அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் அரசாங்கம் குற்றச்சாட்டு
[Thursday November 23 2006 ] [virakesari.lk]
ஆயுத மோதல்களின் போது பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட தூதுவர் அலன் றொக், மற்றும் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்டொட்டீர் ஆகியோர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர். என்று அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் விஷேட தூதுவர் அலன் ரொக் சிறுவர்கள் கட்டத்தப்படுகி“ன்றமை தொடர்பில் படையினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறுதாம் கோரியுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூட்டத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் அரசாங்கப் படையினரின் ஒத்துழைப்புடன் சிறுவர்கள் பலவந்தமாக குறிப்பிட்ட ஒருஆயுதக்குழுவினால் கடத்தப்பட்டு படையணிகளுக்குச் சேர்க்கப்படுவது குறித்து காரசாரமான அறிக்கையொன்றினை அலன் றொக் தனது இலங்கை விஜயத்தின் போது வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் அரசாங்க படைகள் சிறுவர்களைக் கடத்துவதற்கு மேற்குறிப்பிட்ட ஆயுதக்குழுவிற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் கடத்தல்களில் நேரடியாக ஈடுபடுவதாகவும்கூட இவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தனது இந்தக்குற்றச் சாட்டை நிரூபிப்பதற்கு தன்னிடம் வலுவான ஆதாரம் உள்ளதாகவும் அவர் ஆணித்தரமாக தெரிவித்திருந்தார். படையினர் மீது அவர் சுமத்திய இந்தக் குற்றச்சாட்டை நாம் மறுக்கின்றோம். இந்தக்குற்றச் சாட்டுகள் தொடர்பாக அவரால் நிரூபிக்க முடியுமானால் அந்த ஆதாரங்களை எம்மிடம் சமர்ப்பிக்கும்படி நாம் கோரியிருந்தோம். ஆயினும் இதுவரைக்கும் அவர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் எதையும் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை.
பொய்க்குற்றச்சாட்டுகளையே அவர் சுமத்தியுள்ளார் என்பதை இதிலிருந்தே விளங்கிக்கொள்ள முடியும்.தன்னிடம் நம்பத்தகுந்த வலுவான ஆதாரங்கள் உள்ளது எனக்கூறினார் அவர். நாம் இப்பொழுது கேட்கிறோம் எங்கே அந்த நம்பத்தகுந்த வலுவான ஆதாரங்கள். அப்படி ஏதாவது அவரிடம் இருந்தால் எம்மிடம் அவற்றை கையளித்திருக்கலாம். படையினரைக் களங்கப்படுதும் நோக்கத்திலேயே அவர் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அலன் றொக் கனடாவில் சுகாதார அமைச்சராக முன்னர் பதவி வகித்த போது விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் தமிழ் கலாச்சார நிகழ்வுகள் என்னும் போர்வையில் அங்குள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளில் இவர் கலந்து கொண்டுள்ளார்.
இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கனடிய புலனாய்வுப் பொலிஸார் இவரை எச்சரித்தும்கூட இவர் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இவரது பின்புலம் இவ்வாறு இருக்கும் போது இவர் மீதான நம்பகத்தன்மை எவ்வாறு இருக்க முடியும்.போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பதில் பேச்சாளராக செயற்படும் ஹெலன் ஒலஃப்டொடீர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக செயற்படுவதோடு நாடகங்களுக்கு திரைக்கதை எழுதுவதைப் போன்று புலிகளுக்குச் சார்பான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்.
யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களை மட்டும் கண்காணிக்க நியமிக்கப் பட்டுள்ள இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பதில் பேச்சாளராக தற்சமயம் செயற்படும் ஹெலன் ஒலஃப்டொடீர் மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் புலிகளுக்கு பக்கச் சார்பான அறிக்கையிடல்களை மேற்கொள்வதோடு கண்காணிப்புக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறிச் செயற்படுகின்றார்.
யுத்த நிறுத்த ஒப்பந்த்தை ஏதாவது ஒரு தரப்பு மீறும்போது அந்த மீறல்கள் குறித்து அறிக்கையிட மட்டுமே கண்காணிப்புக்குழுவிற்கு அதிகாரங்கள் உள்ளது. ஆனால் இன்று ஹெலன் அவரின் அதிகாரல்களை மீறிச் செயற்படுகின்றார்.தொலைக்காட்சி நாடகங்களுக்கு திரைக்கதை அமைப்பவர்கள் போன்று எழுந்தமானமாக தனது அறிக்கைகளையும் பேச்சுக்களையும் புலிகளுக்கு சார்பாகவே தொடர்ந்து முன்வைத்து வருகின்றார். கண்காணிப்புக் குழவினருடன் எமக்கு முன்னரும் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்தன.
முன்னர் கண்காணிப்புக்குழுவின் தலைவராக உல்ப் ஹென்றிக்ஸன் பணியாற்றிய போதும் அவரும் இவ்வாறே பல அறிக்கைகளை முன்வைத்தார். ஆயினும் இவ்வாறான பிரச்சினை எழுந்த போது அவரை நாம் அழைத்துப் பேசி இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டோம்.
Thursday, November 23, 2006
அலனும் ஹெலனும் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்
Thursday, November 23, 2006





