Monday, October 30, 2006

24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை.

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் 24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை. யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை இராணுவத்தினர் போர் ஒத்திகையொன்றில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிவடக்கில் பலாலியை அண்டிய தொண்டமனாறு கடல்நீரேரிப்பகுதி மற்றும் வளலாய் கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சரமாரியமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக இப்பிரதேசங்களையண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொண்ட போர் ஒத்திகையின் போது ஏற்பட்ட பாரிய சத்தங்களே இவையெனத் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த ஒத்திகையில் கடற்படை மற்றும் தரைப்படையினர் இணைந்து ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொண்சேகா யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் இராணுவக் கட்டளைத் தளபதிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்திச் சென்றபின்னர் இவ்வாறானதொரு பாரிய போர் ஒத்திகை ஒன்று பலாலியில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததால் இவ்வாறான இராணுவ ஒத்திகைகள் மீண்டும் ஒரு யுத்தம் குறித்த அச்சத்தை குடாநாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.