சிறிலங்கா, சோமாலியா அகதிகளுக்கு அமெரிக்க அரச தலைவர் 5.215 மில்லியன் நிதி ஒதுக்கீடு சிறிலங்கா, சோமாலியா அகதிகளுக்கு உதவ 5.215 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ் ஒதுக்கியுள்ளார். சிறிலங்கா, சோமாலியா நாடுகளின் இனப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டு அகதிகளான மக்களுக்கு உதவ இந்த நிதி பயன்படுத்தப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சொந்த நாட்டின் போர்ச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டு தப்பித்த அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்பாராத அவசரத் தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டுமென வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா றைசுக்கு கடந்த வியாழக்கிழமை எழுதிய அறிக்கையில் அரச தலைவர் புஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதியை அனைத்துலக, அரசு சார்ந்த, அரசு சாராத நிறுவனங்களின் தேவையைப் பொறுத்து அவர்களுக்கு உதவப் பயன்படுத்தலாம். மக்கள் தொகைப் பிரிவின் அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்தலாம் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் புஸ் தெரிவித்துள்ளார்.