Thursday, November 23, 2006

வடக்கு - கிழக்கிற்கான விசேட ஏற்பாட்டை குழப்ப வேண்டாம்'

வடக்கு - கிழக்கிற்கான விசேட ஏற்பாட்டை குழப்ப வேண்டாம்' இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொண்டு இணக்கப்பாட்டை வென்றெடுப்பதற்கு வடக்கு, கிழக்கிற்கான விசேட ஏற்பாடுகள் அடிப்படையான அம்சம் என்றும் அதனை குழப்ப வேண்டாமென்றும் டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் இணைத் தலைமைகள் வலியுறுத்தியுள்ளன. வாஷிங்டனில் இடம்பெற்ற இரு நாள் சந்திப்பின் பின்னர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இதனைச் சுட்டிக் காட்டியுள்ள இணைத் தலைமைகள், ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சி யான ஐ.தே.க.வுக்கும் இடையிலான பொது உடன்படிக்கையானது நம்பிக்கையையூட்டும் அதிகாரப் பகிர்வு யோசனையை கொண்டு வருவதற்கு இட்டுச் செல்ல வேண்டுமெனவும் அந்த உத்தேச யோசனை பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. அதேசமயம், இந்தியாவின் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை' இணைத் தலைமைகள் பாராட்டியுள்ளன. வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியக் குழுவின் பிரதித் தலைவர் ஆர்.எஸ். ஜாஸலுக்கும் இணைத் தலைமைகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கூட்டத்தின் பெறுபேறுகள் தொடர்பாக ஜாஸலுக்கு தெரிவிப்பதற்காகவும் அத்துடன், இந்திய அரசாங்கத்தின் அபிப்பிராயத்தையும் ஆதரவையும் பெற்றுக் கொள்வதற்காகவுமே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் ஆர்.நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார். இந்தியா மேற்கொண்டுள்ள பங்களிப்பையிட்டு நாம் நன்றி செலுத்துகின்றோம். அது மிகவும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பு என்பதுடன் சமாதானத்தையும் உறுதிப்படுத்துவதாகவும் அமையும் என்றும் பேர்ன்ஸ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார். நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி, ஐரோப்பிய ஆணைக்குழுவின் வெளிவிவகார பணிப்பாளர் நாயகம் நேர்வி ஜோயுள் ஜேன் ஆகிய இணைத்தலைமைகளின் ஏனைய பிரதிநிதிகள் சார்பாக பேர்ன்ஸ் இந்தக் கருத்தை தெரிவித்தார். அதேசமயம், கணிசமான அளவு வன்முறைகளுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பென்றும் அந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பென்றும் அமெரிக்கா கொண்டிருக்கும் நிலைப்பாட்டை பேர்ன்ஸ் மீள உறுதிப்படுத்தியுள்ளதுடன் இலங்கையின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு,ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் உரிமை இலங்கை அரசுக்கு உண்டெனவும் குறிப்பிட்டுள்ளார். `இந்த விடயத்தில் நாம் நடுநிலையாக இல்லை' என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தருணமும் உள்ளது. நாங்கள் அவை தொடர்பாக வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், அவற்றுக்கு நாம் எதிரானவர்கள். கடந்த பல மாதங்களாக கணிசமான அளவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை உங்களுக்குத் தெரியும். பொதுமக்களுக்கு எதிராகவும் நிவாரணப் பணியாளர்களுக்கு எதிராகவும் இராணுவ பலம் பிரயோகிக்கப்பட்டிருப்பது பற்றிய விடயம் எமக்கு அதிகளவு கவலையை ஏற்படுத்திய விடயமென்றும் பேர்ன்ஸ் குறிப்பிட்டார். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குழுவொன்றை அமைக்குமாறு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியது. அரசும் அதனைச் செய்வதற்கு இணங்கியது. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே, அமெரிக்கா ஆகியவை ஒன்றிணைந்து இந்தியா போன்ற நாடுகளுடன் சேர்ந்து செயற்பட்டு செல்வாக்கைப் பிரயோகிக்க முடியுமென வாஷிங்டன் கருதியதுடன் இதன்மூலம் சில சிபார்சுகளை முன் வைக்கலாம் என்றும் எதிர்பார்த்தது. இந்தச் சிபார்சுகள் அரசாங்கத்துக்கு உதவியாக அமைவதுடன் யுத்த நிறுத்தத்தையும் சமாதானப் பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள உதவியாக அமையும் என்றும் பேர்ன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். யசூசி அகாசி இதேவேளை, இங்கு கருத்து தெரிவித்திருக்கும் யசூசி அகாசி இந்தியா இணைத் தலைமையில் இடம்பெறவில்லையாயினும் சமாதானத்திற்காக தங்களுடன் கைகோர்த்து செயற்படுவதாக கூறியிருக்கிறார். நிதி உதவி மூலம் உதவி வழங்கும் நாடுகள் சம்பந்தப்பட்ட தரப்பினர் மத்தியில் கணிசமான அளவுக்கு செல்வாக்கை செலுத்தியிருப்பதாகவும், அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் யதார்த்த பூர்வமான முறையில் பேச்சை ஆரம்பிப்பதற்கு தூண்டுவதற்காக `ஊக்குவிப்புகள்' தொடர்பாக பொருத்தமான முறையில் ஜப்பான் மீளாய்வுகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், ஏனைய நாடுகளைப் போன்று புலிகளுடன் ஜப்பான் தொடர்புகளை துண்டிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், சமாதானத்தை வென்றெடுப்பது சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பொறுத்த விடயமெனவும் எங்களால் ஆதரவளிக்க முடியும் ஆனால், சமாதானத்தை உருவாக்கும் பொறுப்பு அவர்களுடையது என்றும் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.