Monday, April 02, 2007

சிறிலங்கா அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.!!!

[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007]


சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை நாகர்கோவில் ஆட்சியாளர் (கலெக்டர்) அலுவலகத்துக்கு முன்னர் திரண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து முழக்கமிட்டனர்.

புதுடில்லியில் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரச தலைவருக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கோரியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திடீரென வந்த நடிகர் விஜகாந்துக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. காரணம் அளவுக்கதிகமாக மீனவர்கள் அங்கு ஆவேசமாக கூடியதால் நிலமை உக்கிரமானதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்துக்கொண்டனர்.

இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி பணியகத்தின் இயக்குநர் அருட்தந்தை சூசை அந்தோனி கூறியதாவது:

"'ஏற்கனவே இராமேஸ்வரத்தில் ஒரு மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சிறிலங்கா தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆளும் கட்சியான திமுக நடத்திய அந்த ஆர்ப்பாட்டத்தை மத்திய அரசாங்கமும் சரி, சிறிலங்கா அரசாங்கமும் சரி கண்டுகொள்ளவில்லை. அதனுடைய விளைவுதான் சிறிலங்கா கடற்படையால் நடத்தப்பட்டுள்ள இந்த படுகொலைகள்.
சார்க் மாநாட்டில் இந்தியா இந்த பிரச்சனையை எழுப்ப வேண்டும். இலங்கையுடனான ராஜாங்க ரீதியிலான உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும். தவிரவும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கும் முகமாக இந்த கொலை பாதகத்தின் பழிகளை வேற்று அமைப்பினர் மீது சுமத்துவது பொறுப்பை தட்டிக்கழிக்கிற செயலாகும்.

மீனவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யா விட்டால், சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா கண்டிக்காது விட்டால் இந்த போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கிறேன்" என்றார் அவர்.
கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி பணியகத்தின் இயக்குநர் அருட்தந்தை சூசை அந்தோனி

கடந்த 23 ஆம் நாள் குமரி மாவட்டம் சின்னத்துறை, தூத்தூர் பகுதி மீனவர்கள் ''சிவப்புச் சூரியன்" என்கிற படகில் தங்கு தொழில் செய்ய கடலுக்கு புறப்பட்டார்கள். குமரி முனையில் இருந்து முப்பதைந்து நொட்டிகல் கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன் பிடித்த்க்கொண்டிருந்த போது 29 ஆம் நாள் அதிகாலை அங்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் காக்கை குருவிகளை சுடுவதனைப்போல ஐந்து மீனவர்களைச் சுட்டுப் படுகொலை செய்தனர்.

இது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே அவர்கள் கடல் தொழிலுக்கு போகவில்லை. இன்று அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

நன்றி:புதினம்

1 comment:

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.