Wednesday, May 02, 2007

சுதந்திரக்கடசியின் தீர்வுத்திட்டத்தை விவாதிப்பதில் அர்த்தமில்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன்.

[புதன்கிழமை, 2 மே 2007]


சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அரசியல் கட்சியான சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றப் போவதில்லை எனவும், அது நிராகரிக்கப்பட வேண்டியது எனவும் தமிழ் அரசியல் கடசிகள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் ஏப்ரல் 30 ஆம் நாள் நடைபெற்ற மேதின பேரணியின் போது சுதந்திரக்கட்சி தனது தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அந்த திட்டத்தில் தற்போதைய மாகாண சபைகள் மறைந்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டிருந்தன.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த அந்த மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கையாள்வதற்கு என இன ரீதியான குறைகேள் அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் தீர்வுத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் 'இந்த தீர்வுத்திட்டம் ஒரு கேவலமான குப்பை' என தமிழ் மக்களின் பலம் பொருந்திய அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது:

அதிகாரங்களை பகிர்ந்தளிக்க சிங்கள அரசாங்கங்கள் மறுத்து வருவதனால் தான் எமது மக்கள் தனிநாடு கோரி பல தசாப்பங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் 75,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுதந்திரக்கட்சியின் திட்டம் மேலும் பின்னோக்கியதாகவே இருக்கின்றது எனவே அது குறித்து ஆராய்வது பயனற்றது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசாங்கம் புரிந்து கொள்ளாது விட்டால் இந்த நாடும் மக்களும் அதற்கான விலையை கொடுக்க வேண்டும். அதிகாரங்களை பகிர்ந்தளிக்க அரசாங்கம் மறுத்தால் தனிநாட்டை அமைப்பதனைத் தவிர எமக்கு வேறு மார்க்கங்கள் இருக்கப்போவதில்லை. எனவே போர் மேலும் தொடரும். எந்த ஒரு தமிழ்க் கட்சிகளும் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஏற்கப்போவதில்லை.

அனைத்துக் கட்சிகளினாலும் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் ஆராயப்படும், சமாதானப் பேச்சு என்ற வரைமுறையிலாவது அது ஆராயப்படும் என அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கபட்ட மாகாணங்களின் அதிகாரங்களை விட தற்போது அரசாங்க்தினால் முன்மொழியப்பட்டுள்ள திட்டம் மிகவும் பின்தங்கியது என ஏனைய தமிழ் குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஐம்பது வருடங்களாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தில் பெருமளவான உயிர், உடமைகளை அவர்கள் இழந்துள்ளனர். எனவே ஒரு தன்னாட்சி அதிகாரங்கள் அற்ற எந்த ஒரு தீர்வையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவை மேலும் தெரிவித்துள்ளன.

இதனிடையே எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது திட்டத்தில் மாகாண சபைகளை பலப்படுத்தும் திட்டங்களை முன்வைத்திருந்தது. அதிகளவான மவட்டங்காளக பிரிக்கப்பட்டுள்ள அலகுகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது கடினமானது என அக்கட்சி அதில் தெரிவித்திருந்தது.

எல்லாக் கட்சிகினாலும் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களை ஆராயும் பொருட்டு அனைத்துக் கட்சிக்குழு விரைவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.