Monday, April 30, 2007

தொடரும் கொலைகளை தடுத்து நிறுத்தவும் ஊடக சுதந்திரத்தினை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007] நேற்றைய தினம் யாழ். உதயன் பத்திரிகையின் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் வைத்து துணை இராணுவக் குழுவால் கொல்லப்பட்ட தையும், வேலணையில் வைத்து 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் கண்டித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையின் விபரம் வருமாறு : இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து செல்வராச ரஐவர்மன் (24)மேற்படி செய்தியாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த காலத்தில் தினக்குரல், ஈழநாடு உட்பட பல நிறுவனங்களின் செய்தியாளராகக் கடமையாற்றியவர். உதயன் ஊடக நிறுவனத்தினை அடியோடு அழிக்கும் நோக்கில் நன்றாகத் திட்டமிடப்பட்ட அடிப்படையில் இந்த நிறுவனத்தின் மீதும் அதன் ஊழியர்கள், செய்தியாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. இந் நிறுவனத்தை பாதிக்கும் வகையில் இடம்பெற்ற ஐந்தாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். ஊடக சுதந்திரத்தினையும் , அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் வகையிலும், கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் அனைத்தையும் நசுக்கும் வகையிலுமே இக்கொலை இடம் பெற்றுள்ளது. யாழ் குடா நாட்டில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் வெளியே தெரியா வண்ணம் மூடி மறைக்கும் நோக்கில் அரச படைகளாலும் ஈ.பி.டி.பி என்னும் துணை இராணுவக் குழுவினராலுமே இக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வேலணைப் முடிப்பிள்ளையார் கோவிலின் தேர் முட்டியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்த அப்பாவிப் பொது மக்கள் ஆறு(6) பேர் இன்று பிற்பகல் கடற்படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஈவிரக்கமற்ற வகையில் மேற் கொள்ளப்பட்ட இப் படுகொலகைளை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான கொலைகளை நிறுத்தி குடாநாட்டிலுள்ள படைகளை மீளப்பெறுவதற்கு அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் ஓரளவு கடுமையாக கையாண்டு வரும் நிலையில் முன்னர் நடைபெற்ற கொலைகளை ஆராய்வதற்கென குழு ஒன்றை திருகோணமலைக்கு அனுப்பி உலக நாடுகளை ஏமாற்றி திருப்திப் படுத்த முயலும் மகிந்த அரசு மறுபுறத்தில் கொலைகளை தொடாந்த வண்ணமேயுள்ளது. அரசின் இந்த இரட்டை வேடத்தினை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் தொடரும் கொலைகளை தடுத்து நிறுத்தவும் ஊடக சுதந்திரத்தினை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன். செ.கஐந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.