புயலின் மையமாய் புதுமைகள் படைத்தவர் மாமேதை அன்ரன் பாலசிங்கம்: யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் புயலின் மையமாய் புதுமைகள் படைத்தவர் மாமேதை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என்று யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அறிக்கை: சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. அவர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் என்றும் எப்போதும் நீங்காத நினைவுகளாக காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள் என்று தமிழீழத் தேசியத் தலைவரின் அரசியல் சித்தாத்தத்தை நெஞ்சமதில் நிறுத்தி அந்த வாழ்க்கையின் வழிநின்று வாழ்ந்து, வழிகாட்டியவர் செந்தமிழ்ச் செம்மல் தேசத்தின் குரல் மானிடத்தின் மாமேதை அமரர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத் தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்துக்கொண்டு அந்த உயரிய இலட்சியத்திற்காக பெரும் பணியாற்றிய ஒரு உன்னதமான உயர்ந்த மனிதனை இயற்கை பலிகொண்ட செய்தி தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஆழ்மனதில் ஒரு பூகம்ப அதிர்வாகவும் தமிழ்த் தேசிய ஆன்மாவை ஒரு உலுப்பு உலுப்பியிருக்கின்றது. நித்தம் நித்தம் அழிவுகளையும், அனர்த்தங்களையும், சாவையும், சவால்களையும் சந்தித்து வாழும் எம்மக்களை மீளாத்துயரங்களுக்குள் தள்ளியுள்ளது. தேசத்தின் விடியலுக்கு கட்டியம் கூறிய கண்ணியமானவர். இவரது இழப்பானது நான்கு பேர் இலேசாகப் பேசுகின்ற அல்லது நான்கு பேர் இலகுவாகக் கூறுகின்ற இழப்பல்ல மனித வரலாற்றின் ஈடு இணையற்ற இமாலய இழப்பாகும். பொன்மலர் நாற்றுமுடைத்தாயின் அதற்கு நிகர்வேறில்லை. பொன்னினால் செய்யப்பட்ட மலர் நற்வாசனையை அளிக்காவிட்டாலும் அதற்கு நிகர் வேறில்லை. அதேபோன்று பாலா அண்ணாவுக்கு நிகர் பாலா அண்ணா தான் என்பதை கூறிக்கொள்வதில் நாம் பெருமை அடைகின்றோம். கொண்ட கொள்கையில் தெளிவும், தளராத இலட்சிய உறுதியும், தீர்க்கதரிசனமான பார்வையும், சமூகவியல் கண்ணோட்டமும் ஆழமான மக்கள் நேயமும் அவரின் ஆளுமையை ஆட்கொண்டு புயலின் மையமாக நின்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆழமான ஆலோசனைகளை வழங்கியவர். அறிவும், ஆற்றலும், புலமையும், புதுமையும், ஆளுமையும், அஞ்சாமையும் கொண்ட அற்புதமான மாமேதை எவரையும் கவரும் சக்தி எந்த விடயத்தையும் புரிந்துகொள்ளும் புத்தி எதையும் தாங்கும் இதயம் இதனாற்றான். இன்று உலக அறிஞர்களின் மூதறிஞராக சொல்வாக்கிலும், செல்வாக்கிலும் தமிழீழ மக்களுக்கு மட்டும் இன்றி உலகவாழ் தமிழ் பேசும் மக்களிற்கும் பெருமையையும் பெறுமதியையும் தேடித் தந்தவர். தமிழன், தமிழன் நான் என்பதை உலகிற்கும் உணர்த்தியவர் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று எடுத்துரைக்கும் நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்த அவர் அஞ்சா அற்புத மனிதர். பந்த பாசங்களுக்கு அடிமைப்பட்டு பொருளுட்காய் ஆட்டிப்படைக்கப்படும் ஒரு பொம்மை, பொய்மை மனிதனல்ல. தமிழ் மக்கள் மீதும், தமிழ் மண் மீதும், தேசியத் தலைவர் மீதும் ஆழமான பற்றும் பாசமும் கொண்டவர். தழிழர் வாழ்விலும் வரலாற்றிலும் பின்னிப்பிணைந்த மாமேதை அமரர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் என்றும் எப்போதும் குன்றின் மேல் ஒளியாகவும், குவலயத்தின் ஒலியாகவும் என்றும் எம் தேசத்தின் குரலாகவும் திகழ்வார் என்ற அதி நம்பிக்கையுடன் அவர் தம்வழி தடம் பற்றி எமது இலட்சியப் போராட்டம் தலைவர் வழி தொடரும் என்ற உறுதியுடன், எமது ஆழ்ந்த அனுதாபங்களை எம் இனிய மக்களுக்கும் அவர் தம் துணைவியருக்கும் காணிக்கையாக்குகின்றோம். "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"





