அக்கரைப்பற்றில் மேசன் தொழிலாளி கருணாகுழுவினரால் சுட்டுக்கொலை! அக்கரைப்பற்றி;ல் மேசன் தொழிலாளி ஒருவர் கருணாகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று -7- வீரமகாளிஅம்மன் கோவில் வீதியில் வசித்து வரும்இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை நவரட்ணம் (வயது 23) என்பவரே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். நேற்று முன்தினமிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் இரவு உணவை உட்கொண்டிருந்தபோது இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கருணாகுழு உறுப்பினர்கள் இவரை அழைத்து சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். படுகாயமடைந்த இவர் அக்கரைப்பற்று அஷ்ரப் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவரது தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அடிக்கடி இவர் தனது கட்டிட வேலைநிமித்தம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் சென்றுவருபவர் என்றும் இதனாலே இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாமெனவும் அப்பிரதேசவாசியொருவர் தெரிவித்தார். இவரது கொலை தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





