வவுனியா பூந்தோட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிங்களவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மண் அகழும் இயந்திர சாரதியான பிட்டிக்கலவை சொந்த இடமாகக் கொண்ட லண்டுகேனவைச் சேர்ந்த பிரதீப் ஜெயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் கூட இருந்த வசந்தரூபன் என்ற தமிழ் இளைஞர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியாவில் பூசகர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் சிறீநகர் அம்மன் ஆலய பூசகரான ஜெயநாத ஐயர் சிவபாத சர்மாவின் வீட்டுக்கு சென்ற ஆயுததாரிகள் பூசகரை அழைத்து சிறிது நேரம் உரையாடி பின்னர் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட பூசகர் மருத்துவமனையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.





