத்தி வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே இந்தப் பெரும் மனித அவலம் இன, மத, மொழி பேதமின்றி அனைவருக்கும் பொதுவாகவே நடந்தேறியது.
சுனாமிப் பேரலைகள் பெரும் மனித அவலத்தை உண்டுபண்ணி இருந்தாலும் மனிதர்களிடையே முன்னெப்போதும் இல்லாதளவு மனிதாபிமான உணர்வையும் உண்டுபண்ணியது. அவலம் நிகழ்ந்த மறுகணமே அதை ஊடகங்கள் உலகின் மூலை முடுக்கெங்கும் சக மனிதர்களிடம் எடுத்துச்சொல்ல மனித குலத்தின் மனச்சாட்சியை அது எல்லா வேற்றுமைகளுக்கும் அப்பால் உசுப்பிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்குகொண்டு அவர்களுக்கு மறு வாழ்வளிப்பதற்கு உலகமே ஓரணியில் திரண்டுநின்ற உன்னதமான வரலாற்றை மனுக்குலம் கண்டது.
சுனாமி அலைகள் மனுக்குலத்தின் மனச்சாட்சியை உசுப்பிய அளவிற்குச் சிங்கள பௌத்த அடிப்படைவாதச் சித்தாந்தத்துள் மூழ்கிக் கிடக்கும் சிறிலங்கா அரசின் மனச்சாட்சியை அதனால் தட்டியெழுப்ப முடியவில்லை.
தமிழ்பேசும் மக்களை அழித்தொழிக்கும் தனது செயற்திட்டத்திற்கு இயற்கை தந்த அரிய வாய்ப்பாக அது தமிழ் மக்களின் மீதான சுனாமித் தாக்கத்தைக் கருதியது. பல்லாயிரக்கணக்கில் தமிழ்பேசும் மக்கள் இறந்து கிடப்பதையும் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதையும், அவர்களது வீடுகளும் அவர்களுக்கான பாடசாலைகள், வைத்தியசாலைகள், அலுவலகங்கள் அனைத்தும் நிர்மூலமாகிக் கிடப்பதையும், இலட்சக்கணக்கில் அவர்கள் இடம்பெயர்ந்து நிற்பதையும் கருத்தில் எடுக்கத் தவறிய சிறிலங்கா அரசு தமிழர் தலைமையும், அவர்களது படை பலத்தின் பேரங்கமான கடற்படைப் பலமும் அழிந்தொழிந்து விட்டதாகக் கற்பனையில் திளைத்துக் குதூகலித்துக்கொண்டது. அவ்வாறான செய்திகளே சிறிலங்கா தேசத்தின் ஊடகங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. சிங்கள பேரினவாதம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களை மேலும் வருத்தத்தக்க வழிவகைகளை தேடிக்கொடுத்தது.
பெரும் அழிவிற்குள்ளாகியிருந்த தமிழ்பேசும் மக்களின் உடனடி மனிதாபிமான உதவிகள் மட்டில் சிறிலங்கா அரசு துளியளவு அக்கறையும் காட்டவில்லை. இலங்கைத் தீவின் மொத்தமான சுனாமி அழிவுகளில் மூன்றில் இரண்டு பங்கான அழிவுகளைச் சந்தித்த தமிழ் பேசும் மக்கள் விடயத்தில் பாராமுகம் காட்டிய சிறிலங்கா அரசு ஒட்டுமொத்தமாக வந்த சர்வதேச உதவிகளையும் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கே திருப்பியது. மீட்பு நடவடிக்கையில் உதவுவதற்கு வந்த பல்வேறு நாடுகளின் படைகளையும், தொண்டர்களையும் பயன்படுத்திச் சிங்களப் பகுதிகளை மீளமைப்புச் செய்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாகச் செயற்பட்டது.
தமிழர் தேசத்தில் தமிழ் மக்களின் காவலர்களான விடுதலைப் புலிகள் மட்டுமே மீட்புப் பணியிலும் நிவாரணப் பணியிலும் ஈடுபட வேண்டியிருந்தது. தனிநாட்டுக்கே உரித்தான உள்ளகக் கட்டுமானங்களை நிறுவி ஒரு நிழல் அரசாங்கத்தை நடாத்திக்கொண்டிருக்கும் எமக்கு மீட்புப் பணிகள் சிக்கலாக இருக்கவில்லை. மிகவும் விரைவான முறையில் எமது கட்டமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டன. மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இறந்த மக்களினது உடல்கள் விரைவாக மீட்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உடனடியாக ஆரம்பித்தது.
தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதியிலும் எமது படையணிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. மக்களை மேலதிக துன்பங்கள் எதுவுமே சந்திக்க விடாது நாம் காத்து நின்றோம். பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக தமிழர் தாயக மீட்பு நடவடிக்கைகள் அமைந்தமை உலகமறிந்த விடயமாகியது. அத்துடன் தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த நிர்வாகக் கட்டமைப்புக்களின் நேர்த்தியை சர்வதேச சமூகம் கண்டு பாராட்டியது.
இந்நிலையிலே எம் மக்களின் கண்ணீர் துடைக்க வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழ்பேசும் எமது உறவுகள் பேருதவி புரிந்தனர். உணர்வு பூர்வமான அந்த மக்களின் நிதிப்பங்களிப்பும் பொருட் பங்களிப்பும் எமது மக்களின் பேரவவலத்தைத் தணிக்கப் பெரும் பங்களித்தது.
மேலும் பல்வேறு சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் தமது உடனடி உதவிகளை விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டமைப்புக்கள் ஊடாக வழங்குவதற்கு முன்வந்தன. இத்தாலி அரசும், தமிழ் மக்களுக்கான தனது உடனடி உதவிகளை விடுதலைப் புலிகளிடம் வழங்கியது. இவை அவலப்பட்டு நின்ற மக்களைக் காப்பதில் பெரும் பங்காற்றிய போதும் சிறிலங்கா அரசினூடாக வழங்கப்பட்ட சர்வதேச உதவிகள் துளியளவும் தமிழர் தாயகத்திற்கு அனுமதிக்கப்படாது சிங்களப் பகுதிகளுக்குத் திருப்பப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழர் தாயகத்தின் வட பகுதியிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்களுக்காக அனுப்பிவைக்கப்பட்ட உதவிப் பொருட்களைத் தாங்கிய பாரஊர்திகள் அரச படையினராலும். ஜே.வி.பி.யினராலும் வழிமறிக்கப்பட்டு சிங்களப் பகுதிகளுக்கு அபகரித்துச் செல்லப்பட்டன.
பேரினவாத அரசினுடைய இத்தகைய அநாகரிகமான நடத்தை தமிழ் மக்களுக்கு பெரும் சீற்றத்தினை அளித்திருந்தது. இருப்பினும் நிவாரண உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆறு மாதங்களுக்கு மேல் அவர்கள் காத்திருந்தார்கள். இறுதியாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் ஓர் பொதுவான அமைப்பொன்றை நிறுவி அதனூடாக உதவித்திட்டங்களை முன்னெடுக்கலாம் என சர்வதேசம் யோசனையொன்றை முன்வைத்தது.
எமது மக்களின் அவல வாழ்க்கைக்கு சிறிதளவேனும் விடிவு கிட்டுமென எதிர்பார்த்து நாம் அக்கட்டமைப்புக்கு இணங்கி அதற்காக செயற்பட்டோம். பொதுக்கட்டமைப்பு நிறுவப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு உடன்பாட்டைக் கூட சிங்கள பேரினவாத சமூகம் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இக்கட்டமைப்பினை இலங்கையின் அரசியல் யாப்பிற்கு முரணானதென சிறிலங்கா அரசின் உயர் நீதிமன்றம் தடைசெய்தது. எமது மக்களுக்கு தெரிந்த சிறிய ஒளிக்கீற்றும் தென்படாது போயிற்று.
சுனாமியின் அவலங்களுக்குள்ளான தமிழ்பேசும் மக்கள் சிறிலங்கா அரசினால் புறக்கணிக்கப்பட்டதை சர்வதேச சமூகம் இதன் மூலம் நன்கு அறிந்துகொண்டது. அழிவுகளைப் பார்வையிடுவதற்கு நேரடியாக இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச்செயலாளர் திரு.கோபி அனான், மற்றும் சுனாமி மீளமைப்பு நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் விசேட பிரதிநிதி திரு. பில் கிளின்டன் ஆகியோர் பேரழிவைச் சந்தித்த வடபகுதிக்குச் செல்வதற்கு விருப்பங்கொண்டிருந்த போதும் சிறிலங்கா அரசால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இத்தனையையும் வெள்ளிடை மலையாக சர்வதேச சமூகம் அறிந்திருந்தும் 'இறமையுள்ளஅரசு' என்ற சொற்பதத்தினுள் அவை அனைத்தும் தலையை மறைத்துக்கொண்டன. பாதிக்கப்பட்ட எத்தனையோ நாடுகள் விரைவாக தலைநிமிர, சிங்கள தேசம் கூட தனது மக்களுக்கு உதவித்திட்டங்களை அள்ளிக் குவித்து அவர்களை சொந்த வாழிடம் அமைத்து குடியேற்ற எமது தாயகத்தில் மட்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள் தற்காலிகக் குடியிருப்புக்கள் என்னும் நிலையிலிருந்து சிறிதளவு முன்னேற்றத்தினையும் எட்டவில்லை. வீடமைப்பு, அழிவுண்ட நகரங்களை மீள் புனரமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் எமது மக்களுக்கு மறுக்கப்பட்டவை ஆகிவிட்டன. சிறிலங்கா அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளும் துணைபோயின.
சிறிலங்கா பேரினவாதம் அதோடு நின்று விடவில்லை. சுனாமியின் கோர வடுக்களை எமது மக்கள் ஆற்றிக் கொள்வதற்கு முன்பாகவே தனது கொடூரமான ஆக்கிரமிப்பினை ஆரம்பித்துவிட்டிருந்தது. போர் நிறுத்த உடன்பாடொன்றிற்கு மதிப்பளித்து நாம் அமைதி காத்து வந்திருந்த போதும் அதனை எமது இனத்தின் பலவீனமாக கருதி தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டது. ஏற்கனவே கடும் யுத்தத்தின் பிடியிலும் பின்னர் சுனாமியின் கோரத் தாண்டவத்திலும் சிக்கித்தவித்த மக்களின் வாழ்வை மீண்டும் கொடும் யுத்தத்தின் மூலம் சின்னாபின்னமாக்கி விடும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு பகிரங்கமாக ஆரம்பித்து விட்டிருக்கின்றது.
இதனால் எமது மக்களின் சொந்த வாழிடங்கள் மீண்டுமொரு பாரிய பேரினவாத சுனாமிக்கு இரையாகி வருகின்றது. தாங்கள் இழந்து விட்ட சொத்துக்களை சிறுகச் சிறுகச் சேமித்து எமது மக்கள் உருவாக்கிய இயல்பு நிலையை இன்று இழந்து தவிக்கின்றார்கள். இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் தொழில் புரியும் உரிமை பறிக்கப்பட்டு அன்றாட சீவியத்திற்கு வழியின்றி பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அவர்கள் கடலிலே இறங்குவதற்கே அஞ்சுகிறார்கள். அன்றாடம் அம்மக்களின் சடலங்கள் கரையொதுங்குவது அங்கே வழமையாகிவிட்டது.
ஆக்கிரமிப்பு படைகளின் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இன்று தமிழர் தாயகத்தில் சுனாமியினால் வாழ்கையை தொலைத்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தங்களுடைய நிலங்களையும் தொலைத்து நிர்க்கதியாக்கி விடப்பட்டிருக்கிறர்கள். இந்த அவல நிலையை எந்தச் சர்வதேச சமூகமுமோ தடுத்து நிறுத்த முன்வரவில்லை. மாறாக போரை முன்னெடுக்கும் இனவாத அரசிற்கு துணைபோவதாகவே அவற்றின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தமிழர் தாயகத்தில் வடக்கே வடமராட்சி கிழக்குப் பகுதியும், திருகோணமலையில் சம்பூர், வாகரை பிரதேசங்களும் தற்போதைய இனவாதச் சுனாமியால் மக்களை இழந்து நிற்கின்றன.
இயற்கையின் சீற்றத்திலும் இனவாதச் சீற்றத்திலும் இருந்து எமது மக்களை பாதுகாப்பதென்பது எமது தேசியத்தின் தலையாய கடமையாகின்றது. நிரந்தரமான வாழ்நிலையை எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதென்ற தமிழ் தேசியத் தலைமையின் ஒன்றுபட்ட முடிவே இவையனைத்திற்கும் தீர்வாக அமையும் என்பதையே கடந்துவந்த பாதைகள் எமது மக்களுக்கு தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. இனிவரும் பாரிய இயற்கைப் பேரனர்த்தங்களில் இருந்து எமது மக்களை எவ்விதமான இழப்புக்களுமின்றி பாதுகாக்குமளவிற்கு எமது தேசத்தினை விரைவிலே கட்டியெழுப்புவோம் . இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாம் இழந்துவிட்ட உறவுகளுக்கு ஆத்ம திருப்தியளிக்கும் காலப்பணியாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, December 26, 2006
இயற்கையின் சீற்றத்தையும் விடவும் இனவாத சீற்றம்...
Tuesday, December 26, 2006





