Monday, October 30, 2006

விடுதலை புலிகளின் கோரிக்கைக்கு விரைவில் .....

விடுதலை புலிகளின் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் பதில் வழங்கும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஏ9 வீதி திறப்புத் தொடர்பான விடுதலை புலிகளின் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் பதிலை வழங்கும். ஏ9 வீதி தொடர்பான தற்காலிக பிரச்சினையை புலிகள் குழப்பிவிட்டனர் என்று அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார் ஜெனிவா பேச்சுக்கள் தோல்வியடைந்தமைகுறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் ஜெனிவா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. ஆனால் புலிகள் நிரந்தரத் தீர்வை விடுத்து ஏ 9 வீதியை திறப்பது தொடர்பான தற்காலிக பிரச்சினையை முன்வைத்து பேச்சை குழப்பிவிட்டனர். இது நியாயமற்ற விடயமாகும். புலிகள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கவேண்டும். அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால் புலிகள் ஏ 9 வீதி திறப்பது தொடர்பான விடயத்ததைப்பற்றி மட்டுமே பேச முயற்சித்தனர். இவ்வாறான முக்கிய பேச்சுவார்த்தையை தற்காலிக விடயங்களை முன்வைத்து புலிகள் குழப்பியமை தொடர்பாக அரசாங்கம் கவலையடைகின்றது. புலிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எண்ணவில்லை. அடுத்த கட்ட பேச்சுக்கான திகதியை நிர்ணயம்செய்ய அரசாங்கம் தயாரான போதும் புலிகள் அதற்கு இணங்கவில்லை. ஏ9 வீதியை திறந்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்க முடியும் என்று புலிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். எனவே, புலிகளின் கோரிக்கை குறித்து விரைவில் அரசாங்கம் பதிலை வழங்கும் என்பதனை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்பதனையும் வலியுறுத்திக்கூறுகின்றோம்.