Saturday, May 05, 2007

சிறிலங்காவின் உயர் புலனாய்வுத்துறை அதிகாரியை காணவில்லை.

[சனிக்கிழமை, 5 மே 2007]

சிறிலங்கா இராணுவத்தின் உயர் புலனாய்வுத்துறை அதிகாரியான கப்டன் எஸ்.எச்.நிலாம் காணாமல் போயுள்ளார்.

இந்தனேசியிவாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்புத்துறையில் பணியாற்றிய நிலாம், கடந்த மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளார்.

ஜகர்த்தா தூதரகத்தில் உள்ள மேலும் ஒரு உயர் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிலாம் அவரது மனைவி மூன்று பிள்ளைகள் ஆகியோர் கடந்த ஏப்ரல் 23 ஆம் நாளில் இருந்து காணாமல் போயுள்ளதாக தேசிய புலனாய்வுத்துறை அறிவித்துள்ளதாக உயர் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கு பதில் தூதுவராக கடமையாற்றும் தமிழ் அதிகாரி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இந்தோனேசியாவிற்கான தூதுவராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா சிறிலங்காவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் இன்று வரை தனது பதவியை ஏற்கவில்லை. ஜனக பெரேரா கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் சிறிலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் எதிர்வரும் செப்ரம்பர் மாதமே முடிவடைய உள்ள நிலையில் அவர் அழைக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்தோனேசியாவின் தேசிய புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக பல தகவல்களை நிலாம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் சோதனையிடப்பட்ட கண்டி மிலேனியம் சிற்றி இல்லத்திற்கு கப்டன் நிலாம் பொறுப்பாளராக கடமையாற்றி இருந்தார். இந்த முகாமில் இருந்தே வடக்கு - கிழக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஆழ ஊடுருவும் படையணிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

இவரது உயிருக்கு விடுதலைப் புலிகள் குறிவைத்ததைத் தொடர்ந்து, அவரது முக்கியத்துவம் உணர்ந்த சிறிலங்கா அரசாங்கம், நிலாமை பாதுகாக்கும் பொருட்டு தாய்லாந்திற்கு அனுப்பியிருந்தது. பின்னர் அவர் இந்தோனேசியாவிற்கான பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.