[புதன்கிழமை, 2 மே 2007]
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தின எழுச்சிப் பேரணியில், 3000 வரையான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டு தமிழீழ தேச விடுதலையின் உரிமைக் குரலை வெளிப்படுத்தினர். உலகத்தொழிலாளர் தினமான இன்று நோர்வேயின் பல்வேறு நகரங்களிலும் நோர்வேஜிய தொழிற் சங்கக் கூட்டமைப்பு, தொழிற்கட்சி உட்பட்ட நோர்வேஜிய அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட மக்கள் அமைப்புக்கள் தொழிலாளர் தினத்தை அடையாளப்படுத்தி, ஒருமைப்பாட்டையும் உரிமைகளையும் வலியுறுத்தி பேரணிகளில் பங்கேற்றனர்.
தமிழீழ மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் நியாயப்பாட்டையும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் இன்று தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் மனிதப் பேரவலங்களையும் வெளிப்படுத்தும் வகையில் மேதினப் பேரணியில் நோர்வே வாழ் தமிழீழ மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள், இளையோர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என அகவை பேதமின்றி 3000 வரையான மக்கள் அணிதிரண்டு வந்திருந்தனர்.
பர்கன், ஸ்ரவாங்கர், துரொண்கைம் ஆகிய நோர்வேயின் ஏனைய நகரங்களில் நடைபெற்ற மே தின எழுச்சிப் பேரணிகளிலும் தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழர் தாயகத்தின் உரிமைக்குரலை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

02. அனைத்துலக சமூகம் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்கவேண்டும்.
03. தமிழ் மக்கள் உரிமையுடன் வாழ ஒரு தாயகம் வேண்டும்.
04. போர்நிறுத்தமென்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்பு, மனித உரிமை மீறல்கள், வன்போர் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
05. தமிழ்த் தேசிய இனத்தின் கௌரவமான வாழ்வுரிமைக்கான விடுதலைப் போராட்டம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்
06. தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் எழுச்சிப் பேரணியில் வலியுறுத்தப்பட்டன.
அனைத்தலக சமூகத்தின் பாராமுகத்தினை வெளிப்படுத்தும் சித்திரப்படம் பதிக்கப்பட்ட, இலங்கைத்தீவின் சமகால நிலைமைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் நோர்வேஜிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
அத்தோடு தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு ஏற்படுத்தியிருக்கும் மனிதாபிமான அவலங்களையும் நெருக்கடிகளையும் எடுத்துரைக்கும் நோக்கில், நோர்வேஜிய மொழியில் உருவாக்கப்பட்ட 'நோட்டம்" எனும் இதழ் நோர்வேஜிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்மையும் குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள சமாதான முயற்சியின் தோல்வி, எழுத்தில் மட்டும் உயிர்வாழும் போர்நிறுத்த உடன்படிக்கை, சமகால அரசியல் நிலைமைகள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் போன்ற பல்வேறு விடயங்கள் நோட்டம் இதழின் உள்ளடக்கங்களாகும்.
ஒஸ்லோவில் நோர்வேஜிய அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு பின்னணியைக் கொண்ட மக்கள் சமூகங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்றைய பேரணிகளில் தமிழ் மக்களின் பேரணியே பெருந்திரளான மக்கள் பங்கேற்ற பேரணியென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-ரூபன்-
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.